”கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி”
என்பது போல கனடாவில் 27.07.2025 ஞாயிற்றுகிழமை நடைபெற்ற தனியார் நிகழ்வு ஒன்று 38 சிறுவர்கள் உட்பட 184 கனடா வாழ் காரைநகர் மக்கள் கலந்து கொள்ள 7,000 டொலர்கள்(15 இலட்சம் ரூபாய்கள்) செலவில் நடைபெற்று முடிந்துள்ளது.
1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனடா காரை கலாசார மன்றம் 25 ஆண்டுகளிற்கு மேலாக ஆயிரத்திற்கு மேற்பட்ட கனடா வாழ் காரை மக்களை ஒன்றிணைத்து நடாத்தி வந்த “காரை ஒன்றுகூடல்” பூங்கா நிகழ்வு தற்போதைய நிர்வாக சிக்கல்கள் காரணமாக நடாத்தப்படமுடியாத நிலையில், அதே நிர்வாகத்தை சேர்ந்த சிலர் தமது சுய தேவைகளிற்காக நடாத்த வேண்டிய தேவைகளிற்காக நடாத்தி முடித்திருக்கிறார்கள்.
கனடா காரை கலாசார மன்றம் கடந்த 35 ஆண்டுகளில் 25 க்கும் மேற்பட்ட ஒன்றுகூடல்களை நடாத்தி தனக்கென ஒரு அடையாளத்தை கனடா வாழ் காரைநகர் மக்களிடத்தில் மட்டுமன்றி கனடா வாழ் அனைத்து தமிழ் மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தடம் பதித்துள்ளது.
28.04.2024 கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபையானது மன்றத்தையும் நிர்வாகத்தையும் நடாத்த முடியாதளவில் தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் நிர்வாக சபையினர் தனித்தனியாக செயற்பட வேண்டிய தேவைகள் ஏற்பட்டதன் காரணமாக “காரை ஒன்றுகூடல்” என்கிற ஊர் ஒற்றுமையின் சின்னமாக விளங்கிய பெயரை பயன்படுத்தி தனிப்பட்ட சிலர் தமது செயற்பாடுகளை 184 பேருடன் 7,000 டொலர்கள் செலவில்(15 இலட்சம் ரூபாய்கள்) நடாத்தி முடித்துள்ளார்கள்.
“இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன..!” என்ற ரீதியில் ஏதோ ஒரு நாள் கொண்டாட்டம் அதில் “எரிகிற நெருப்பில் பிடுங்கினது இலாபம்” என்பது போல “திண்டோமோ… குடிச்சோமா..” ஊராவது மண்ணாவது என்று போனவர்களா இந்த 64 குடும்பங்களை சேர்ந்த 184 பேர்களும் அல்லது எதுவுமே தெரியாமல் கண்ணைக்கட்டி கூட்டிக்கொண்டு போனவர்களா இவர்கள் என்பதை காலம் பதில் சொல்லும்.
இதில் வேடிக்கையும் சிந்திக்கப்பட வேண்டிய விடமும் எதுவானால் 2024.04.28 க்கு முன்னர் இரண்டு ஆண்டுகளாக மன்றத்தை நிர்வகித்து தமது நிர்வாக சபை காலத்திற்கான கணக்கறிக்கையினை தமது நிர்வாக சபை முடிவின் போதும், நிர்வாக சபை நிறைவுற்று ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னும் தமது நேர்மையையும் நாணயத்தையும் நிலைவுறுத்தும் வகையில் இன்றுவரை கணக்கறிக்கையினை மன்றத்தின் அங்கத்தவர்களிற்கு சமர்ப்பிக்க தவறியவர்கள் என்பது வேடிக்கையிலும் அதிஉச்ச வேடிக்கை.
“யாரொடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்.. ஆண்டவா நின் அருள் இல்லையானால்..!



