சொல்வதை கேளுங்கள்;
உள்ளூராட்சி சபை தேர்தல்: காரைநகர் பிரதேச சபை.
சுயமாக சிந்தியுங்கள்.
உள்ளூராட்சி சபை தேர்தல் அரசியல் அல்ல மாறாக ஊரின் அபிவிருத்தி.
காரைநகரில் ஆறு பிரதேசங்கள், 13 ஆசனங்கள். உங்கள் பிரதேசத்தில் வேட்பாளராக நிற்பவர் உங்கள் பிரதேசத்தின் தற்போதைய பிரச்சனை என்னவென்பதை முதலில் அறிந்து கொண்டாரா..? அவ்வாறாயின் அதற்குரிய தீர்வினை பெற்று தருவாரா..?
காரைநகர் பிரதான வீதியின் சக்கலாவோடை பகுதிக்கான தீர்வு என்ன..? களபூமி சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலை இன்னமும் 4 ஆண்டுகளில் மூடப்படவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது… அதற்கான தீர்வு என்ன..?
நீலிப்பந்தனை அம்மன் கோயில் பகுதி மாரி காலத்தில் மக்கள் போக்குவரத்திற்கு முடியாத நிலையில் தடைப்படுகிறது, பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயில்கள் குடமுழுக்கிற்கான திட்டமிடலின்றி மூடப்பட்டுள்ளன, காரைநகர் வயல் காணிகளில் பெரும்போகம், சிறுபோகத்திற்கு தேவையான மழை பெய்தும் விவசாயிகள் முழுமையான பயனை இன்னும் பெறவில்லை. காரணம் கட்டாகாலி கால்நடைகள் மற்றும் வெளியூர்களில் வசிக்கும் காரைநகர் வயல் காணி உரிமையாளர்கள்…. இதற்கான தீர்வு என்ன..?
வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள் மூலம் பெரும் பயன் பெற்றுவருவதற்கு உறுதுணையாக செயற்பட்ட ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ செயலிளந்துள்ளது, அதனை மீள உரிய முறையில் இயக்குவதற்கு வேட்பாளர்கள் என்ன தீர்வை கொண்டு வருவார்கள்..?
உங்கள் பிரதேசங்களில் வேட்பாளராக நிற்பவர் கடந்த காலங்களில் காரை மக்களிற்காகவும் காரை மண்ணிற்காகவும் தனிப்பட்ட வகையில் என்ன செய்தார்…?
குறைந்த பட்சம் காரை மண்ணின் நற்குடிமகனாகவேனும் திகழ்ந்தாரா…? தனது சொந்த பொக்கற்றுக்குள் இருந்து ஒரு பைசாவேனும் செலவு செய்தாரா..?
உள்ளூராட்ட்சி சபை தேர்தல் ஒன்றும் காரைநகர் மக்களிற்கு அரசியல் தீர்வை பெற்றுத்தர போகின்ற தேர்தல் அல்ல, இது காரை மண்ணின் அபிவிருத்திக்கான தேர்தல்.
காரை மண்ணின் மீதும், மக்களின் மீதும், காரை மாதாவின் பெயரில் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள் மட்டுமே மண்ணை அலங்கரிக்க பதவிக்காக நீங்கள் தெரிவு செய்ய போகின்றீர்கள்.
மொழி அரசியல், மாகாண அரசியல், மத அரசியல், பிரதேசவாத அரசியல், சாதி அரசியல் என இவை அனைத்தையும் தாண்டிய வகையில் உங்கள் பிரதேசத்தில் உங்கள் நாளாந்த நடைமுறை வாழ்க்கையில் நீங்கள் படும் சிரமங்களை நன்கு அறிந்த ஒருவர் அதற்கான தீர்வை பெற்றுத்தர முடியும் என நீங்கள் நம்பும் ஒருவருக்கான அங்கீகாரம் தான் உள்ளூராட்சி சபை தேர்தல்.
இது எந்த அரசியல் கட்சிகளிற்குமான தேர்தல் அல்ல. மத்தியில, மாகாணத்தில, மாவட்டத்தில எந்த கட்சி ஆண்டாலும் பரவாயில்லை. உங்கள் பிரதேசத்தில் உங்களிற்காக பணி செய்பவர் யார் என்பதை அறிந்து கொண்டு கட்சி, மத, மொழி, சாதி வேறுபாடுகளிற்கு அப்பாற்பட்டு உங்கள் வோட்டுங்களை வழங்குங்கள்.
உதாரணமாக.. உங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள குப்பையை யார் அகற்றுவார்கள் என்றும், உங்களது வீதியில் இரவு வெளிச்சம் இல்லாத நிலையில் அதற்காக யார் உங்களிற்கு வெளிச்சத்தை வழங்குவார்கள் என்றும்,
உங்களிற்காக யார் இறங்கி வந்து சேவை செய்வார்கள் என்று மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.
உள்ளூராட்சி சபைகளிற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி மூலம் எதை செய்வார்கள் என்றும், உங்கள் பிரதேசத்தின் எந்த குறையினை நிவர்த்தி செய்ய பிரதேச சபையில் பரிந்துரைப்பார் என்பதையும், உங்கள் பிரதேச மக்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளவரா என்பதை மட்டும் கண்டு கொண்டு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.
கொழும்பிலை மழை பெய்தால் காரைநகரில் விதைக்கலாம் என்றும், யாழ்ப்பாணத்திலை காற்று வீசினால் தரவையில பட்டம் விடலாம் என்றும், முள்ளிவாய்க்காலில் ஓடிய இரத்தம் காரைநகரிலும் மணக்கிறது என்றும் அரசியல்வாதிகள் கதையளப்பார்கள். அதற்கும் இதற்கும் எள்ளளவேனும் சம்பந்தம் இல்லை என்பதை அறவே உணர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் பிரதேசத்தில் வீதி சரியில்லை, விளக்கு சரி இல்லை, ஆடு சரியில்லை, மாடு சரியில்லை, பள்ளிக்கூடம் சரியில்லை, பாதை சரியில்லை என்று வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் முறையிட தெரிந்த உங்களிற்கு உங்கள் மீது அக்கறை உள்ள ஒருவரிற்கு வோட்டு போட தெரிய வேண்டும்.
இது அரசியல் அல்ல. இது அறிவுரையும் அல்ல. உள்ளூராட்சி சபை தேர்தல் என்பது காரைநகரிற்குள் மட்டும் உங்களிற்காக உழைக்கக்கூடியவரை தெரிவு செய்வது மட்டுமே. கட்சிக்காக, சாதிக்காக, மதத்திற்காக,
நிறத்திற்காக, கலருக்காக ஏமாந்து விடாதீர்கள் என்பதை உணர்வோடும் உரிமையோடும் சொல்கிறேன்.
பெற்றோரை, பெரியோரை, ஆசிரியர்களை, குருவை, கடவுளை, சகமனிதனை மதிக்க தெரியாத ஒருவராலும் ஊரிற்காக பணி செய்ய முடியாது. முகநூலில், சமூக வலைத்தளங்களில் அவதூறு, ஆபாச, தூசண வார்த்தைகள் பேசுபவர்களால் அறவே ஊர்ப்பணி செய்ய முடியாது.
காரைநகர் பிரதேச சபையில் 6 பிரதேசங்களைக்கொண்ட 13 ஆசனங்களிற்காக நூற்றிற்கு மேற்பட்டவர்கள் போட்டியிடலாம் எனவும், 6,000 முதல் 7,000 வாக்காளர்கள் வாக்குகளை போடுவார்கள் எனவும் கருதப்படுகிறது.



