உண்மைகள் என்றும் உறங்குவது இல்லை.
வடமாகாணத்தின் முன்னாள் கல்விப்பணிப்பாளர் திரு. ஜோன் குயின்ரஸ் அவர்களது 10.11.2025 அன்று ஏற்பட்ட திடீர் மரணம் ஏற்கமுடியாத வியப்பில் ஆழ்த்தியது.
வடமாகாண கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிய கடந்த வருடம் காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர்களான எங்களின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தவர்.
சொல்லவேண்டிய விடயங்களை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லவும் வேண்டும்.
2024 Feb 05, அன்று காரைநகர் இந்துக்கல்லூரிக்கு 1973 இல் பிறந்து 1989இல் க.பொ.த. சாதாரண பரீட்சை எழுதிய பழைய மாணவர்களினால் இரண்டு புதிய வகுப்பறைகள் 90 இலட்சம் பெறுமதியில் கட்டி வழங்கப்பட்டது. ஆனால் அந்த கட்டிடத்தில் கட்டி வழங்கப்பட்டவர்கள் சார்பாக நினைவு கல் அமைக்க கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்தது. அதற்கு காரணமாக வடமாகாண கல்வி அமைச்சு அனுமதி வழங்க மறுத்துள்ளதாக அதிபர் அவர்களால் எங்களிற்கு தெரிவிக்கப்பட்டது.
இருந்த போதிலும் தனித்துவமாக புதிதாக அமைக்கப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பாடசாலைக்கான கட்டிடங்களில் கடந்த பல தசாப்தங்களாக கட்டிக்கொடுத்தவர்கள் சார்பாக நினைவுக்கல் பதிக்கப்பட்டு வந்ததும் அதன் வரலாற்று உண்மைகளையும் தெரிந்து கொண்டவர்களாக 1973 பழைய மாணவர்கள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை அணுக தீர்மானித்தனர்.
திறப்பு விழாவிற்கு நான்கு நாட்கள் முன்னதாக கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய திரு.ஜோன்ஸ் குயின்ரஸ் அவர்களது யாழ் நல்லூரில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திற்கு முன்னேற்பாடுகள் எதுவும் இன்றி தீசன் திரவியநாதன் ஆகிய எனது முகதாவில் சென்று ஆலோசனை கேட்க தீர்மானித்தோம்.
சென்றோம். உண்மையை சொன்னோம். தனது அன்றைய பணிகளை முடித்துக்கொண்டு எம்மால் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட வருவதாகவும் தெரிவித்தார். மாலை நாலு மணியளவில் எம்முடன் காரைநகர் இந்துக்கல்லூரிக்கு வருகை தந்து, திறப்பு விழாவிற்கு நான்கு நாட்கள் முன்னர் கட்டிடப்பணிகளை பார்வையிட்டதுடன் எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க அதிபர் அவர்களிற்கு ‘கட்டளை’ பிறப்பித்தார்.
அதுமட்டுமன்றி அன்று வடமாகாண கல்விப்பணிப்பாளராக விளங்கிய திரு.ஜோன்ஸ் குயின்ரஸ் அவர்கள் அதிபர் அவர்களிற்கு கூறிய வார்த்தைகள் இன்னமும் கேட்ட எங்களிற்கு காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
“வெளிநாட்டில இருந்து பொடியள் காசை கொடுத்து கட்டிடம் கட்டி தருகிறாங்கள், அவங்கள் என்ன கேட்கிறாங்களோ அனைத்தையும் செய்து கொடுங்கள், அவங்கள் எதையும் எடுத்துக்கொண்டு போக கேட்கவில்லை” இது தான் அன்று திரு. ஜோன்ஸ் குயின்ரஸ் அவர்கள் எங்களுடைய கல்லூரி அதிபருக்கு சொன்ன வார்த்தைகள்.
05.022024 அன்று வெகுவிமர்சையாக இரண்டு மாடிகளைக்கொண்ட இரண்டு வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. 29 பழைய மாணவர்களின் 90 இலட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட ‘பொன்னகவை’ கட்டிடம் பாடசாலை நிர்வாகத்தினரிடம் நினைவுக்கல் நாட்டி திறப்பு விழா செய்து கையளிக்கப்பட்டது.
வடமாகாண கல்வி அமைசின் செயலாளராக கடமையாற்றிய திரு. ஜோன்ஸ் குயின்ரஸ் அவர்கள் தனது பணிக்காலத்தின் போது எவ்விதபிரதியுபகாரங்களையும் எதிர்பாராமல் தனது பணியினை செய்துள்ளார் என்பதனை 1973இல் பிறந்த காரை இந்துவின் பழைய மாணவர்களான நாம் கண்டு கொண்டோம். அன்னாரின் பிரிவை ஏற்க மறுக்கிறது மனது. தனது 60வது வயதில் தனது பணியின் போது தான் வணங்கும் தெய்வத்தின் காலடியில் சென்றடைந்துள்ளார். அன்னாரது ஆத்மா நிரந்தர பேரின்பம் பெற நாமும் வேண்டுவோமாக.
Sir…We Salute for your Services
Rest in Peace.



