நடந்தது என்ன..! 20.07.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடிய நேரம் காலை 10 மணிக்கு (இலங்கை நேரம் மாலை 7.30) நடைபெற்ற காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான சமூக வலைத்தளமூடான கலந்துரையாடல் விபரம், அறிக்கை.

நடந்தது என்ன..!

20.07.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடிய நேரம் காலை 10 மணிக்கு (இலங்கை நேரம் மாலை 7.30) நடைபெற்ற காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான சமூக வலைத்தளமூடான கலந்துரையாடல் விபரம், அறிக்கை.

இலங்கை நேரம் மாலை 7 மணி எனக்குறிப்பிட்ட போதிலும் செயலாளர் திரு.பரந்தாமன், பொருளாளர் திரு.பரம்தில்லைராஜா ஆகியோர் இறுதிவரை தொடர்புகளிற்கு அப்பாற்பட்டு இருந்த காரணத்தினால் 7.30 மணிவரை நேரதாமதம் ஏற்பட்டது.

கலந்துரையாடலில் காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் முழுமையான ஆதரவு வழங்கி இணைந்து கொண்டதுடன் காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்போதைய நிலவரம், செயற்பாடுகளை தெரியப்படுத்தியிருந்தார்.

கலந்துரையாடலில் 40க்கும் மேற்பட்ட அபிமானிகள் கலந்து கொண்டிருந்தனர்.

2023ம் ஆண்டு யூலை மாதம் தற்காலிக நிர்வாக சபையின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட திரு ஹம்சன் விஸ்வலிங்கம் அவர்கள் ஆரம்பத்தில் தாம் நிர்வாகத்தை சுமூகமான முறையில் நடாத்தி செல்வதாக குறிப்பிட்ட போதிலும் பின்னர், தற்காலிக நிர்வாக சபை என்பதால் நிர்வாக சபை உறுப்பினர்கள் பயத்துடன் இயங்குவதாகவும், நூலக செயற்பாடு மற்றும் குடிநீர் வழங்குதல் மட்டுமே நிர்வாகம் சார்ந்து தற்போது செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆனபோதிலும் தற்காலிக நிர்வாக சபையின் ஆரம்பத்தில் “காரைநகர்” நாமம் பெற்ற நூற்றாண்டு விழா சிறப்பாக நடாத்தியதாகவும் பின்னர் பல இடையூறுகள் இருந்ததால் தம்மால் முழுமையாக செயற்பட முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

எவ்வாறான இடையூறுகள் என வினவப்பட்டதற்கு;

“விசாரணை” என்னும் பயமும், 2023க்கு முற்பட்ட நீதிமன்ற வழக்கும், கடந்த வருடம் தொடரப்பட்ட வழக்கும் பெரும் இடையூறாக இருப்பதுடன் தொடர்ந்து சந்திக்கு சந்தி, நாட்டுக்கு நாடு தமது நிர்வாகத்தை விமர்சிப்பது தமக்கு பெரும் இடையூறாக அமைந்திருந்தது என்பதுடன் காரைநகர் பிரதேச செயலகம் புதிய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவும் நிதி கொடுப்பனவுகளை மட்டுப்படுத்தப்பட்டளவில் செயற்படுத்தவும் தமக்கு அறிவுரை வழங்கியதாகவும் தலைவர் திரு.ஹம்சன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

தற்காலிக நிர்வாக சபையாக 2023ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டாலும் காரைநகர் அபிவிருத்தி சபை சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய ஊரிற்கான பல செயற்பாடுகள் என்பனவும், நிர்வாகம் சார்ந்து தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் தமது கடமைகளை சரிவர செயற்படுத்த தவறியிருந்தார்கள் என பல சம்பவங்களும் செயற்பாடுகளும் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களினால் முன்வைக்கப்பட்டதுடன் அது தொடர்பான விவாதங்களும் இடம் பெற்றன.

காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்காலிக நிர்வாக சபையானது ஆறு மாதங்களிற்கு செயற்பட தெரிவு செய்யப்பட்டதாகவும் ஆனாலும் சபையின் அங்கத்தவர்கள் போதியளவு பங்குபற்றாத நிலமையில் பொதுக்கூட்டங்கள் பின்போடப்பட்டதாகவும் அதன் காரணமாகவே நிர்வாக செயற்பாடுகள் அங்கத்தவர்களிற்கு வெளிப்படையாக தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாத நிலமை நிலவியதாகவும், பொதுக்கூட்டத்தை தவிர்த்து மற்றைய சந்தர்ப்பங்களில் செயலாளர் அறிக்கை, பொருளாளர் வரவு செலவு அறிக்கை என்பனவும் சபையின் இக்கட்டான நிலமைகளும் அங்கத்தவர்களிற்கு தெரிவிக்கப்படவில்லை எனவும், இரண்டு ஆண்டுகளைக்கடந்தும் தற்காலிக நிர்வாக சபையே இன்னமும் பதவி வகிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் தலைவர் திரு.வி.ஹம்சன் தெரிவித்தார்.

பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு கோரம் இல்லாத நிலமைகளினாலும், பின்னர் பொதுக்கூட்டம் கூட்டப்படுவதற்கான சந்தர்பங்கள் அற்ற நிலையிலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்காலிக நிர்வாகமானது இரண்டு ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சபையின் கணக்கு வழக்குகளை பொது வழியில் தெரிவித்து சபையின் நல்லெண்ணத்தையும் நிர்வாக சபையின் வெளிப்படையான எண்ணத்தையும் காரைநகர் மக்களிற்கும், உதவிகளை வழங்கி வரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகளிற்கும் வெளிப்படுத்த வேண்டிய கடமையும் கடற்பாடும் உள்ளது எனவும்…, அடுத்து வரும் நிரந்தரமான நிர்வாக சபைக்கான ஒழுங்கமைப்பிற்கு முன்னர் தற்போதைய தற்காலிக நிர்வாக சபையின் உத்தேச வரவு செலவு கணக்கு மக்களிற்கு அறியப்படுத்த வேண்டும் எனவும் தலைவரிடம் கோரப்பட்டது.

தலைவர் திரு.வி.ஹம்சன் அவர்கள் தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளிற்கு மேலாக தற்காலிகமாக செயற்பட்டுவரும் நிர்வாக சபை உறுப்பினர்களிற்கு 20.07.2025 அன்று நடைபெறும் நல்லெண்ணம் கருதிய கலந்துரையாடல் தொடர்பாக தலைவரால் தெரிவிக்கப்பட்டும், எனது முகநூல் வாயிலாக பொதுவழியில் அறிவிக்கப்பட்டும் கலந்து கொள்வதையோ அல்லது எனது அழைப்புகளுற்கு பதிலளிப்பதையோ தவிர்த்து வந்துள்ளார்கள்.

இந்த நிலையில் தற்காலிக நிர்வாக சபையில் கடந்த இரண்டு ஆண்டுகள் தலைவராக பணியாற்றும் திரு.வி.ஹம்சன் அவர்கள் தனது நிர்வாக சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடி; செயலாளர் திரு.பரந்தாமன், பொருளாளர் திரு.பரம்தில்லைராசா(சின்னத்தம்பி) ஆகியோருடனும் மற்றைய நிர்வாக சபை உறுப்பினர்களுடனும் கலந்தாலோசித்து மற்றுமொரு பொதுவழி கலந்துரையாடலுக்கு இரண்டு வாரங்களில் வழிவகை செய்வதாகவும் வாய்மொழி அளித்துள்ளார்.

‘காரைநகர் அபிவிருத்தி சபை’ சார்ந்த இரண்டு நீதிமன்ற வழக்குகள் தொடர்பாகவும் ‘எனது ஊர் காரைநகர்’ ஏற்படுத்துகின்ற நல்வாய்ப்புகள் ஊடாக சுமூகமான முடிவுகளை காண்பதற்கு ‘எனது ஊர் காரைநகர்’ பொறுப்பேற்றுக்கொள்ளும் எனவும் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்த வகையில் உறுதி வளங்கப்பட்டது.

20.07.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் முற்றும் முழுதாக ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ சார்ந்து அதனை மீளவும் சுதந்திரமாக செற்படவைக்கும் நோக்கில் மட்டுமே கலந்துரையாடப்பட்டது. ஆனாலும் வழமைபோல் ‘ஆட்டுக்குள் மாட்டை விடும்’ வகையில் குறிப்பிட்ட கலந்துரையாடலிற்கு ஒவ்வாத கருத்துக்களை முன்வைக்க முயன்றவர்கள் ஒரு சிலர் தமாக நிலமையை புரிந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தார்கள்.

20.07.2025 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் காரைநகர் அபிவிருத்தி சபையின் கடந்த இரண்டு ஆண்டு கால தற்காலிக நிர்வாக சபையின் செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனங்களும் நிறைகளும் குறைகளும் முன்வைக்கப்பட்டாலும் அவை அனைத்தும் ஆக்கபூர்வமான முறையில் ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ யின் வளர்ர்ச்சியை மீள் எழுச்சியை மட்டும் நோக்காக கொண்டு முன்வைக்கப்பட்டவையே.

