கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் 24.09.2022 முற்பகல் 10.00 மணிக்கு Scarborough Civic Centre மண்டபத்தில் சங்கத்தின் உபதலைவர் திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
செயற்பாட்டு அறிக்கை, வரவு-செலவு அறிக்கை என்பன முறையே செயலாளர் திரு.ஆறுமுகம் சின்னத்தம்பி, பொருளாளர் திருமதி இந்திரா ஜெயானந்தன் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டு பொதுச் சபையினால் திருத்தங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டன.









தலைவர் முன்னுரையைத் தொடர்ந்து சங்கத்தினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத் திட்டங்கள் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் ஆகியன தொடர்பில் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் உறுப்பினர்கள் மத்தியில் இடம்பெற்றன.
மன்றத்திற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழங்குத் தொடர்பில் தலைவர் விளக்கமளித்ததுடன் இவ்வழக்கினை கையாள்வதற்கு திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன், திரு.கந்தையா கனகராசா, திரு.தம்பிஐயா பரமானந்தராசா ஆகியோர் பொதுச் சபையினால் நியமனம் செய்யப்பட்டனர்.
நடைமுறையில் நிர்வாகரீதியாக ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு சங்கத்தின் யாப்பினை மறுசீரமைத்து தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு பொதுச் சபை அங்கீகாரமளித்தது. புதிய நிர்வாக சபைத் தெரிவினை திட்டமிடல் போசகர் சபை உறுப்பினர் திரு.சோமசுந்தரம் கணேசபிள்ளை அவர்கள் நடாத்தி வைத்தார்.
தலைவர், பொருளாளர், உதவிச் செயலாளர், ஆகிய பதவிகளிற்கு தலா ஒவ்வொருவரிடமிருந்தும் செயலாளர் பதவிக்கு இருவரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாக திரு.கணேசபிள்ளை அறிவித்தார். தலைவராக திரு.சிவசம்பு சிவநாதன் அவர்களும், பொருளாளராக திரு.சோமசுந்தரம் கிருஸ்ணரட்ணம் அவர்களும் உதவிச் செயலாளராக திரு.தம்பிராசா ஜெயச்சந்திரன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்த பின்னர் செயலாளர் பதிவிக்கான தெரிவினை வாக்கெடுப்பு மூலமாக நடாத்த முற்பட்டவேளை இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்த திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன் தனது விண்ணப்பத்தினை மீளப் பெற்றுக்கொள்வதாக அறிவித்த நிலையில் விண்ணப்பித்த திருமதி நாகேஸ்வரி சிவகுமார் செயலாளராக ஏகமனதாகத் தெரிவானார்.
நிர்வாக சபையிலுள்ள ஏனைய பதவிகளிற்கான தெரிவுகள் சமூகமளித்திருந்த உறுப்பினர்கள் மத்தியிலிருந்து நடைபெற்றன. அனைத்துத் தெரிவுகளும் போட்டியின்றி ஏகமனதாகவே நடைபெற்றிருந்தன. இளையோரை ஒருங்கிணைத்து செயற்பட முன்வந்த பல்கலைக்கழக மாணவியான செல்வி சகானா குணரத்தினம் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பொதுச் சபை அந்தச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு அங்கீகாரமளித்தது.
தெரிவுசெய்யப்பட்ட முழுமையான நிர்வாக சபை விபரம்:
தலைவர்: திரு.சிவசம்பு சிவநாதன்உப-தலைவர்: கனக சிவகுமாரன்
செயலாளர்: திருமதி நாகேஸ்வரி சிவகுமார்
உதவிச் செயலாளர்: திரு.தம்பிராசா ஜெயச்சந்திரன்
பொருளாளர்: திரு.சோமசுந்தரம் கிருஸ்ணரட்ணம்
நிர்வாக உறுப்பினர்கள்:
1). திரு.தம்பிஐயா பரமானந்தராசா
2). திருமதி ஞானாம்பிகை குணரத்தினம்
3). திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன்
4).திரு .மனோகரன் அரியரத்தினம்
5). செல்வி சகானா குணரத்தினம் (இளையோர் ஒருங்கிணைப்பாளர்)
கணக்காய்வாளர்: திரு.பஞ்சலிங்கம் கந்தையா.
திட்டமிடல் போசகர் சபை உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவானார்கள்:
1). திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன்
2). திரு.சோமசுந்தரம் கணேசபிள்ளை
3). திரு.நற்குணம் பாலேந்திரன்.
தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டு உரையாற்றிய திரு.சிவநாதன் அவர்கள் தற்போது கனடா காரை கலாசார மன்றத்தின் உறுப்பினர்கள் மத்தியில் நிலவுகின்ற முரண்பாடுகளைத் தீர்த்து வைத்து அனைவரும் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தான் தலைவர் பதவியை ஏற்க முன் வந்ததாகவும் புதிய நிர்வாகம் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிக்கு முன்னுரிமை அளித்துச் செயலாற்றும் எனவும் குறிப்பிட்டதுடன் தமது முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.



