காரைநகர் பிரதேச சபையில் மக்கள் வளங்கிய தீர்ப்புக்கு ஏற்ப கூட்டாற்சி சாத்தியமாகிறது..!
19.06.2025 காரைநகர் பிரதேச சபைக்கான முதலாவது அமர்வு நடைபெறவுள்ளது. 06.05.2025 அன்று நடைபெற்ற பிரதேச சபை தேர்தலில் காரை மக்கள் வளங்கிய வாக்குகளின் அடிப்படையில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த முதல் மூன்று இடங்களில் தலா இரண்டு ஆசனங்களைப்பெற்ற சுயேட்சை குழு(வண்டில்), தமிழ் மக்கள் கூட்டணி(மான்), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்(சைக்கிள்) மூன்றும் இணைந்து கூட்டாக 6 ஆசனங்களைக்கொண்டு ஆட்சியமைக்க ஒப்பந்தம் கைச்சாத்தாகி உள்ளது.
காரைநகர் பிரதேச சபையில் 11 ஆசனங்கள் உள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தி(திசைகாட்டி 2), ஐக்கிய தேசிய கட்சி(யானை 2), தமிழரசு கட்சி(வீடு 1) என்பன தமது நிலைப்பாட்டினை 19.06.2025 இன்று வியாழக்கிழமை காரைநகர் பிரதேச சபையில் வெளிக்கொணருவார்கள்.
காரைநகரில் சாதியம், பிரதேச வேறுபாடுகள் இருப்பதாகவும் அதனால் பிரதேச சபையில் கூட்டு சேர்ந்து ஆட்சியமைப்பது சிரமமானதொரு விடயமாக கருத்து வெளியிட்டுவரும் பிரிவினைவாதிகள் பலரது கருத்துக்களை தவிடுபொடியாக்கி, காரைநகரில் அதிகூடிய வாக்குகளைப்பெற்ற சுயேட்சை குழுவிற்கு முதல் 16 மாதங்கள் தலைமைதாங்கி தவிசாளராக ஆட்சியமைக்கவும், இரண்டாவது 16 மாதங்கள் அடுத்ததாக அதிகூடிய வாக்குகளை பெற்ற மான் சின்னத்தின் தலைமையிலும், அடுத்து 16 மாதங்கள் சைக்கிள் சின்னத்தின் தலைமையிலும் காரைநகர் பிரதேச சபையினை நடாத்துவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரிவினையை விரும்புபவர்கள் நம்பிக்கையற்ற வகையில் இன்னமும் தமது பிரிவினைவாத கருத்துக்களையும் மறைமுகமாக சாதியம், பிரதேசவாத கருத்துக்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு, மக்கள் வளங்கிய வாக்குகளின் அடிப்படையில் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்க தவறி வருகிறார்கள்.
கூட்டணியாக ஆட்சியமைக்கும் பட்சத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு காரைநகர் மக்களின் அதிகூடிய வாக்குகளை பெற்றவர்களிற்கே தவிசாளர் பதவி வளங்கப்படவேண்டும் என்பதை உரியவர்களிற்கு நேரடியாக எனது கருத்தை தெரிவித்து வந்துள்ளதன் பயனாகவும், போட்டியிட்டவர்கள், வெற்றிபெற்றவர்களிற்குள்ளேயும் முரண்பாடுகள் இருந்தாலும் கட்சி மேலிடங்களும், பொறுப்பானவர்களும் சாதியம், பிரதேசவாதங்களிற்கு அப்பாற்பட்டு இவ்வாறானதொரு கூட்டாட்சிக்கு வந்துள்ளதானது மிகமிக வரவேற்கத்தக்கது.
ஒடுக்கப்பட்டோம், வஞ்சிக்கப்பட்டோம் என தமது கருத்துக்களை முன்வைத்து சுயேட்சைகளாக களம் இறங்கியவர்களிடம் ஆட்சியின் தலைமையினை கையளிப்பதுடன் மட்டுமல்லாது வேறுபாடுகள் அற்ற வகையில் பிரதேச சபையினை சுயேட்சைகளால் நிர்வகிக்க முடியுமா என்பதனையும் அல்லது இதுவரை காலமும் பிரிவினைவாதிகளால் மட்டும் காரைநகரில் சாதியம், பிரதேச வேறுபாடுகள் பற்றி பேசப்பட்டதா என்பதனை பறைசாற்றவும் முடியும்.
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியும் ” தான் குற்றினால் தான் அரிசியாகும்” என்ற வகையில் ஆளும் கட்சிக்கு எதிரான கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைத்தால் போதிய ஆதாரங்களுடன் பிரதேச சபைக்கான நிதி உதவிகள் கோரப்பட்டால் அலட்சியம் செய்து கொள்ளுமா என்பதனையும் காரைநகர் பிரதேச சபை அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில் புரிய வைக்கும்.
ஆனாலும்…. ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி மட்டும் காரைநகர் பிரதேச சபையில் எதிர்க்கட்சியாக செயற்படும் என்பது உறுதியானாலும் இரண்டு ஆசனங்களை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியும், ஒரு ஆசனத்தை கொண்டுள்ள தமிழரசு கட்சியும் என்ன பங்கு வகிக்க போகின்றன என்பது இன்று இன்னும் சில மணி நேரங்களில் காரை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
காரைநகரிற்கு வெளியே, பொன்னாலை பாலத்திற்கு அப்பால் அரசியலும் அரசியல்வாதிகளும் எந்த முடிவுகள் எடுத்தாலும் காரை மக்கள் நாம் சாதியம், பிரதேச வேறுபாடுகள் அற்ற நிலையில் அதே காரைநகர் மக்கள் தேர்தல் மூலம் வளங்கிய தீர்ப்புகளிற்கு அமைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றிற்கு இப்போது எடுத்த தீர்க்கமான முடிவு போன்று இனிவரும் அடுத்த நான்கு ஆண்டுகளிலும் ஒற்றுமையுடனும் நல்லெண்ணத்துடனும் பிரதேச சபை அதிகாரத்தின் கீழ் இன்னும் எந்த வகையான அபிவிருத்திகளை காரை மண்ணிற்கு வளங்க முடியும் என்பதை கூட்டாக சேர்ந்து தீர்மானிப்போம்.
ஒரு ஆசனத்தை கொண்டுள்ள தமிழரசு கட்சி நிச்சயமாக ஆளும் கூட்டணியுடன் சேர்ந்து இயங்கவும், ஐக்கிய தேசிய கட்சி 2 ஆசனங்களை கொண்டுள்ள நிலையில் கட்சியின் கொள்கை அடிப்படையில் அவர்களும் கூட்டணியுடன் சேர்ந்து எம்மண்ணை வளப்படுத்துவார்கள் என நம்புகிறோம்.





