காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் கோயிலும் அதனை சூழுவுள்ள பகுதிகளும் மாரி காலம் வந்தால் முற்றாக தடைபட்டுவிடும். எனக்கு தெரிந்தவரை கடந்த 50 ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் இல்லை. 30 ஆண்டுகளிற்கு முதல் 1980களில் காரைநகரில் இளைஞர்கள் கூடியளவிலும் விளையாட்டுக்கழகம், RDS, சனசமூக நிலையம், நீலிப்பந்தனை அம்மன் கோயில் என தனித்தனியாக எங்கும் கூட்டம்கூட்டமாக கூடியிருப்பார்கள்.
அதற்கு முக்கிய காரணமும் உண்டு. துர்க்கை அம்மன் என்பதால் திருமணம் மற்றும் வேண்டுதல்களை நிறைவேற்ற கன்னிப்பெண்கள் காரைநகரின் எல்லா பாகங்களிலும் இருந்தும் செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் கோயிலுக்கு வருகை தருவார்கள்.
ஒருவர் 8 மணித்தியாலம் செய்கிற வேலையை 8 பேர்கள் ஒரு மணித்தியாலத்தில் செய்வார்கள், 16 பேர்கள் அரை மணித்தியாலத்தில் செய்வார்கள். அப்படித்தான் நீலிப்பந்தனை அம்மன் கோயிலின் தற்போதைய மூலஸ்தானம் மற்றும் அர்த்த மண்டபம் என்பனவும், வாகனசாலை, சுற்றுமதில், அபிஷேக கிணறு என்பன இளைஞர்களின் சிரமதானத்தின் மூலம் 1980 களில் கட்டப்பட்டன.
பின்னேரம் 4 மணிக்கு ஒரு கூட்டம் தச்ச வெட்டையில் தாய்ச்சி விளையாடவும், வாசிகசாலையில் கரம்போர்ட் விளையாடவும், கேணிக்கட்டில் கூடியிருந்து கதைப்பதற்கு ஒரு கூட்டமுமாக அந்த சூழலில் மாலையில் நூற்றுக்கணக்கானவர்கள் கூடியிருப்பார்கள்.
நீலிப்பந்தனை அம்மன் கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலத்தில்…வெட்டையில் விளையாடிக்கொண்டிருப்பவர்களையும் வாசிகசாலையில் கரம்போர்ட், டாம், செஸ் விளையாடிக்கொண்டிருப்பவர்களையும் ஒரு அரை மணிநேரம் கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போய்விடுவார்கள். அப்படித்தான் திருப்பணியும் சிரமதானமும் 1980களில் நடைபெற்றது. 4 பேர்கள் பத்து நாள் செய்யும் வேலையை 50 பொடியள் அரை மணித்தியாலத்தில் செய்து போட்டு மீண்டும் விளையாட்டுக்கு போய்விடுவார்கள்.
அப்போது நிதி உதவிகள் இருந்தது இல்லை, பிரிவினைகள் இருந்தது இல்லை. அன்று கனவு கண்டோம். காசு இருந்தால் கேணியை சீராக்கவும், மாரி காலத்திலும் விளையாடக்கூடிய வகையில் தச்ச வெட்டையில் தண்ணியை இல்லாமல் செய்யவும் யாராவது உதவ முன்வருவார்களா என்று கனவு கண்டோம்.
ஆனால் இன்று…50 வருடமாகவும் இன்றும் அதே நிலமை தான். நீலிப்பந்தனை வெட்டையில் உள்ள கட்டிடம், 1980 களில் சங்கக்கடை, அதற்கு முன்னர் ஆண்கள் முன்னேற்ற சங்கம் என்னும் RDS (Rural Development Society) என்னும் அரச நிறுவனத்திற்கு அமரர் கந்தப்பு பரமலிங்கம் 1980 களிலும் எங்களிற்கு அறிமுகமான ஊர்ப்பற்றாளர் தனது சொந்த நிலத்தை ஊரிற்காக தாரைவார்த்துக்கொடுத்தார்.
அதேபோன்று அதே நீலிப்பந்தனையில் நீலிப்பந்தனை அதே கேணிக்கு வடக்கு புறமாக மாதர் முன்னேற்ற சங்கம் அமைப்பதற்காக அதே RDS அமைப்பிற்காக தனது மூன்று பரப்பு காணியினை தாரைவார்த்துக் கொடுத்தார் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம்(மாஸ்ரர்).
வருடத்திற்கு மூன்று மாதம் நீலிப்பந்தனையில் மாரி காலத்தில் நீலிப்பந்தனை ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்படுகிறது. 50 வருடமாக இதற்கு தீர்வுகள் இல்லை. ஆனால் கல்வியறிவு, பொறியியல் துறை(சிவில் என்ஜினியறிங்) முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும்…கடந்த மாதம் மேலும் இதே வெள்ளம் நிற்கும் வெட்டையோடு எல்லையாக அமைந்த 9 பரப்பு காணியினை பொதுவிற்காக தாரைவார்த்து அமரர் துரையப்பா குமாரசாமி குடும்பத்த்தை சார்ந்தவர்கள் கொடுத்துள்ள போதிலும் இன்னமும் நாம் 50 ஆண்டுகளிற்கு முந்தைய வெள்ளமும், வெட்டையும், மாரி வந்தால் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழத்தான் வேண்டுமா…!
கேட்டால்… வெட்டையில தண்ணி நின்றால் தான் பக்கத்து வீட்ல கிணத்தில தண்ணி நிற்கும் என்று சொல்கிறவர்கள், பழமையில் வாழ பழகிக்கொண்டார்களேயொழிய, மேலதிக தண்ணீரை நிலத்தடியில் செலுத்தி மேலும் மழை நீரை சேமிக்கவோ அன்றி தேங்கும் தண்ணீரின் அளவை கணித்து அதனை குறைந்தளவு நிலப்பரப்பில் ஆளமாக சேமித்தால் மட்டுமே நிலத்தடியில் நீராக சேமிக்கப்படும் என்பதனை இன்னமும் விளங்கிக்கொள்ள முடியாத நிலையிலேயே சிந்தனை வளராத நிலையில் வாழப்பழகிக்கொண்டார்கள்.
நீலிப்பந்தனை வெட்டையும், 1990ம் ஆண்டு முதல் இன்று வரை எந்த பயனுமற்றவகையில் 35 ஆண்டுகளிற்கும் மேலாக அழிந்து கொண்டிருக்கும் RDS மூலம் அமைக்கப்பட்ட கட்டிடம், இதனை மீளபுனரமைத்து, 1960களில் ஊரிற்காக தமது சொந்த நிலங்களை தாரைவார்ரத்துக் கொடுத்தவர்களை மீண்டும் உயிர்பெற வைப்போம்.
25.08.2025 இன்று தச்ச வெட்டையில் உள்ள ஆண்கள் முன்னேற்ற சங்க கட்டிடத்தின்(1980 களில் சங்கக்கடை) நிலமை. அரைவாசி இடிந்த நிலையிலும் மீதம் உழுத்துப்போன நிலமையிலும்…



