(உற்று நோக்கினால் மட்டும் தான் புரியும் உண்மை என்னவென்று…அது இந்த படம் மட்டுமல்ல இந்த பந்தியும் தான்…)
கனடா வாழ் காரை மக்களின் சார்பாக கனடா காரை கலாசார மன்றத்தின் குறிக்கோளை நிறைவேற்றிய காரைநகர் அபிவிருத்தி சபை.
ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கனடா காரை கலாசார மன்றத்தின் சிவன்கோயிலுக்கான நிரந்தர வைப்பு வட்டிப்பணத்தில் இருந்து ஆறு இலட்சம் ரூபாய்கள் பெறுமதியில் கும்பாபிஷேகத்திற்கான பூஜை திரவியங்கள் மற்றும் கோயிலுக்கான அத்தியாவசிய பொருட்கள் காரைநகர் அபிவிருத்தி சபையினரால் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் K.K. S. Road இல் அமைந்துள்ள ‘வளர்மதி’ பூஜை பொருட்கள் களஞ்சியத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட கும்பாபிஷேகத்திற்கான பொருட்களை தற்போதைய கோயிலின் நிர்வாகி திரு.சுந்தரலிங்கம் குகனேசன் அவர்களிடம் ஒப்படைத்தனர். இதன்போது காரை அபிவிருத்தி சபையின் பதில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் உடனிருந்து வழங்கி வைத்தனர்.
ஈழத்து சிதம்பரம் திருத்தொண்டர் சபையாக ஆரம்பிக்கப்பட்ட கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக 2015ம் ஆண்டு திரு. தம்பிஐயா பரமானந்தராசா தலைமையில் திரு. தீசன் திரவியநாதன் செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் சிவன்கோயில் நித்திய பூசை நிதியத்திற்காக நிரந்தர வைப்பில் இடப்பட்ட வங்கி வைப்பு பணத்தினூடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தினை 2022ம் ஆண்டு முதல் திரு. சுந்தரலிங்கம் குகனேசன் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில், 2023.04.20 முதல் வட்டிப்பணத்தை கோயில் நிர்வாகத்திற்கு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாக சபை கூட்டத்தில் ஏகமனதாக முடிவு எடுத்திருந்தது. அதனை 2023.04.28 அன்று நடைபெற்றிருந்த பொதுக்கூட்டத்தில் செயலாளர் அறிக்கை ஊடாகவும் அப்போதைய நிர்வாகம் கனடா காரை கலாசார மன்றத்தின் அங்கத்தவர்களிற்கு தெளிவுபடுத்தியிருந்தது.
ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நிர்வாகி திரு.சுந்தரலிங்கம் குகனேசனின் பினாமியாக செயற்பட்டுவரும் ஒருவர் தொடர்ச்சியாக வைப்பில் இடப்பட்ட மொத்த தொகையினையும் பெற்றுக்கொள்ள பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்ட போதிலும் செயலற்று இருக்கும் கனடா காரை கலாசார மன்றத்தின் நிரந்தர வைப்பு(முதல்) மற்றும் 2023 முதல் கிடைக்கப்பெற்ற வங்கி வட்டி பணம் என்பவற்றை பெற்றுக்கொள்ள காரைநகர் அபிவிருத்தி சபையினருக்கு பலத்த நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தி வந்துள்ளார். காரணம் கடந்த நிர்வாகங்களால் நிரந்தர வைப்பில் இடப்பட்ட நிதியினை தற்கால நிர்வாகங்களால் கையாள முடியாது என்பதுடன் பொதுச்சபையை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்பது பொதுவான விதியும் கனடா காரை கலாசார மன்றத்தின் யாப்பு விதியும் ஆகும்.(இதனை அறிந்து கொள்ளும் அறிவில்லாத ‘பினாமி’….. இவ்வளவு காலமும் இந்த எள்ளு எதற்காக காய்ந்து கொண்டது என்பது இப்பவேனும் அறிந்து கொள்ளும் அறிவை கொடு பரமேசா’)
‘வாழும் போது ஜீவனுக்கு உதவாத பணம், இறந்தா பிறகு அந்தியேட்டிக்கு தானம் கொடுத்தா… உதவப்போகிறது…’ என்பதற்கு இணங்க, நேரம், காலம், சந்தர்ப்பம் அறிந்து காரைநகர் அபிவிருத்தி சபையானது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காரைநகர் அபிவிருத்தி சபை பணமாக அன்றி கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்களாக திரு. சுந்தரலிங்கம் குகனேசன் அவர்களிடம் ஆறு இலட்சம் ரூபாய்கள் பெறுமதியிலான பொருட்களை 27.06.2026 கடந்த சனிக்கிழமை அன்று சனிப்பிரதோச கால புண்ணிய நேரத்தில் கையளித்தனர்.
