காரைநகரில் இன்று உண்மையை சொல்கிற செய்தியாளர்கள் இல்லையா..? அரசியல் விமர்சகர்கள் இல்லையா..?
மேன்மைதங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் வந்தது செய்தியல்ல, காரைநகர் வந்தது பிரதான செய்தி. ஏன்… எதற்காக..? வெறும் பிரதேச சபை தேர்தல் பிரச்சாரத்திற்காகவா…!
அதிக பெரும்பாண்மை பெற்று பராளுமன்றத்தில் ஆட்சியமைத்த அரசின் பிரதம மந்திரி 10,500 மக்கள் வாழும் காரைநகர் தீவுக்கு வந்திருக்கிறார்..?
ஏன்…. எதற்காக…?
ஊஞ்சலில அமர்ந்து கூப்பிட்டவர் வீட்டில் விருந்து சாப்பிடவா..?
ஒருவேளை பிரதேச சபை தேர்தல் பரப்புரைக்காக வந்திருந்தால்… என்ன வாக்குறுதிகளை வழங்கினார்…!
அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களால் காரைநகர் தனியானதொரு பிரதேச அலகாக கொண்டுவரப்பட்டதனால் இன்று மேன்மை தங்கிய பிரதமர் காரைநகரிற்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இன்று மட்டுமல்ல இனிவரும் எந்த தேர்தல் களமாக இருந்தாலும் காரைநகர் அதில் முக்கிய பங்கு வகிக்கும்.
பாராளுமன்ற்ற தேர்தல் ஆனாலும் வட்டுக்கோட்டை தொகுதி, தீவகம், யாழ்ப்பாணம் என எந்த வரையறைக்குள் காரைநகர் மக்களை கொண்டு வந்தாலும் பாராளுமன்றத்திற்கு யாழ்மாவட்டம் சார்ந்து ஒரு MP ஐ அனுப்புவதில் காரைநகர் மக்களின் பங்கு என்றும் எப்போதும் இருந்து வருகிறது.
அமரர் அமிர்தலிங்கத்தை தோற்கடித்து காரைநகரை சேர்ந்த ஆ. தியாகராசா அவர்களை வெற்றிபெற செய்த அன்றே காரைநகர் மக்களின் அரசியல் இலங்கை அரசியலில் பதிவானது.
ஜே.ஆர். ஜெயவர்த்தனா காரை இந்து மைதானத்தில் ஹெலியில் வந்திறங்கி சக்கலாவோடை பள்ளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது எனக்கு 9 வயது. காரை இந்து மைதானத்திற்கு ஹெலி பார்க்க போனவர்கள் நாங்கள். அன்று முதல் இன்று வரை 40,000 காரைநகர் மக்கள் வாழ்ந்தாலும் அதில் நாலில் ஒரு பகுதி 10,000 மக்கள் வாழ்ந்தாலும் இலங்கை அரசியலில் காரைநகர் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளது.
அது அதற்கு பின்னர் வந்த பிரதேச சபை தேர்தலுக்கு பிரதமரை வரவழைத்துள்ளது. பிரதமரை வரவழைத்து ஊரிற்காக என்னத்தை செய்தார்கள் வரவழைத்தவர்கள்…?
ஒருவேளை இருந்ததை இருந்தபடியே காட்டியிருந்தாலும் உதவாத றோட்டுகளிற்கு றோட்டு போடச்சொல்லியிருப்பார்.
காரைநகர் மக்களே… காரைநகர் பிரதேச சுற்று வட்டார வீதியும் கசூரினா கடற்கரைக்கான புதுறோட் வீதியும் காரைநகர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டதல்ல, அதற்கும் மேலாக RDA எனப்படும் மத்திய அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. அதனை காரைநகர் தனியான பிரதேச அலகாக உருவாகுவதற்கு முன்னரே கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் அப்போதைய UNP அரசாங்கத்தின் ஊடாக நிறைவேற்றியிருந்தார்.
வரலாறுகளையும் இலங்கையின் அரசியலையும் தெரியாத கன்றுக்குட்டிகளை கொண்டு வந்து காரைநகரில் உள்ளூராட்சி சபை தேர்ரதலில் ஆட்சி அமைத்துவிட முடியாது.
NPP சார்பாக அம்மையாரை கூட்டி வந்தவர்களிற்கு தெரியாதா…. காரைநகர் சுற்று வட்ட வீதி பிரதேச சபைக்கு உட்பட்டதல்ல அது RDA க்கு உட்பட்டது. சுற்று வட்ட வீதி மட்டுமல்ல சுற்றுவட்ட வீதியுடன் இணைந்து கசூரினா கடற்கரைக்கு செல்லும் வீதியும் RDA இன் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால் சாம்பலோடையில் இராணுவமுகாம் அமைந்துள்ளதால் காப்பற் வீதி போட RDA இற்கு தெரிந்த விடயம் காரைநகர் மக்களின் பயன்பாட்டிற்காக சுற்றுவீதியை கார்ப்பற் வீதியாக போடவைக்க தெரியவில்லையே… காரணம் வரலாறுகளையும் கடந்தகால அரசியலையும் தெரிந்து கொண்டு வருபவர்கள் அல்ல இப்போதைய அதிரடி வேட்பாளர்கள்.

