சமூக சேவை செய்வதற்கு பதவிகள் தேவை இல்லை என்பதை நிரூபித்து வரும் திரு. K.K.சுப்பிரமணியம் குருபரன்.
இலண்டனில் குடியேறி மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் தனது தந்தையார் அமரர் K.K.சுப்பிரமணியம் வழியை பின்பற்றி ஊர்ச்சேவையில் நாட்டம் கொண்டார். ஐந்து ஆண்டுகளிற்கு முன்னர் காரைநகரிற்கு மீண்டும் இடம் பெயர்ந்த குருபரன் அவர்கள் ஊரில் நடைபெறும் பல அநியாயங்களிற்கு எதிராக துணிந்து குரல் கொடுத்து வருகிறார்.
வயதும் துடிப்பும் காரணமாக அவற்றை அதிரடியாக அவசரத்தில் கையாண்டு பலவித சிக்கல்களை எதிர்கொண்டதுடன் அடாவடிகளில் ஈடுபட்டவர்களை எதிரியாக சம்பாதித்துக்கொண்டார். கொழும்பு Royal College பழைய மாணவனும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசவும், எழுதவும், வாசிக்கவும் புலமை கொண்டிருந்த குருபரன் அவர்களிற்கு பல வழிகளிலும் பலருடனும் தொடர்புகள் இருந்தும் வந்துள்ளது. அரசியல்வாதிகள் முதல் காவல்துறை வரை தொடர்புகளை பேணி வந்துள்ளார்.

ஊர்ப்பணிகள் பலவற்றையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவல் கொண்டவர். வீதி அபிவிருத்தியாக இருந்தால் என்ன, அரச உதவிகளை பெற்று ஊரை வளப்படுத்த பதவி முக்கியம் என கருதினார், அதன் காரணமாக காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் பதவிக்காக போட்டியிட்டார், வெற்றி பெற்றார், பிரதேச சபை தேர்தலில் பிரதேச சபை உறுப்பினராக போட்டியிட்டார் வெற்றி பெறமுடியவில்லை. காரைநகர் அபிவிருத்தி சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட போதிலும் ஒரு சிலரால் திரு. குருபரன் அவர்களுடைய ஆளுமையையும் திறமையையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், உருப்படவிட முடியாது இருந்த காரைநகர் அபிவிருத்தி சபையை மீண்டும் இருளில் தள்ளவேண்டும் என்பதற்காக தலைவர் பதவியை இராஜினாமா செய்ய வைத்தார்கள். பனை மரத்திருட்டில் ஈடுபட்டவரை கையும் களவுமாக பிடித்து ஒப்படைத்த சம்பவத்தால் கைகலப்பான நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர் என்ற காரணத்தை கிழறி எடுத்து வந்து பதவியை இராஜினாமா செய்ய வைத்தார்கள்.
சட்டம், ஒழுங்கு, நீதித்துறையில் இலங்கை உலகநாடுகளின் வரிசையில் 185 நாடுகளில்113வது இடம் வகித்த நாடு. தற்பொழுது அநுரவின் ஆட்சியினால் ஒரே வருடத்தில் 15 இடங்கள் முன்னேறி 98வது இடத்திற்கு வந்துள்ளது. ஆனாலும் இன்னமும் சட்டம், ஒழுங்கு, நீதித்துறையில் இலங்கை வளர்ச்சியடைந்த நாடு இல்லை. தமது தேவைகளிற்காக திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்களுடைய திறமைகளையும் தொடர்புகளையும் தமக்காக தவறான வழிகளில் பயன்படுத்தியவர்கள் குருபரன் சுப்பிரமணியம் அவர்களை சுயமாக ஊரிற்கு நன்மை செய்ய பதவியினை வழங்க முன்வரவில்லை. காரணம் அவர்களால் பல வருடமாக செய்ய முடியாத பல செயற்பாடுகளை இரண்டு வருடங்களில் செய்து முடிப்பார் என்பதை நன்கு அறிவார்கள்.
