யார் தீயவர் என்பதையும், யார் சமூகத்திற்கு ஒவ்வாதவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
(முழுமையாக வாசியுங்கள்).
” இன்று நல்லவற்றை சொன்னால் அவற்றைப் பார்க்கவோ கேட்கவோ ஆட்களில்லை. தீயவற்றை சொன்ன உடனே அவற்றைத்; தேடிப்பார்க்க ஆயிரக் கணக்காளர்கள் இருக்கிறார்கள்.
‘யூரியூப்’ நிறைய பார்க்கப்பட்டால், அதனால் அந்த யூரியூப்பை நடத்துபவர்களுக்கு பெரிய வருமானம் வருகிறது. எனவே அந்த வருமானத்தைப் பெறுவதற்கு நல்லவற்றை விட்டுவிட்டு தீயவற்றைக் காட்சிப்படுத்துவதே சுலபமான வழியாய் இருக்கும்.
எனவே அவர்கள் செய்யும் இன்னொரு காரியம் தான் மிக மோசமானதாய் இருக்கிறது. சுலபமாக மக்களின் பார்வையை தம்மை நோக்கித்திருப்ப, அவர்கள் கையாளும் வழி மிக மோசமானது. சமூகத்திற்காக பல நற்காரியங்களைச் செய்து, மக்களின் போற்றுதலுக்கு ஆளானவர்கள் மேல், வரையறையின்றிச் சேற்றை அள்ளி இறைத்து, அதன் மூலம் பொது மக்களின் பார்வையைத் தமது யூடியூப் மீது திருப்ப முயலும் இவர்கள், சமூகத்;தின் அடிப்படைச் சமநிலையையே தகர்க்க முனைகிறார்கள்.
இந்தப் பாவத்திற்கு, துணைபோவதில் நம் பொதுமக்களின் பங்கும் இருப்பது தான் மனவருத்தத்குரிய விடயம். தீயவர்கள் நல்லவர்களை வீழ்த்த நினைக்கிற பொழுது, ‘சீச்சீ இவையும் சிலவோ’ என அவர்களின் கருத்தைத் தூக்கி எறியாமல், அவர்கள் வரைய முனையும் அசிங்கப் படங்களுக்கு தமது கற்பனையால் ஆபரணங்கள் பூட்டி மேலும் அந்த அசிங்கத்தை அழகு செய்யும் நம்மவர்களின் இயல்பே, இத்தகைய தீயவர்களைப் பலம் செய்கிறது.
இன்னுமொன்று! இத்தகையை தீயவர்கள் நல்லவர் ஒருவரைத் தூற்றும் போது, அந்த நல்லவரால் பயன்பெற்றவர்கள் கூட ‘நிறுத்து இதை!’ என உறுதிபடச் சொல்ல துணிவதில்லை. அதற்காம் காரணங்கள் இரண்டு. எவருக்கு எது நடந்தால் எமக்கென்ன? என்பது முதற்காரணம். நாம் ஏதாவது சொல்லப் போய் அத்தீயவர்கள், நம்மையும் தாக்கி விடுவார்களோ? என்ற அச்சம் இரண்டாவது காரணமாகும்.
சான்றோர்கள் (அப்படியாரும் இருந்தால்), கற்றவர்கள், தலைவர்கள், சமயப் பெரியவர்கள், நடுநிலை ஊடகக்கார்கள் என எவரும் இத்தகைய தீயவர்களின் இழி செயலை கண்டித்து எதனையும் உரைப்பதில்லை. முன் சொன்னவையே இதற்காம் காரணங்களாம்.
இன்று தீயவர்களின் துணிவை விட நல்லவர்களின் மௌனமே வெறுப்பை ஏற்படுத்துகிறது. கெட்டவனுக்குத் தீமையிலிருக்கும் நம்பிக்கை, நல்லவனுக்கு நன்மையில் இல்லாமல் போனது பெருங் கொடுமை.
இத்தகைய புல்லர்களின் கீழ்த்தரமான தூற்றுதலுக்கு நானும் பலதரம் ஆளாகியிருக்கிறேன். அப்போது எனக்குச் சார்பாக எவரும் அத்தீயவர்களைக் கண்டிக்க முன்வரவில்லை. என்னைக் காணும் போது மட்டும், என் மேல் இரக்கம் கொண்டவர்களைப் போல, தனியாக என் முன் ‘முதலைக்கண்ணீர்’ வடித்தார்கள். அவர்களது ‘நபுஞ்சகம்’ தன்மை கண்டு வெறுத்திருக்கிறேன்”
@ மேற்சொன்னவை என்னால் எழுதப்பட்டவை அல்ல, முகநூலில் ஒருவரின் விமர்சனத்திற்கு இன்னொரு அறிஞர் எழுதியவை. விமரசனம் ஒன்றிற்கு முழுமையாக எழுதிய பதிலில் இருந்து சிலவற்றை மட்டும் இங்கே தந்துள்ளேன். நன்றி.
தீசன் திரவியநாதன்.



