12.07.2026 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காரைநகர் அபிவிருத்தி சபை பொதுக்கூட்டம் போதிய அங்கத்தவர்கள் வரவின்மையால் பிற்போடப்பட்டது.
28.09.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபையின் தலைவர் திரு.K.K.சுப்பிரமணியம் குருபரன் அவர்களை இராஜினாமா செய்ய வைத்து, உபதலைவராக தெரிவு செய்யப்பட்ட திரு.தேவலிங்கம் பரணீதரன் அவர்களை பதில் தலைவராக கொண்டு இயங்கும் காரைநகர் அபிவிருத்தி சபைக்கு முறைப்படி தலைவரை தெரிவு செய்வதற்காக கூட்டப்பட்ட இன்றைய பொதுக்கூட்டத்தில் போதிய அங்கத்தவர் வரவின்மையால் தலைவர் தெரிவிற்கான கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. தொடர்ந்து பதில் தலைவர் திரு.தேவலிங்கம் பரணீதரன் தலைமையில் காரைநகர் அபிவிருத்தி சபை தனது பணிகளை தொடரும்.
இப்பொதுக்கூட்டத்தில் தலைவர் தெரிவிற்காக தகுதியுடைய அங்கத்தவர்களாக 95 அங்கத்தவர்கள் இருக்கின்ற போதிலும் தற்போதைய நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட 15 அங்கத்தவர்கள் மட்டுமே இன்றைய பொதுக்கூட்டத்திற்கு சமூகம் அளித்திருந்ததாகவும், கோரம் பெறுவதற்காக குறைந்த பட்சம் 55 அங்கத்தவர்கள் சமூகமளித்திருந்தால் மட்டுமே தலைவர் தெரிவு நடைபெற்றிருக்கும் என்பதும் தற்போதைய யாப்பு விதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
காரைநகர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக விளங்கிவரும் காரைநகர் அபிவிருத்தி சபை பிரதேச செயலர் அவர்களின் ஆலோசனைகளிற்கு அமைய முறையான தலைமைப்பதவியை அமைத்துக்கொள்ள தொடர்ந்தும் வற்புறுத்தும் என்பதுடன் அதற்கு அமைய குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு முறையாக தலைவர் தெரிவு இடம்பெற வேண்டும் என்பதும் பிரதேச செயலகத்தின் பொது அமைப்புக்களிற்கான பொதுவான விதி முறை என்பதும் அறிந்து கொள்ளத்தக்கது.
2023ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிர்வாக சபை தெரிவிற்கான பொதுக்கூட்டங்கள் பலவற்றிலும் தலைவர் பதவிக்கான போட்டிகள் இல்லாத நிலையில் தலைவராக திரு.குருபரன் சுப்பிரமணியம் வரக்கூடாது என்கிற நிலமைதான் இருந்து வருகிறது. ஆனாலும் 2023ம் ஆண்டு அங்கத்தவர்களாக கருதப்பட்ட 95 அங்கத்தவர்கள் மட்டுமே தற்போதைய நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்ய தகுதியடைய அங்கத்தவர்களாக கருதப்படுவதால், 2023ம் ஆண்டு திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்களது ஆதரவாளர்கள் 35க்கும் மேற்பட்டவர்கள் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக யாப்பு விதிகளிற்கு அமைய அங்கத்தவர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுடன் ஆயுள்கால அங்கத்தவர்களாக கருதப்படும் 60 வரையான அங்கத்தவர்களில் பெரும்பகுதியினர் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசித்து வருவதாலும் தற்போதைய நிர்வாக சபைக்கான முறைப்படியான தலைவரை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டத்தில் கோரம் பெறுவதற்கான அங்கத்தவர்களை பெற்றுக்கொள்ள திரு. குருபரன் சுப்பிரமணியம் அவர்களது ஆதரவாளர்கள் சமூகமளிக்க வேண்டும் என்பதுடன் ஆயுட்கால அங்கத்தவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்களும் சமூகமளிக்க வேண்டும் என்பது இனிவரும் அடுத்த ஓராண்டுக்குள் சாத்தியமற்ற ஒன்றாகவே கணிக்கப்படுகிறது.
எனவே பதில் தலைவர் திரு.தேவலிங்கம் பரணீதரன் தலைமையில் இயங்கிவரும் தற்போதைய நிர்வாகமானது 2027 / 2028 இல் அமையப்போகும் அடுத்த நிர்வாக சபையை கருத்தில் கொண்டு காரைநகரில் வதியும், காரைநகர் அபிவிருத்தி சபையின் வளர்ச்சியில் அக்கறையுடன் செயற்படுபவர்களையும், பொதுக்கூட்டத்திற்கு அக்கறையுடன் சமூகமளிக்க கூடியவர்களையும் 2026, 2027 ம் ஆண்டுகளில் அங்கத்தவர்களாக இணைத்துக்கொள்ள வேண்டும்.
காரைநகர் வாழ் மக்களே சின்னாலடியில் அமைந்துள்ள காரைநகர் அபிவிருத்தி சபை காரியாலயத்திற்கு சென்று தங்களது அங்கத்துவ விண்ணப்ப படிவத்தை நிரப்பி அங்கத்துவ பணத்தை செலுத்தி அங்கத்தவராக இணைந்து கொள்ளுங்கள். காரைநகர் அபிவிருத்தி சபையில் அங்கத்தவர்களாக இணைந்து கொள்பவர்களிற்கு மட்டுமே காரைநகர் அபிவிருத்தி சபை பதில் சொல்லவும் பாத்திரமாகவும் சட்டப்படி விளங்கி வருகிறது….! வீதியில் நின்று விமர்சிப்பவர்களிற்காக அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
காரைநகர் அபிவிருத்தி சபை தற்போதைய நிர்வாக சபை தங்களை அங்கத்தவராக இணைத்துக்கொள்ள தவறும் பட்சத்தில் காரைநகர் பிரதேச செயலகத்தில் DS(பிரதேச செயலர்) இடம் முறையீடு செய்யலாம்.
காரைநகரில் பிறந்தவர்கள், காரைநகரில் திருமணம் முடித்தவர்கள், அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் காரைநகரில் இடம் பெயர்ந்து வாழ்பவர்கள் அனைவரும் காரைநகர் அபிவிருத்தி சபையில் அங்கத்தவராக இணைந்து கொள்ள தகுதியானவர்கள் என்று யாப்பு தெரிவிக்கின்றது.
2027 / 2028 இல் கட்டுப்பாடற்ற வகையில் அனைத்து தரப்பினரும் இணைந்து ஜனநாயக ரீதியில் புதிய நிர்வாக சபையை அமைப்பதற்கான முயற்சியை ஒவ்வொரு காரை மக்களும் கவனத்தில் கொண்டு செயற்படவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது ‘எனது ஊர் காரைநகர்’
நன்றி.


