மனிதாபிமானம் மறந்த வெளிநாடுகள் வாழ் ஊர் உறவுகள்..!
(இதை முழுவதுமாக வாசிக்க நேரமற்றவர்கள் ‘like’ அல்லது ‘ comment’ போட தகுதியற்றவர்கள்).
80ம் ஆண்டுகளில்…சித்திரை வருசப்பிறப்பிற்கு சிங்கப்பூரில் இருக்கும் பெரியம்மாவின் பிள்ளைகள் ஆளுக்கு ஐநூறு கொடுக்குமாறு ஐயாயிரம் அனுப்பியிருப்பார்கள், ஹட்டனில மாட்டு வைத்தியம் பார்க்கும் பெரியப்பாவும் பிள்ளைகளுக்கு சேர்ட் எடுத்துக்கொடுக்கச் சொல்லி இருநூறு ரூபா மணியோடர் அனுப்பியிருப்பார், யாழ்ப்பாணத்தில கடை வைச்சிருந்த நாலு வீடு தள்ளி இருந்த மணியண்ணை வருசத்திற்கு முதல்நாள் வீட்டுக்கு வரும்போது தன்ரை பிள்ளைகளுக்கு வேண்டும் போது பக்கத்து வீட்டு பசங்களிற்கும் மலிபன் பிஸ்கற்றும், சீறுவானம் நாலு பக்கற்றும் வேண்டிக்கொண்டு கடைசி பஸ்சில் வந்து இறங்குவார்….
83 இல் கலவரம் தொடங்க 90களில் ஊரைவிட்டு ஒவ்வொருவராக வெளியேற தொடங்க… ஷெல் அடியில் கொஞ்சமும், இந்தியன் ஆமியின் இடைஞ்சல்கள் சிலவற்றையுமே போரின் மோசமான அனுபவமாக, அதுவே யதார்த்தமாக வெளிநாடுகளில் யாருக்கோ நடந்தவற்றை தமக்கு நடந்ததாக கற்பனையில் கதை சொல்லி அகதி அந்தஸ்து பெற்று பின்னர் வெளிநாட்டுவாசிகளாக செட்டில் ஆனவர்களிற்கு 91க்கு பிறகு 2009 வரை நடந்தவற்றை கேட்டறியவோ அல்லது பார்த்து அறியவோ நேரம் கிடைத்தது இல்லை. காரணம் வெளிநாட்டு மோகம் ஒரு பக்கம், மறுபக்கம் ஒருபக்க செய்திகளாக கோட்டை விழுந்தது, ஆனையிறவு அடுத்த கிழமை, கொழும்பிலை வெடித்தது, இந்தியாவில அதிர்ந்தது, நோர்வே முடித்து விடும், கடல்ல வருது ஆயுதம், தைப்பொங்கலுக்கு தீர்வு… இதையே நம்பி 2009 வரை வாழ்ந்தவர்களிற்கு…
முள்ளிவாய்க்காலில் மூன்று மாதம் மூன்றரை கிலோ மீற்றர் நிலத்தில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்ந்ததும், மூத்திரம் பெய்ய கூட மூன்று மணிக்கு எழுந்து போக வேண்டிய சூழ்நிலையிலும், சாப்பாடு இல்லாத நிலையிலும் ஒரு நேர கஞ்சி குடித்தால் மறுநாள் காலையில் கக்கூசுக்கு எங்கே போவது என்று தெரியாத நிலையில் நந்திக்கடலில் பேண்டதற்கு மேலே பேள்வதற்காக விடிந்தும் விடியாத வேளைகளில் சாவுக்கும் பயப்படாமல் காலைக்கடன் கழிக்க போன அந்த மூன்று இலட்சம் உறவுகளில் இன்னமும் உயிர்வாழும் ஒன்றரை இலட்சம் மக்கள்.
வன்னியில இந்த நிலையென்றால் யாழிலே செம்மணி போல் இன்னும் கண்டறியப்படாத புதைகுழிகளில்… ஏன் எதற்காக என்று கூட அறியாத நிலையில் இன்னமும் உறங்கிக்கொண்டிருக்கும் எத்தனை ஆயிரம் உயிர்களோ…!
இதே காலங்களில் தான் வெளிநாடுகளில்… ரஜனியின் தளபதிக்கும், அஜித்தின் ஆசைக்கும், விஜய்யின் காதலுக்கும் மரியாதை செலுத்திக்கொண்டிருந்தார்கள் இடம்பெயர்ந்த தமிழர்கள், அது மட்டுமா இன்னும் கொஞ்சம் பேர்கள் கூட்டாக சேர்ந்து இந்திய சினிமாவையும் சினிமா நடிகர்களையும் கூட்டிவந்து வாழவைத்துக்கொண்டிருந்தார்கள்.
2000 க்கு முதல் இடம் பெயர்தவர்களின் வாழ்கை வேறாகவும் 2000க்கு பிறகு பிறந்தவர்களின் வாழ்க்கை கற்பனையிலும் நினைத்துப்பார்க்க முடியாதளவில் வேறாகவும் இருந்தாலும் இன்று….எல்லாவற்றையும் ஒன்றாகவே எடை போடுகிறார்கள் இந்த 2000 க்கு முதல் தப்பிப்பிழைக்க ஊரைவிட்டு ஓடிய வெளிநாடுகள் வாழ் உறவுகள்….!
