காரைநகர் பாடசாலைகளிற்கு கொரோனா காலத்திலும் 6 இலட்சம் ரூபாய்கள் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது! 05.05.2021 (முழுமையாக வாசித்தால் மட்டுமே உண்மையை அறிந்து கொள்ளலாம்)
கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளிற்கென நிரந்தர வைப்பில் இடப்பட்ட ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் நிதியில் இருந்து 2020 மே முதல் இவ்வருடம் 05.05.2021 வரையிலான ஒரு வருட வட்டி பணமாக தலா ஒவ்வொரு பாடசாலைக்கும் 50 ஆயிரம் ரூபாய்கள் வீதம் 12 பாடசாலைகளிற்கும் 6 இலட்சத்திற்கும் மேற்பட்டளவில் நிதியுதவி கிடைத்துள்ளது.
2015ம் ஆண்டு கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் ஒவ்வொன்றிற்கும் தலா பத்து இலட்சம் வீதம் பன்னிரண்டு பாடசாலைகளிற்கும் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்களை வைப்பில் இட்டு வழங்கப்பட்டது. 05.05.2015 அன்று வழங்கப்பட்ட நிரந்தர வைப்புகளிற்கு வருடந்தோறும் தலா ஒரு இலட்சம் ரூபாய்கள் வீதம் 2020 கடந்த வருடம் மே மாதம் வரை கிடைக்கப்பெற்றிருந்தது. கடந்த வருடம் மே மாதம் வரை மொத்தம் 60 இலட்சம் ரூபாய்கள் வரை வட்டியாக காரைநகர் பாடசாலைகள் பெற்று வந்திருந்தன.
இந்த நிலையில் கொரோனா காலத்தில் நிரந்தர வைப்புக்கான வட்டி வீதம் குறைந்துள்ள நிலையிலும் 05.05.2020 - 05.05.2021 வரையான காலப்பகுதியில் காரைநகர் பாடசாலைகளிற்கு 6 இலட்சம் ரூபாய்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக பாடசாலைகள் கிரமமாக இயங்க முடியாத சூழ்நிலையிலும் அத்தியாவசிய மற்றும் சுத்திகரிப்பு தேவைகளிற்காக மேற்படி வட்டி பணத்தின் மூலம் பெறப்பட்ட நிதியினை பாடசாலை நிர்வாகங்கள் பயன்படுத்தியுள்ளதாக பாடசாலை அதிபர்கள் தெரியப்படுத்தியுள்ளார்கள்.
2015ம் ஆண்டு கனடா காரை கலாசார மன்றத்தின் திரு.பரமானந்தராசா தலைமையில் திரு.தீசன் திரவியநாதன் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் திரு.பரமானந்தராசா 10 இலட்சம் ரூபாய்களும் திரு.தீசன் திரவியநாதன் 20 ஆயிரம் டொலர்கள்(25 இலட்சம் ரூபாய்கள்) தனிப்பட்டளவிலும் வழங்கி மேற்படி நிரந்தர வைப்பு திட்டத்தினை செயற்படுத்தி வைத்திருந்தனர்.
மேற்படி திட்டத்திற்காக கனடா காரை கலாசார மன்றத்தின் பெயரில் இருந்த 20 ஆயிரம் டொலர்கள் வரை இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2015ம் ஆண்டு மேற்படி காரைநகர் பாடசாலைகளிற்கான ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இடப்பட்ட போது 13 முன்னாள் கனடா காரை கலாசார மன்ற நிர்வாக உறுப்பினர்கள் கனடா வாழ் காரைநகர் மக்களிடம் பலவிதமான வதந்திகளை பரப்பியதுடன், நிரந்தர வைப்பில் நிதி போடப்படவில்லையென்றும், தனிப்பட்ட சில நபர்களிற்காக வழங்கப்பட்டது என்றும், இந்த நிரந்தர வைப்பு நிதி ஒரு சில வருடங்களில் காரைநகரில் காணாமல் போய்விடும் எனவும் தெரிவித்ததுடன்,
அதனை காரணம் காட்டி 2015 முதல் 2017 வரையான காலப்பகுதியில் கனடா காரை கலாசார மன்றத்தினை செயற்பட முடியாதவாறு முடக்கியதுடன் பலவிதமான தடைகளை ஏற்படுத்தியதுடன் மட்டுமல்லாது பொதுக்கூட்டங்களில் கலகங்களை விளைவித்து அப்பட்டமான பொய்களை விதைத்து வந்தனர். 2015ம் ஆண்டு காரைநகர் பாடசாலைகளிற்கு நிதி வழங்கப்பட்டதையடுத்து வெளியான வரவு செலவு அறிக்கையினை எந்தவித ஆதாரமும் இன்றி நிராகரித்ததுடன் காரைநகர் பாடசாலைகளிற்கு ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் வைப்பில் இடப்படவில்லையென்பதையும் நம்ப வைத்து பொதுக்கூட்டத்தை போர்க்களமாக மாற்றியிருந்தார்கள்.