குறைந்த பட்சம் கலாநிதி ஆ.தியாகராசா, அமரர் தியாகராசா மகேஸ்வரன் ஆகியோரது அரசியல் பணிகளையாவது அறிந்து கொண்டு காரைநகரில் அரசியலில் ஈடுபடுபவர்கள் காரைநகர் மக்களிற்காக ஏதோ செய்ய முனைகிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.
1980 ம் ஆண்டுகளிற்கு பின்னர் வந்த மகேஸ்வரனும், 1960 களிற்கு பின்னர் காரைநகரில் அரசியலுக்கு வந்த கலாநிதி.ஆ.தியாகராஜா அவர்களையும்… அவர்களால் காரைநகரிற்கான கோடுகள் எவ்வாறு திடமாக போடப்பட்டுள்ளன என்பதையும் அதை அறிந்தவர்கள் தான் அன்றும் இன்றும் தேர்தல் காலங்களில் காரைநகரிற்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.
ரணில் விக்கிரமசிங்க பலமுறை காரைநகரிற்கு வருகை தந்துள்ளார், சந்திரிக்கா அம்மையர் வருகை தந்துள்ளார்கள். எந்த கட்சியானாலும், எந்த தேர்தல் ஆனாலும் எங்களூர் காரைநகரிற்கு வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் வந்தவர்கள் என்ன சொன்னார்கள்..? என்னத்தை கண்டு கொண்டார்கள்..? என்ன செய்வதாக வாக்கு கொடுத்தார்கள்…? என்பது தொடர்பான அறிக்கை வெளியானதா..?
பிரதமரின் வருகைக்காக பூசி மொழுகின வீதியும், யாரோ ஒரு தனியார் வீட்டில் ஊஞ்சலில் ஊசலாடும் பிரதமரையும் பார்க்கும் போது போர்ட்டிக்கோவுடன் சேர்ந்து ஊஞ்சல் விழுந்துவிடப்போகிறது என்ற தற்காலிக அறிவைத்தவிர வேறு எதுவும் வந்துவிடவில்லை.
அம்மா…. பிரதமர் அம்மா… காரைநகரிற்கு ஏன் எதற்காக வரவேண்டும் என்று தெரிந்த உங்களிற்கு… என்ன செய்ய வேண்டும் என சொல்லவதற்கு ஆட்களும் இல்லை அதனை இப்போதைய சூழ்நிலையில் உங்களால் அறிந்து கொள்கிற நேரமும் இல்லை. எங்கள் ஊர் காரைநகரிற்கு வந்ததற்கு நன்றி. பார்க்காமல் போன பல விடயங்கள் உண்டு. பார்ரத்தவற்றிலும் உங்களிற்கு காட்டியவை பல போலியானவை. ஒரு நாள் கூத்துக்காக வழிக்கப்பட்ட மொட்டைகள்.
உள்ளூராட்சிகளை ஊரவர்களிடமே விட்டுவிடுங்கள். சர்வவல்லமையும், சர்க்கார் ஆட்சியும் உங்களிடம் இருக்கட்டும். இது எங்கட ஊர், எங்களிற்கு தான் தெரியும் …
எங்கள் ஊரைப்பற்றி தெரிந்திருந்தால் சொல்லிவிட்டு வந்திருப்பீர்ரகள்… வெள்ளையடிக்காதீர்கள்…. பூசி மொழுகாதீர்கள்.. உங்கள் நிலமை எனக்கு தெரியும் என ஊரிற்கு இன்று தேவைப்படும் உடனடி தேவைகளில் இரண்டு மூன்றையாவது சொல்லியிருப்பீர்கள்.
ஊரிற்கு வந்து ஊஞ்சலில் உல்லாசமாக இருந்ததையல்லோ காட்டோ காட்டென்று காட்டுகிறார்கள்.
காரைநகரில் ஹரணி அம்மா… யாராவது உண்மையை சொல்ல முன்வாருங்கள். காரைநகரில் சர்வவல்லமை பொருந்துய இலங்கையின் பிரதமர் ஒருநாள் செலவிட்டுள்ளார்… ஆனால் இரண்டு நாளாகியும் என்ன நடந்தது என்று ஊடக செய்திகள் வெளிவரவில்லை. ஏன்… ஏன்… ஏன்..