கலந்துரையாடலின் நிறைவில் தலைவர் திரு.வி.ஹம்சன் அவர்கள் தனது தலைமையின் கீழ்இயங்கும் நிர்வாக சபையின் ஆதரவுடன் நிர்வாக செயற்பாடாக காரைநகர் அபிவிருத்தி சபையின் செயற்பாடுகள், கணக்கறிக்கை, சபையின் நிலவரங்களை வெளிக்கொண்டு வரவும் சுதந்திரமானதொரு நிலையான நிர்வாகத்தை அமைத்துக்கொள்ளவும் வெளிப்படையான தன்மையை பேணவும் இரண்டு வாரங்களினுள் மற்றுமோர் ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்கு கலந்து கொள்வார் என்கிற உறுதிப்பாட்டுடன் கலந்துரையாடல் மூன்று மணி நேரங்களின் பின்னர் நிறைவு பெற்றது.

20.07.2025 நடைபெற்ற கலந்துரையாடல் மூலம் காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்காலிக நிர்வாக சபையின் நிறைகளும் குறைகளும் விளங்கிக்கொள்ளப்பட்டாலும், காரைநகர் அபிவிருத்தி சபைக்கு தற்காலிகம் அல்லாத நிரந்தரமான இரண்டு ஆண்டுகள் முழுமையாக சுதந்திரமாக இயங்க கூடிய வகையில் ஒரு நிர்வாகத்தை அமைப்பதையே நோக்காக கொண்டு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டதனால் நாம் யாரையும் குற்றம் காணவோ அல்லது பராட்டி புகழவோ விபரம் வெளியிடவில்லை.

கலந்துரையாடல் மூன்று மணி நேரம் செவிமடுக்கத்தக்க வகையிலும் நாகரீகமாகவும் நடைபெற்றுள்ள போதிலும் இங்கே எடுத்து வரப்பட்டவை சாராம்சம் மட்டுமே.

20.07.2025 கடந்த ஞாயிறு நடைபெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ யின் தலைவர் திரு.வி.ஹம்சன் அவர்கள் தனது தலைமையிலான நிர்வாக சபையினருடன் மற்றுமொரு கலந்துரையாடலில் கலந்து கொள்ளவும், தற்போது நடைபெற்ற கலந்துரையாடலின் சாராம்சத்தை தனது நிர்வாக சபையினருக்கு வெளிப்படுத்தி, தனது நிர்வாகத்தின் கீழ்உள்ள சபையானது ” ஏன் ” , ” எதற்காக ” வெளிப்படைத்தன்மையை பேணவேண்டும் என்பதனையும் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணங்களினால் எமது ஊரின் வளர்சியை முன்னிறுத்தியே நிர்வாகத்தில் பங்கெடுத்துள்ளார்கள் என்பதையும்…,

அவர்கள் அனைவரும் நிர்வாக தலைமைக்கும் நிர்வாகத்தின் செயற்பாடுகளிற்கும் குந்தகம் இல்லாது செயற்படுகின்றார்கள் என்பதும், ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ யின் அணுசரணையாளர்கள் பெரும்பகுதியினர் வெளிநாடுகள் வாழ் காரைநகர் மக்கள் என்பதனால் அவர்களிற்கு நிர்வாகத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டிய கடமைப்பாடும் உள்ளது என்பதனை வெளிப்படுத்துவதன் ஊடாக மட்டுமே தனிப்பட்ட விடயங்களிற்காக அல்லாது ஊரின் நன்மை கருதி செயற்படவும் முடியும் என்பதையும் நிர்வாக சபை உறுப்பினர்கள் உணர்த்தவும் முடியும்.

பி.கு: இந்த விபரம் எழுதப்பட்டிருக்கும் 25.07.2025 இன்று வெள்ளிக்கிழமை, காரைநகர் பிரதேச செயலகத்தின் ஊடாக ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் அழைக்கப்பட்டு அடுத்து நடைபெறவேண்டிய விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றைய பிரதேச செயலகத்தின் அழைப்பிலும் பொருளாளர் திரு.பரம்தில்லைராசா(சின்னத்தம்பி) கலந்து கொள்ளவில்லை என்பது அறியப்படுகிறது.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

கனடா வாழ் காரைநகர் மக்கள் அறிந்து கொள்ளப்படவேண்டியது யாதெனில்..!

கனடாவில் 27.07.2025 ஞாயிற்றுகிழமை நடைபெற்ற தனியார் நிகழ்வு ஒன்று 38 சிறுவர்கள் உட்பட 184 கனடா வாழ் காரைநகர் மக்கள் கலந்து கொள்ள 7,000 டொலர்கள்(15 இலட்சம் ரூபாய்கள்) செலவில் நடைபெற்று முடிந்துள்ளது.

Leave a Reply