ஆலங்கன்று வைரவர் ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள முன்னாள் சோலையான் விளையாட்டுக்கழக விளையாட்டு மைதான காணி 2014ம் ஆண்டு வெளிநாடுகளில் உள்ள காரை மன்றங்களின் உதவியுடன் தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு காரைநகர் பிரதேச செயலகத்தின் பெயரில் ஒப்படைக்கப்பட்டது.
காரைநகர் பிரதேசத்திற்குரிய மாபெரும் விளையாட்டு திடல் 400M சுற்றளவுள்ள ஓட்ட மைதானம், பார்வையாளர் அரங்கு உட்பட முழுமையான விளையாட்டு மைதானம் அமைப்பதற்குரிய திட்டம் அரசினால் முன்வைக்கப்பட்டதாகவும் அதற்குரிய காணி நிலத்தினை பெற்று வழங்கினால் அத்திட்டமானது அமைந்து கொள்வதற்குரிய அனைத்து வசதிகளையும் இக்காணி கொண்டிருப்பதாகவும் கருதி இக்காணியினை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்து வழங்கப்பட்டது.
2014ம் ஆண்டு இறுதிப்பகுதியில் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக வெளிநாடுகளில் உள்ள மற்றைய காரை மன்றங்களின் உதவியுடன் இக்காணியானது காரைநகர் பிரதேசசெயலகத்தின் பெயரில் வழங்கப்பட்டது.தற்போது நடப்பது என்ன...? காரைநகரில் சம்பந்தப்பட்ட எவருக்குமே இப்போது இவ்விடயம் தெரியாது. அண்மையில் காரைநகர் பிரதேச செயலர் அவர்களிடம் இது தொடர்பாக வினவியபோது அப்போது அரசினால் முன்வைக்கப்பட்ட திட்டமானது கைவிட்டு போய்விட்டதாகவும் இனிமேல் அவ்வாறானதொரு திட்டம் முன்வைக்கப்பட்டால் அதற்காக இக்காணி பயன்படுத்தப்படும் எனவும் மேலும் 2014ம் ஆண்டு இக்காணி பிரதேச செயலகத்தின் பெயரில் வழங்கப்பட்டது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது எனவும் தெரியப்படுத்தினார்.
தற்போது இதன் நிலமையும் மேலும் 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ள கட்டிட பணிகளையும் ஆலங்கன்று வைரவர் ஆலயத்திற்கு மேற்காக வேறொரு திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட நன்னீர் தேக்க திட்டத்திற்காக அகழ்ந்தெடுக்கப்பட்ட 500 லோட் வரையான மண் இம்மைதானத்தின் ஒரு பகுதியில் கொட்டப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.
முன்னைய சோலையான் விளையாட்டு கழக மைதானமானது தனியார் ஒருவரின் உடமையாக இருந்து வந்ததும் அதனை பணம் கொடுத்து கொள்வனவு செய்து காரைநகர் பிரதேச செயலகத்திடம் ஒப்படைத்ததும் அதன் ஒரு பகுதியில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு இடையில் நின்று போனதும் இன்று காரைநகரில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பலரிடம் விசாரித்த போதும் எதுவுமே தெரியாத நிலையிலும் எதைப்பற்றியும் அறிந்து கொள்ள முடியாத நிலையிலும் ஆர்வம் இன்றியும் இருந்து வருகின்றனர்.
காரைநகர் பிரதேச செயலகம் இதற்குரிய பதிலை உரிய முறையில் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் அதற்குரிய கேள்வியை முன்வைக்க போவது யார்...?வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பி இக்காணியை பெற்று வழங்கிய வெளிநாடுகளில் உள்ள காரை மன்றங்களா..?
காரைநகரில் இன்று 12 விளையாட்டுக்கழகங்கள் தங்களிற்கு விளையாடுவதற்கு மைதானம் இல்லை வசதிகள் இல்லை என்று மேலும் மேலும் பல காணிகளை தமது சொந்த விளையாட்டுக்கழகங்களின் பெயரில் கொள்வனவு செய்து வருகின்றன இந்த விளையாட்டுக்கழகங்களா இதற்கான கேள்வியினை காரைநகர் பிரதேச செயலகத்தினரிடம் கேட்க வேண்டும்...? அல்லது காரைநகர் மண்ணின் மக்களின் மாணவர்களின் விளையாட்டு துறையில் அக்கறையுடன் செயற்படுபவர்களா...?
தெரிந்து கொள்ளுங்கள்... அறிந்து கொள்ளுங்கள்... அரசின் உதவியுடன் மாபெரும் திட்டங்களை காரைநகர் மண் பெற்றுக்கொள்ள முடியும். வடமாகாணத்தின் பல பகுதிகள் போதிய சனத்தொகை இருந்தும் பல கல்வியாளர்கள் அரசியல் பிரமுகர்கள் பணவசதி படைத்த வல்லுனர்கள் பலர் இருந்தும் ஒரு மிகச்சிறிய தீவான எமது காரை மண் தனியானதொரு பிரதேசமாக அமைந்துக்கொள்ள அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் போட்ட திட்டத்தினை எமது மண்ணின் மைந்தன் அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் தீர்க்க தரிசனத்துடன் நிறைவேற்றி வைத்தார்.
வெளிநாடுகளில் இருந்து காரை மன்றங்களினாலும் மற்றும் தனிப்பட்ட ஒரு சிலரினாலும் காணிகளை கொள்வனவு செய்து அரச திணைக்களங்களிற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அக்காணிகளை பெற்றுக்கொள்ள வழங்கப்பட்ட திட்டங்கள் பல கைவிட்டுச் சென்றுள்ளன.
உதாரணமாக காரைநகர் இந்துக் கல்லூரியை சுற்றவர உள்ள 5 காணிகள் பெரும் திட்டங்களை முன்னிறுத்தி கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ள போதிலும் அத்திட்டங்கள்பல கைவிட்டு சென்றுள்ளன.
கடந்த காலங்களில் வாக்குறுதி அளிக்கப்பட்ட திட்டங்களிற்கு என்ன நடந்தது என்பது பற்றி இத்திட்டங்களிற்கு காணிகளை பெற்று வழங்கியவர்களோ அன்றி நிர்வாகங்களோ உரிய முறையில் பதிலளிப்பதில்லை.
ஆலங்கன்று முன்னாள் சோலையான் விளையாட்டு மைதானத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் பார்வையிடுவோம்!