யாழ்ப்பாணம் - காரைநகர் கல்லுண்டாய் வீதி கார்ப்பெட் வீதியாக மாற்றம் பெறும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன (கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் மேல் அழுத்துவதன் மூலம் பெரியளவில் பார்வையிடலாம்)
யாழ்ப்பாணம் - காரைநகர் கல்லுண்டாய் வீதி கார்ப்பெட் வீதியாக மாற்றம் பெறும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாண நகரின் பண்ணை சந்தியில் இருந்து நாவாந்துறை, அராலி, வட்டுக்கோட்டை ஊடாக காரைநகர் நோக்கி பொன்னாலை சந்தி வரையான கல்லுண்டாய் வீதி என அழைக்கப்படும் இப்பாதை கார்ப்பெட் வீதியாக மாற்றம் பெறவுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று கிடந்த இந்த வீதி அபிவிருத்தி இரண்டு வருட ஒப்பந்தத்தின் மூலம் நல்லாட்சி அரசின் போது சீரமைக்க பணிக்கப்பட்டது. ஆனாலும் வீதி அகலிக்கும் பணியில் முதற்கட்டமாக பின்னடைவு ஏற்பட்டது. அதன் பின்னர் நல்லாட்சி அரசின் மாற்றம் தற்போது கொரோனா பின்னடைவு என தொடர்ந்தும் இத்திட்டத்திற்கான பல தடைகள் ஏற்பட்டு வந்துள்ள போதிலும் இத்திட்டத்தினை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொண்ட நிறுவனத்தின் முயற்சியினால் மட்டுமே இப்பணி இடைநிறுத்தப்படாது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியப்படுகின்றது.
26 பாலங்கள் அல்லது மதகுகள் உட்பட தற்போது திருத்தி அமைக்கப்பட்டு வரும் வேளையில் மேற்கொண்டு வீதி அகலிக்கும் பணிகள் முழுமையாக இன்னமும் நிறைவு பெறவில்லையெனவும் குறிப்பிடத்தக்க சில பகுதிகளில் வீதி அகலிக்க பொது மக்களின் அனுசரணை கிடைக்கப்பெறவில்லையெனவும் அறியப்படுகின்றது. 2022ம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த வீதி முழுமைபெற வேண்டும் எனவும் நம்பப்படுகின்றது.
காரைநகர் அரசியில்வாதிகள், வர்த்தகர்கள், சமூக அந்தஸ்து பெற்ற பல முக்கியமானவர்கள் கூட காரைநகர் யாழ்ப்பாண குறுகிய வழி தடமான இந்த கல்லுண்டாய் வீதியினை புனரமைக்க அதிக அக்கறை எடுத்துக்கொண்டதில்லை. காரைநகர் யாழ்ப்பாணம் பயணம் இவ்வீதி புனரமைக்கப்படும் பட்சத்தில் அரை மணி நேரத்தில் சாத்தியமானதாக்கப்படும்.
காரைநகரில் இருந்து இடம் பெயர்ந்து யாழ் நகரின் பல பகுதிகளிலும் குடியேறியுள்ள காரைநகர் மக்கள் தமது சொந்த இடங்களிற்கு இலகுவாக சென்று வர வழியமைக்கப்படும். யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு செல்வதற்கும் மற்றும் யாழ் நகர பாடசாலைகளிற்கு கல்வி கற்க சென்றுவரும் மாணவர்களிற்கும் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பது உறுதியாகின்றது. படங்கள்:karainews.com