“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே”
எனது கனடிய கடவுச்சீட்டின் சுயசரிதை.
5ம் வகுப்பில் தமிழ் பாடத்தில் ‘சுயசரிதை’ என்னும் பாடவிதானம் இருந்தது பலருக்கும் ஞாபகம் இருக்கலாம். அப்போது சடையாளி பள்ளிக்கூடத்தில் ‘பாப்பா’ ரீச்சர் என அழைக்கப்பட்ட Mrs.கதிரவேலு சின்னாச்சிபிள்ளை அவர்களது தமிழ் வகுப்பில் ‘ஒரு குடையின் சுயசரிதை’ ‘நான் கண்ட கனவு’ என கற்பனையில் கதை எழுதியதும் அதில் ‘நான் கண்ட கனவு’ என்னும் சுயசரிதத்திற்கு பாராட்டு பெற்றதுடன் மாதாந்தம் நடைபெறும் மாணவர் சங்க கூட்டம் ஒன்றில் அதனை அனைத்து பாடசாலை மாணவர்களிற்கு வாசித்துக்காட்ட ‘பாப்பா ரீச்சர்’ அவர்கள் சிபாரிசும் செய்திருந்ததும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.
அந்த ஞாபகங்களோடு எனது கனடிய காலாவதியான passport இன் சுயசரிதம் எழுத எண்ணினேன்.
எனது பொதுப்பெயர் கடவுச்சீட்டு. கனடிய அரசினால் தயாரிக்கப்பட்டு தனிப்பட்ட ஒருவருக்கு சொந்தமாக ‘திரவியநாதன் பிரமேந்திரதீசன்’ என்னும் பெயர் பொறிக்கப்பட்டு 2015ம் ஆண்டு என்னை அவருக்கு சொந்தமாக்கினர். அன்று முதல் அவருடன் நெருக்கமாகவும் தனது உடமைகளில் அனைத்துக்கும் மேலானதொரு உடமையாகவும் என்னை பத்திரமாகவும் பாதுகாப்புடனும் பராமரித்து வந்தார்.
கடந்த பத்து ஆண்டுகளாக அவர் தான் போகும் நாடுகள் எல்லாவற்றிற்கும் என்னையும் எடுத்துச்செல்வார். ஒவ்வொரு நாடுகளிற்கு செல்லும் போதும் நானே அவரை அழைத்துச்செல்வதாகவும் எனக்கே முதல் உரிமை கொடுத்து அவர் சென்ற நாடுகளில் எல்லாம் என்னை அந்தந்த நாடுகளின் உத்தியோகத்தர்களிடம் முதலில் காட்டுவார். அதனால் எனக்கும் பெருமையாக இருந்தது. அவர் சென்று வந்த நாடுகளில் எல்லாம் அவருக்குரிய உரிமைகளை நானே பெற்றுக்கொடுத்தேன் என்கிற பெருமை எனக்கு இருந்தது.
அவர்சென்ற நாடுகளில் அவுஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ் போன்ற நாடுகளை நானும் சேர்ந்தே சுற்றிப்பார்த்தோம். அது மட்டுமல்லாது கடந்த பத்து ஆண்டுகளில் 15 தடவைகளிற்கு அவர் விரும்பிச்செல்லும் நாடான இலங்கைக்கும் சென்று வந்துள்ளேன். கடந்த பத்து ஆண்டுகளில் 36 பக்கங்கள் கொண்ட எனது பக்கங்களில் 30 பக்கங்களில் அனுமதிகளை பெற்றுக்கொள்ள வசதிகள் இருந்தன, அவை அனைத்தையும் பயன்படுத்திக்கொண்ட நிலையில் என்னிடம் மேலதிக பக்கங்கள் இல்லாத நிலையிலும் கடைசி பக்கத்திலும் அனுமதியை பெற்றுக்கொடுத்தேன்.
கடந்த பத்து ஆண்டுகளில் நான் மிகவும் பெருமைப்பட்டுக்கொண்ட விடயம் என்னவெனில், கடந்த வருடம் இலங்கை சென்றிருந்த போது குடிவரவு திணைக்கழ உத்தியோகத்தர் அனுமதி வழங்க எனது பக்கங்களை புரட்டினார் ஆனால் எந்த பக்கமும் இடம் இல்லாது இருப்பதை அவதானித்ததுடன் “இந்த கடவுச்சீட்டை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், கடவுச்சீட்டு வைத்திருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனவும் கூறியதுடன் தனது இருப்பிடத்தில் இருந்து எழுந்து சென்று தனது சக உத்தியோகத்தர்களுக்கும் காட்டி மகிழ்ந்தார். நானும் மிகவும் பெருமைப்பட்டுக்கொண்டேன்.
எனது பக்கங்கள் முடிவடைந்தால் அல்லது எனது ஆயுள்காலம் முடிவடைந்தால் என்னால் பயனளிக்க முடியாது என்பதையும் அறிந்து கொண்டு கவலை கொண்டேன். அதே போன்று இந்த வருடத்துடன் எனது ஆயுள்காலம் முடிவடைந்தும் விட்டது. ஆனாலும் எனது உரிமையாளருக்கு தொடர்ந்தும் எனது பாவனை மட்டுப்படுத்தப்பட்டளவில் தேவை என்பதையும் அதனால் தொடர்ந்தும் என்னை தன்னோடு பாதுகாப்பாக வைத்திருப்பார் என்பதனையும் அறிவேன். காரணம் அவர் இலங்கையில் வங்கிக்கணக்குகள் திறந்த போதும் சொத்துக்கள் வேண்டிய போதும் சாட்சியாக என்னையே கருதினார்கள். நான் காலாவதியாகிவிட்டாலும் காலம் முழுவதும் சாட்சியாக அவருடனேயே இருந்து கொள்வேன் என்று நிம்மதியாக பெருமூச்சு விடுகிறேன்.
என்னை உருவாக்கிய கனடிய அரசாங்கம் எனது உரிமையாளருக்கு புதியதொரு கடவுச்சீட்டினை வழங்கியுள்ளதும், என்னைவிட மிகவும் வண்ணமயமாகவும், பாவனைக்குரிய பக்கங்கள் அதிகமானதாகவும் புதிய தொழில்நுட்பத்துடன் அமைந்திருப்பதும் உரிமையாளருக்கு மகிழ்வானதாக இருந்தாலும் எனக்கு பொறாமையாகவும், நான் பயனற்று போய்விட்டேன் என்று என்னை உருவாக்கிய கனடிய அரசும் என்மேல் இரண்டு துளைகள் இட்டுள்ளதும் வேதனையளிக்கிறது.
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்று நன்னூல் குறிப்பிட்டுள்ளது போன்று அதனை ஏற்றுக்கொண்டு சாந்தி அடைகிறேன். இதுவே எனது வரலாறு.