80களில் காத தூரமானாலும் கால்நடையாகவும், சைக்கிளும் மட்டும் தான்… இன்று கால் நடை தூரமானாலும் மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் தான். இந்த மாற்றம் ஊரவர்கள் அறிந்து கொள்ளாதது, ஆனால் இடம்பெயர்ந்தவர்கள் சிந்திக்க தவறியது. உங்கள் வலிகள் ஏராளம், நீங்கள் கடந்து வந்த பாதைகள் கடினமானவை, உங்களிற்கு வேறு பாதைகள் அன்று இருந்ததில்லை. உயிர் பிழைக்க அந்த நிமிடத்தில் தெரிந்த பாதைகளை தெரிவின்றி அந்த நிமிடமே தெரிவாக்கி ஓடினீர்கள், உங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொண்டீர்கள்.
ஆனால்…இன்று… இருபது அல்லது முப்பது வருடமாக ஏதோ ஒரு வகையில் உயிர் பிழைத்திருக்கும் நீங்களும், நாங்களும் ஒப்பிடப்படுகின்றோம். கடந்த இருபது அல்லது முப்பது வருடமாக ஊரில் ஏதோ ஒரு சூழ்நிலையிலும், 2000ம் ஆண்டுகளிற்கு பிறகு உண்மையில் ஊர் வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத உங்களையும் 20 வயது வரை 1990 வரை ‘சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரைப்போல வருமா..’ என்று வாழ்ந்த எங்களையும் ஒருபோதும் ஒப்பீடு செய்ய முடியாது.
யுத்தம், யுத்தத்திற்கு பின்னரான ஒருவித அமைதி இவை இரண்டையும் அனுபவிக்கும் இன்றைய ஊர் இளைஞர்கள், யுவதிகள் அதாவது இருபது முதல் முப்பது வயது வரையானவர்கள் இதுவரை கற்றுக்கொண்டவை என்ன என்பதை இடம்பெயர்ந்த முப்பது முதல் அறுபது வயதுடைய நாங்களும் சிந்தித்து அறிந்து கொள்ள வேண்டும்.
ஊரில இருக்குறவன் வேலை இல்லாவிட்டாலும் கவுட்டுக்குள்ள மோட்டச்சைக்கிளை வைத்துக்கொண்டு ஊர் சுற்றுகிறான் என்றும், வெளிநாட்டிலை இருக்கிறவங்களிடம் பணத்தை எதிர்பார்க்கிறான் என்றும், வெளிநாட்டில் இருப்பவர்கள் பணத்தை கொடுத்து அவர்களை பாழ்படுத்துகிறார்கள் என்றும் அதிமேதாவித்தனமாக எங்கள் 1980க்கு முந்தைய எங்கள் சிந்தனைகளை வைத்து அவர்களை குற்றவாழிகளாக நினைப்பதை நிறுத்திக்கொள்ளுவோம்.
1980களிற்கு முந்தைய எங்களின் வாழ்க்கை அவர்களிற்கு தெரியாது. அதனை உரிய வழியில் கற்றுக்கொடுக்க எங்களாலும் முடியவில்லை. காரணம் இவை எல்லாம் தெரிந்த நாம் சொந்த ஊரிற்கே சுற்றுலா பயணிகளாக இரண்டு வாரம் மட்டும் சென்று வருகிற சூழ்நிலையில் இடம்பெயர்ந்த நாட்டில் தேவைக்கு அதிகமான சொகுசு வாழ்க்கையில் எங்களை தொலைத்துக்கொண்டுவிட்டோம்.
யுத்தமும் யுத்தத்தின் வடுக்களாலும் காயம் ஆறாமல் இன்னமும் அதிலிருந்து மீளமுயற்சிப்பவர்களை மீண்டும் புண்படுத்தாதீர்கள்.
கால் நடையாகவும், சைக்கிள்ளையும் மட்டும் கண்டு கொண்டு காத தூரம் சென்றவர்கள் நாம் எனில்… BMW க்கும் Tesla விற்கும் அடிமையாகிவிட்டோம் என்றால், யுத்தத்திற்கு பின்னர் மோட்டார் சைக்கிளை கவிட்டுக்குள் வைத்துக்கொண்டு எதுவும் அறியாத நிலையில் இதுதான் வாழ்க்கை என தொடங்கியிருக்கும் ஊரின் அடுத்த சந்ததி மேல் குற்றம் சுமத்தும் அதிகாரம் ஊரை விட்டு இடம் பெயர்ந்த ஊரவர்களான நாம் எவறிற்கும் உரிமை இல்லை.
இலாயக்கற்றவர்கள் யார் என்பதை சிந்திக்க வேண்டியவர்கள் இடம்பெயர்ந்து வாழும் ஊரவர்களே..!
நன்றி.!
‘எனது ஊர் காரைநகர்’
தீசன் திரவியநாதன்