காரைநகர் அபிவிருத்தி சபை மூலமாக வெளிநாட்டு அரசுகளின் உதவியினை நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும், வீதி அபிவிருத்தி மற்றும் முக்கிய சுற்றுலா தலமாக காரைநகர் தீவை பிரகடனப்படுத்தி சுற்றுலா பயணிகள் மூலம் ஊரை வளப்படுத்தவும் திறமையும் அறிவும் கொண்டவர். ஆனால் குட்டையில் ஊறிய மட்டைகளாகவும், தானும் தின்னாது தின்னுகிற மாட்டையும் விடாது குரைக்கும் வைக்கோல் பட்டறை நாய்களாக சிலர் திரு.குருபரன் சுப்பிரமணியம் மீது நண்பர்களாக காட்டிக்கொண்டே நஞ்சு பாய்ச்சி வருகிறார்கள்.
ஆனாலும் தனது வலிமைக்கும், இருக்கிற வளங்களை பயன்படுத்தியும் ஊரிலே இன்றும் சமூக சேவை செய்து வருகின்றார். தனது குடும்பத்தினர் மூலமாக மகன் வளங்கும் பணத்தினையும் ஊர்ப்பணியில் ஈடுபடுத்தி வருவதுடன், மனைவி, பிள்ளைகள் ஊரிற்கு வந்த பொழுதும் அவர்கள் மூலமாக பலவித நற்காரியங்களை செய்வித்தும் வந்துள்ளார். இதோ கடந்த வாரம் கும்பாபிஷேகத்திற்கு சென்ற என்னையும் அழைத்துச்சென்று ஊரியில் ஒரு வீட்டின் நிலமையை காண்பித்தார். பெரியளவிலான உதவியன்றி சிறியளவிலான உதவிகளையும் செய்து ஒரு குடும்பத்தை முன்னேற்ற முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். வீட்டுத்திட்டம் பெற்ற ஒரு ஊரியை சேர்ந்த குடும்பத்தின் நிலமை அறிந்து கூலித்தொழிலாளி ஒருவரிற்கான உதவியை பெற்றுக்கொடுத்தார்.
வேரப்பிட்டியில் ‘மருதம்’ படிப்பகத்தை பலரது உதவிகளையும் பெற்று தனது சொந்த மகனின் உதவியையும் பெற்று காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக செயற்படுத்தி வருகிறார். 25 மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கல்வி கற்று வருகிறார்கள்.
வேரப்பிட்டி பெரியடைப்பில் பலரது உதவிகளையும் பெற்று ஒருங்கிணைத்து வீட்டுத்திட்டம் நிராகரிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளை உடைய குடும்பத்திற்கு வீடு கட்ட உதவிகள் பெற்றுக்கொடுத்துள்ளதுடன் 80% விகித வேலைகள் பூர்த்தியாகியுள்ளன. இது போன்ற சின்ன சின்ன உதவிகளாக இருந்தாலும் பயனாளிகளிற்கு பெரும் பயனை கொடுக்கின்ற செயற்பாடுகள் இந்த ஆண்டு 2026 இல் மட்டும் ஏராளம் ஏராளம்.
திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் மட்டுமல்ல எவனொருவன் தனது பணத்தையும் கொடுத்து மற்றையவரிற்கு உதவியும் சேவையும் செயற்பாடும் செய்கிறாரோ அவர் மற்றையவர் பணத்தின் மீது எள்ளளவும் ஆசை கொள்ள மாட்டார் என்பதற்கு இணங்க திரு. குருபரன் சுப்பிரமணிய அவர்களது கைகளும் நிறையவே சுத்தமாகத்தான் உள்ளது.
திரு.குருபரன் சுப்பிரமணியம் பற்றிய விளக்கத்தை ஏன் ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் இங்கே எழுத வேண்டிய தேவை என்று உங்களில் பலர் சிந்தித்தால் அதற்கு பதில் என்னிடம் இல்லை. ஊரவர்களான உங்களிற்கு தெரியும். ஊர்ப்பணியில் ஈடுபட உங்களால் முடியாத நிலையில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி ஊர்ப்பணியில் ஈடுபட்டுவரும் திரு.குருபரன் சுப்பிரமணியம் தனது தந்தையார் வழியில் செயற்படுகின்ற காலம் கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளது.
உண்மையை சொல்லவும், நல்லதை செய்யவும் ‘எனது ஊர் காரைநகர்’ ஒருபோதும் தயங்கியது இல்லை. நன்றி.


