காரைநகர் பிரதேச சபை தவிசாளர் திரு.கோவிந்தராஜன் கிருஸ்ணன் மற்றும் J/47 வலந்தலை பிரதேச சபை உறுப்பினர் திரு.செல்லையா சிவகுமார்(ஆனந்தன்) இவர்களுடன் காரைநகர் பிரதேச சபை செயலாளர் ஆகியோரிற்கான அன்பான வேண்டுகோள். 13.07.2026.
மதிப்பிற்கும் நம்பிக்கைக்கும் பொறுப்பிற்கும் உரிய மக்கள் பணியாளர்களே, தங்களுடைய முழுமையான ஆதரவுடனும் தங்களுடைய பிரசன்னத்துடனும் காரைநகர் நீலிப்பந்தனை வீதி அபிவிருத்தி தொடர்பாக பொதுக்கூட்டம் கடந்த பெப்ரவரி மாதம் கூட்டப்பட்டது. அதன் மூலம் கடந்த 60 ஆண்டுகளிற்கு மேற்பட்ட நீலிப்பந்தனை ஊடான மாரி கால போக்குவரத்திற்கு தீர்வு எட்டப்பட்டது. அதற்காக பிரதேச சபை 12 மில்லியன் ரூபா(ஒருகோடி இருபது இலட்சம்) ரூபாய்களும் J/47 பிரதேச சபை உறுப்பினர் திரு S.சிவகுமார்(ஆனந்தன்) அவரிற்காக ஒதுக்கப்பட்ட 2 மில்லியன்(இருபது இலட்சம்) ரூபாய்களை ஒதுக்குவதாக பொதுக்கூட்டத்தின் போது இப்பகுதி மக்களிற்கு தெரியப்படுத்தியிருந்தீர்கள்.
மதிப்பிற்குரிய தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் மீண்டும் மீண்டும் பலதடவைகள் வினவிய போதும் மொத்தம் 14 மில்லியன் ரூபாய்கள் மூலம் மிச்சம் உள்ள மருதடி-நீலிப்பந்தனை வீதி மற்றும் நீலிப்பந்தனை- சடையாளி வரையாக வெள்ள வாய்க்கால் வெட்டிக்கட்டும் பணிகளிற்கு மேற்படி நிதி போதியளவு காணும் என்றும் ஓரிரு வாரங்களில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்திருந்தீர்கள்.
பொதுக்கூட்டத்தில் என்றுமில்லாதவாறு கலந்து கொண்டிருந்த மக்கள் தங்களது வாக்குறுதியை வரவேற்று மிகுந்த சந்தோசம் அடைந்ததுடன் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். மதிப்பிற்குரிய தவிசாளர் அவர்களிடம் பொதுமக்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட வேண்டுகோளாக தற்போதைய தவிசாளரின் கடமைக்காலத்திலேயே இந்த பணியை முன்னெடுத்து நிறைவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதனையும் ஏற்றுக்கொண்டதுடன் நீலிப்பந்தனை வாழ் மக்கள் தங்களது 60 ஆண்டுகால போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததாக எண்ணி மிகுந்த சந்தோசமடைந்தனர்.
எனவே தயவு செய்து மக்களிற்கு பொதுக்கூட்டத்தின் போது வழங்கிய வாக்குறுதிகளிற்கு அமைய பணிகளை செயற்படுத்த ஆவண செய்யுமாறு நீலிப்பந்தனை வாழ் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறது ‘எனது ஊர் காரைநகர்’. இப்பணிகளை மங்களகரமாக தவிசாளர் தலைமையில் ஆரம்பித்து வைக்க நீலிப்பந்தனை அம்பாள் சனசமூக நிலையத்தினர் ஆவலுடன் காலநேரத்தினை கோரியுள்ளார்கள்.
இப்பணிகளை 14 மில்லியன் ரூபாய்கள் செலவில் ஏற்று நிறைவேற்றும் வகையில் ரென்டர் கோரப்படவுள்ளதாக தவிசாளர் கடந்த மாதம் தெரியப்படுத்தியுள்ள போதிலும் இப்பணிகள் இனிமேலும் தாமதம் ஆக க்கூடாது என்பதும் எதிர்வரும் மாரி காலத்திற்கு முன்னர் இப்பணிகளை நிறைவேற்றி தவிசாளர் அவர்கள் புதிய பாதையை செயலாளர் மற்றும் இப்பகுதி பிரதேச சபை உறுப்பினருடன் இணைந்து திறந்து வைக்கவும் வேண்டி நிற்கின்றனர் நீலிப்பந்தனை வாழ் காரை மக்கள்.
J/47 வலந்தலை பிரதேச சபை உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. செல்லையா சிவகுமார்(ஆனந்தன்) அவர்களே தங்களது பிரதேச எல்லைக்கு உட்பட்ட நீலிப்பந்தனை வீதி போக்குவரத்திற்காக பிரதேச சபை தங்களிற்காக ஒதுக்கிய நிதியினை வழங்கி நன்மதிப்பை பெற்றுள்ள நிலையில் இப்பணியை நிறைவேற்றவும் முடிந்தவரை மேலும் தங்களது ஒத்துழைப்பையும் ஆர்வத்தையும் வளங்கி மக்கள் பணியே மகேசன் பணியாக அரசியலில் பிரகாசிக்கவும் வாழ்த்துகிறோம்.

இதற்கான நிதி ஒதுக்கப்படுள்ள நிலையில் தயவு செய்து இதற்கு மேலும் காலதாமதம் ஆகாமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள் என்பதை நீலிப்பந்தனை வாழ் மக்கள் திடமாக நம்பிக்கை கொண்டுள்ளார்கள். நன்றி.
என்றும் அன்புடனும் ஆதரவுடனும் ‘எனது ஊர் காரைநகர்’


