1
1
பலவற்றை மூடி மறைக்க ‘காவி’ அடிக்கப்படும் காரைநகர்….
கோயிலுக்கு ‘காவி’ அடித்து நல்லூர் கலாச்சாரத்தை காரைநகருக்குள் கொண்டுவருபவர்கள் காரைநகர் மக்களிற்கும் ‘காவி’ அடிப்பதையும் ஏற்றுக்கொள்ளப்போகிறார்களா…!
காரைநகர் முகவாயில் கோபுரத்திற்கு ‘காவி’ அடிப்பதை ஏற்றுக்கொள்ளப்போகிறார்களா..!
தனிப்பட்ட ஒருவரான முன்னாள் இந்து கலாசார அமைச்சர் அமரர் தியாகராசா மகேஸ்வரனின் பாரியார் திருமதி விஜகலா மகேஸ்வரன் அவர்களின் சொந்த நிதி அனுசரணையால் பிரதேச சபையின் அனுமதியோடு கட்டப்பட்ட காரைநகர் வரவேற்பு வளைவிற்கு ‘காவி’ அடிக்க அனுமதி கொடுத்தது யார்..? காரைநகர் மக்களா அல்லது காரைநகர் பிரதேச சபையா…?
முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனால் சிவனடியார்களிற்கும் ஈழத்து சிதம்பரம் பக்தர்களிற்கும் அன்னதானம் வழங்க கட்டப்பட்ட ‘மகேஸ்வரன் அறப்பணி நிலையத்தை’ நிர்வகிக்க முடியாத நிலையிலும், ஈழத்து சிதம்பரத்தின் மூன்றாம் வீதிகளில் மூன்று அன்னதான மடங்கள் இருந்தும் தற்காலிக கொட்டகை அமைத்து வீதியில் வைத்து பக்தர்களிற்கு சோறு போடவேண்டிய நிலை ஏன் ஏற்பட்டுள்ளது…?
தேரோடும் வீதியாம் மூன்றாம் வீதியானது ஆகம விதிப்படி ஆண்டவன் நோயாளர்கள், பிணியாளர்கள், தொடக்கு உள்ளவர்களையும் இரட்சிப்பதற்பதற்காக வெளிவீதி உலாவரும் வீதியாகும். அங்கே வைத்து அடியவர்களிற்கு அன்னதானம் வளங்க வேண்டிய நிலமை ஏன் ஏற்பட்டுள்ளது..!
கும்பாபிஷேகத்திற்கும் மேலான நடவடிக்கைகள் வீதியிலே சோறு போட பகீரதப்பிரயத்தனம் எடுக்கப்பட்டு வருகின்றது. பசித்தவர்க்கு உணவளிப்பது அன்னதானம். சோற்றுக்காக கும்பாபிஷேகம் நடாத்த முயலும் கூட்டத்தை என்னவென்பது.
அப்படியாயின் மூன்றாம் வீதியின் ஈசான மூலையில் அமைந்துள்ள ஆயிரம்பேர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய மகேஸ்வரன் அறப்பணி நிலையம் ஏன்…எதற்காக… கோயில் நிர்வாகம் வைத்துள்ளது.
கோயில் நிர்வாகத்தின்கீழ் தனியான அமைப்பாக தனியான நிர்வாகத்தினூடாக பல தசாப்தங்களாக இயங்கி வரும் ‘மணிவாசகர் மடாலயம்’ எதற்காக…!
வீதியில் வைத்து சோறு போடுவதையே குறிக்கோளாக கொண்டு கும்பாபிஷேகத்தையும் கேலிக்கூத்தாக்கி வரும் ஆதீனகர்த்தாக்களை வைத்து சிவன்கோயிலை பினாமியாக நிர்வகித்து வரும் பரமேஸ்வரன் தனது பங்களிப்பு என்னவென்பதையும் தான் யார் என்பதையும் கோயில் நிர்வாகம் சார்ந்து தனக்கும் நிரவாகத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.
ஐந்து பரம்பரை கோயில் ஆதீனகர்த்தாக்களில் ஒருவரான ஆண்டிஐயா அம்பலவிமுருகன் ஆதீனகர்த்தாக்களிலும் ஒருவர் இல்லை என்பதும், அடாவடியாக சட்டத்தை வளைத்து உருவாக்கப்பட்ட ‘நம்பிக்கை பொறுப்புரிமையாளர்’ சபை என்பதிலும் இல்லாமல் 05.07.2026 எதிர்வரும் கும்பாபிஷேக தினத்தின் போது கோயிலுக்கு வெளியே மூன்றாம் வீதியில் கைகொட்டி வாய் பொத்தி ஐந்தாவது சந்ததியான திரு.ஆண்டிஐயா அம்பலவிமுருகன் வெளியில் நிற்கப்போவதை காரைநகர் மக்களே நீங்கள் ஏற்றுக்கொள்ளப்போகிறீர்களா…’
ஐந்து பரம்பரம்பரையாக ஆண்ட பரம்பரம்பரை வம்சத்தை சேர்ந்த ஆண்டிஐயா அம்பலவிமுருகனிற்கும் அவரது முன்னோரான நான்கு பரம்பரம்பரைகளிற்கும் நீங்கள் கொடுக்கப்போகும் மரியாதை இதுதானா..!
காசும் பணமும் கோர்ட்டில் வக்கீல்கள் மூலம் ஜெயிக்கலாம்…ஆனால் உங்கள் மனங்களில்… உங்கள் அறிவுக்கு எட்டியவரை உங்களிற்கு உங்கள் சிவன்கோயில் ஆதீனகர்த்தாக்கள் யார் என்பது உங்களிற்கு தெரியாதா…?
உயிரோடு வாழ்ந்து வரும் திரு. ஆண்டிஐயா அம்பலவிமுருகன் ஈழத்து சிதம்பரத்தின் ஐந்தாவது பரம்பரை ஆதீனகர்த்தாவா அல்லது அடுத்தவனுக்கு கையேந்தி நிற்கும் யாரும் அற்ற ஒருவரா…? இன்னும் ஏன் மெளனம்..? ஐயனார் உள்ளபடி உள்ளே செல்ல வேண்டும்… ஆடலரசன் திருவாதிரைக்கு ஆடி வரவேண்டும் என்பதும் திரு.ஆண்டிஜயா அம்பலவிமுருகன் ஆதீனகர்த்தாக்களில் ஒருவர் என்பதும் அடிப்படையாக ஐந்து பரம்பரை வழிவந்த அசைக்க முடியாத உண்மை.
காரைநகர் மாப்பாணவூரி, சடையாளி, நடுத்தெரு, புதுறோட் சான்றோர்களால் ஒரு நூற்றாண்டு காலமாக ஆதீனகர்த்தாக்களின் நிர்வாகத்தினரோடு இணைந்து பராமரிக்கப்பட்டு வந்த ஈழத்து சிதம்பரம் சிவன்கோயில் தொடர்ந்து அதே நோக்கோடு இந்த சந்ததியிலும் செயற்படும்.
கோயிலுக்கு மட்டுமல்ல ஊரிற்கே ‘காவி’ அடிக்க முற்படுபவர்கள் வெளியேற்றப்படவேண்டும். வெளியேற்றப்படுவார்கள்.
05.07.2026 ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் பலவற்றிற்கு முற்றுப்புள்ளியாக அமையும். ஆண்டிகேணி ஐயனும் ஆடலரசனும் மொத்தப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார்கள்.
ஊரில் இருந்து…
ஊரவன் தீசன் திரவியநாதன்.’எனது ஊர் காரைநகர்’