2022ம் ஆண்டு முதல் பெற்ற வட்டிப்பணத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்த நிர்வாகம் அதனை நிராகரித்த போது….. கனடா காரை கலாசார மன்றத்தில் நிர்வாக சபை உறுப்பினராக இருந்த தீசன் திரவியநாதன் ஆகிய என்னால் வட்டிப்பணத்தை இடைநிறுத்த கோரி முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை 11 அங்கத்தவர்கள் இருந்த நிர்வாக சபையில் அன்றைய நிர்வாக சபை கூட்டத்தில் பங்கேற்ற 9 நிர்வாக சபை உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்….
இதோ இன்று… அந்த நிதி இன்று மொத்தமாக தேவை ஏற்படும் நேரத்தில்… சிவனுக்கும் ஐயனாருக்கும் நடைபெறும் நடைபெறும் பெருஞ்சாந்தி பெருவிழாவில் ‘பிச்சை பணமாக’ பரமேஸ்வரனே கேட்டு பெற்றுக்கொள்ளும் நிலமையில் கனடா வாழ் காரைநகர் மக்கள் சொந்த வியர்வை சிந்தி உழைத்த பணத்திற்கு காரைநகர் அபிவிருத்தி சபை மிகப்பெரும் கைங்கரியம் செய்துள்ளது.
எல்லாவற்றிற்கும் கடிதம் வேண்டும், கையொப்பம் வேண்டும், ஆதாரம் வேண்டும், சட்டம், புலனாய்வு என சித்தாந்தம் பேசியவர்கள் கூட ஈழத்து சிதம்பரத்தின் கும்பாபிஷேகத்திற்கு உதவாத பணம் இனிமேல் இருந்தும் என்ன பயன் என உணர்ந்தார்களோ அல்லது இந்த நிலையை அன்று உணர்ந்த கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகம் எடுத்த தீர்மானமோ அல்லது அது தான் கடவுளின் விருப்பமோ…. சரியான நேரத்தில் சரியான தருணத்தில் கனடா வாழ் காரை மக்கள் வழங்கிய பணம் ஈழத்து சிதம்பரத்தானின் கும்பாபிஷேகத்தில் ஒரு துளி நீராக கனடா வாழ் காரை மக்களின் வியர்வையும் சேர்ந்தே விழும்.
நன்றி… காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகத்திற்கு…!
நீங்கள் தெரிந்து செய்தீர்களோ அன்றி தெரியாமல் செய்தீர்களோ அல்லது தனியொருவனின் பயத்தினால் செய்தீர்களோ தெரியாது… ஆனால் சரியான நேரத்தில் தவறாக இருந்தாலும் அதனை சரியாக செய்துள்ளீர்கள்.
‘அதென்ன தவறாக இருந்தாலும்…’ என்று நீங்கள் நினைத்தால்…. அதற்கான விளக்கம் வருமாறு:
கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த இரண்டு வருட செயலற்ற திரு.முத்து பொன்னம்பலம் தலைமையிலான நிர்வாக சபையிடம் வட்டிப்பணத்தை கொடுப்பதற்கான அனுமதியை பெறவேண்டும். ஆனால் அந்த நிர்வாகம் பயனற்றது, பண்பாடு அற்றது, மெத்தமாக செயலற்றது என்பதை உணர்ந்து கொண்டு வட்டிப்பணம் மட்டுமல்ல அதற்கு மேலாகவும் சொந்த பணத்தையும் சேர்த்து வழங்கிய செயலாளர் திரு.பொ.பரந்தாமன், பொருளாளர் திரு.வே.செல்வராசா இவர்களுடன் பதில் தலைவர் திரு.பரணீதரன் ஆகியோர் நிறையவே கற்றுக்கொண்டிருப்பார்கள்.
இரவு 10 மணிக்கு ஊரடங்கிய நேரத்தில் அடாவடியாக இன்னொரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மடத்திற்கு ‘காவி’ அடிக்கும் சிலரிற்கு காரைநகர் அபிவிருத்தி சபை மிகப்பெரும் புண்ணியத்தை கனடா வாழ் காரைநகர் மக்களிற்கு பெற்றுத்தந்திருக்கிறது.
‘காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தில் மாலப்பெரிது.’
ஆறடிக்குள் அடங்க மறுக்கும் பலரும் ஒன்றரை அடிக்குள் அடங்குவார்கள். அது தான் திருக்குறள்.
இது ‘எனது ஊர் காரைநகர்’
நேரான பாதையில் சிந்தித்தால் நிறையவே உண்மைகள் புலனாகும்.
உங்களுடன் நானும் ஊரில் இருந்து..
தீசன் திரவியநாதன்.
(பெருமையுடன் முன்னாள் பதில் செயலாளர்(2014-2015) கனடா காரை கலாசார மன்றம்)