அன்றைய நிலையில் செயலாளர் என்ற வகையில் அன்றைய பொதுக்கூட்டத்தின் வீடியோ பதிவு என்னிடம் உள்ள நிலையில் அவற்றினை மீளவும் பார்க்கின்ற போது அன்றைய பொதுக்கூட்டத்தில் போது பொய்களை விதைத்தவர்கள் காலம் கடந்தாவது உண்மை என்னவென்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மை நிலைத்து நின்று தான் செய்ய வேண்டியதை செய்து கொண்டுதான் இருக்கும்.
காலங்களை கடந்தும் காரைநகர் பாடசாலைகளிற்காக நிரந்தர வைப்பில் இடப்பட்ட ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் பாடசாலைகளிற்கான நிரந்தர நிதியினை வழங்கி வருவதுடன் கடந்த 6 வருடங்களில் 65 இலட்சம் ரூபாய்கள் வட்டியாகவும் கொடுத்துள்ளது.
அது மட்டுமன்றி கடந்த வருடம் பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலை சுந்தரமூர்த்தி நாயனார் பாடசாலையுடன் இணைந்த போது பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலைக்காக நிரந்தர வைப்பில் இடப்பட்ட 10 இலட்சம் ரூபாய்களும் கல்வித்திணைக்கழத்திற்கு செல்லாது பாதுகாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடமாக கொரோனா காலத்தில் பாடசாலைகள் கிரமமாக நடைபெறாத போதிலும் பாடசாலைகளிற்கான வட்டி பணம் கிரமமாக கிடைக்கப்பபெற்றுள்ளது. அது மட்டுமன்றி 2017ம் ஆண்டுவரை திரு.பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபையினரினால் விட்டுச்செல்லப்பட்ட மேலும் 20 ஆயிரம் டொலர்களுடன் 2018ம் ஆண்டு திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் தலைமையிலான நிர்வாகத்தினால் 2018ம் ஆண்டு காரை வசந்தம் மூலமும் மன்ற அங்கத்தவர்கள் மூலமும் சேமிக்கப்பட்ட மேலும் 20 ஆயிரம் டொலர்கள் மொத்தமாக 50 இலட்சம் இலங்கை ரூபாய்கள் 2018 டிசம்பர் மாதம் இலங்கையில் கனடா காரை கலாசார மன்றத்தின் பெயரில் காரைநகர் மாணவர்களின் கல்விப்பணிக்காவென ஹட்டன் நாஷனல் வங்கியில் நிரந்தர வைப்பில் இடப்பட்டது.
அந்த 50 இலட்சம் வைப்பில் இருந்து 2019 கடந்த டிசம்பர் மாதம் வரை பெறப்பட்ட வங்கி வட்டி பணத்தின் ஊடாகவும் தொடர்ந்து 2020 டிசம்பர் வரையான இரண்டாம் ஆண்டுக்கான வட்டி பணத்தின் ஊடாகவும் கனடா காரை கலாசார மன்றம் இதுவரை ஆற்றிய கல்விப்பணிகள் இதுவரை யாரும் அறியாதது.
அது மட்டுமன்றி 2019ம் ஆண்டு கொரோனாவிற்கு முந்தைய காலப்பகுதியில் நடைபெற்ற ‘காரை வசந்தம் 2019’ நிகழ்வின் போது காரைநகர் அபிவிருத்தி சபையின் தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம்(Banker) பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். அதன்போது காரைநகர் பாடசாலைகளிற்கான ஐந்து திட்டங்களை முன்வைத்து காரை வசந்தம் நிகழ்வு நடைபெறுவதாகவும் ஐந்து திட்டங்களும் 2019 காரைவசந்தம் நிகழ்வின் மூலம் சேமிக்கப்படும் நிதி மூலம் நிறைவேற்றப்படும் எனவும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் அவர்களிடம் தெரிவித்திருந்ததுடன் ‘காரை வசந்தம் 2019’ விழா மலரிலும் ஐந்து திட்டங்களும் தெரியப்படுத்தப்பட்டிருந்தன.
தொடர்ந்து 2020ம் ஆண்டு ஆரம்பம் முதல் ஏற்பட்டுள்ள கொரோனா சூழ்நிலைகள் காரணமாக காரைநகரில் மாணவர்களின் கல்வி அவ்வப்போது தடைகள் ஏற்பட்டாலும் தொடர்ந்து நடைபெற்று வருவதையும் இலங்கையில் பொதுப்பரீட்சைகள் யாவும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதையும் யாம் அனைவரும் அறிந்து கொள்ளகூடியதாக உள்ளது.
இந்த நிலையில் கனடா காரை கலாசார மன்றம் கடந்த கொரோனா காலத்தில் செயற்பட முடியாத நிலையில் இருந்தாலும் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் பாடசாலைகளிற்கான வட்டிப்பணம், கல்விக்கான வட்டிப்பணம் மற்றும் 2019ம் ஆண்டு காரை வசந்தம் மூலம் சேமிக்கப்பட்ட நிதியின் மூலம் செயற்படுத்தப்பட வேண்டிய திட்டங்களை இன்னமும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லையென்பதையும் கனடா காரை கலாசார மன்றத்திற்கும் காரைநகர் அபிவிருத்தி சபைக்குமான உறவு போதியதாக இல்லையென்பதை அறியக்கூடியதாக உள்ளது.
காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு பாடசாலை மாணவர்களிற்கு தேவையான பயிற்சி புத்தகங்கள் இன்னமும் கிடைக்கவில்லையென்பதுடன், 2019ம் ஆண்டு காரைவசந்தம் நிகழ்வின் போது நிர்வாக சபையினரால் தீர்மானிக்கப்பட்டது போன்று காரைநகர் அனைத்து பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பாவனைக்காக காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்தில் Heavy Duty போட்டோ பிரதி இயந்திரம் வேண்டி கொடுக்கவும் தொடர்ந்து வருடந்தோறும் ஒரு இலட்சம் ரூபாய்கள் வரை அதற்குரிய பராமரிப்புக்காக வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்ட போதிலும், தற்போது சாதாரண ஒரு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், காரைநகர் அபிவிருத்தி சபையினரே அதற்கான பராமரிப்பு செலவினை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
2019ம் ஆண்டு கனடா காரை கலாசார மன்றத்தின் அழைப்பை ஏற்று கனடா வந்திருந்த காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் திரு.இரமநாதன் சிவசுப்பிரமணியம்(Banker) அவர்கள் தனது வேண்டுகோளாக கனடா காரை கலாசார மன்றத்திடம் குடிநீர் வழங்குவதற்காக மேலும் ஒரு தண்ணீர் பௌசர் பெறப்படவுள்ளதாகவும் அதற்காக கனடா காரை கலாசார மன்றம் கனடா வாழ் காரை மக்களிடம் நிதியுதவி பெற்று வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அந்த திட்டத்திற்காக வாக்குறுதி வழங்காத போதிலும் அதற்கான நிதி சேகரித்து வழங்க முயற்சிப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் கனடா காரை கலாசார மன்றம் தண்ணீர் பௌசர் வேண்டுவதற்காக காரைநகர் அபிவிருத்தி சபை எடுத்துக்கொண்ட தீர்மானத்திற்கு கனடா காரை கலாசார மன்றத்தினால் உதவ முடியாது என எழுத்தில் வழங்கியுள்ளதாகவும் அறியப்படுகின்றது. இந்த நிலையில் காரைநகர் அபிவிருத்தி சபையினர் தாம் திட்டமிட்டது போன்று மேலும் ஒரு தண்ணீர் பௌசரினை 45 இலட்சம் ரூபா செலவில் பெற்றுக்கொள்வதில் மாற்றம் ஏதும் இல்லையெனவும் தெரிவித்துள்ளது.
முகநூல் வாயிலாகவும் சமூக தொடர்பு வலையமைப்புக்கள் ஊடாகவும் பொழுது போக்கிற்காக உத்தரவாதம் இன்றி செய்திகளை அறிந்து கொண்டாலும், இடம் பெயர்ந்த நாடுகளில் மக்கள் மன்றங்களில் நிர்வாக அங்கத்தவர்களாக செயற்படும் நிர்வாகிகள் தற்போதைய கொரோனா சூழ்நிலையிலாவது தொடர்புகளை மேற்கொண்டு செயற்பாடுகளை சீர்படுத்த முனைவார்கள் என்கின்ற நம்பிக்கை எமக்கு உண்டு. மக்கள் மனங்களில் அன்பும் ஆதரவும் கொரோனா சூழ்நிலையின் பின்னர் உணர்ந்து கொள்ளும் நிலையில் உள்ளார்கள். உண்மையை பேசுவோம். நன்மையை செய்வோம்!