அரசியலுக்கும் அப்பால் அனுபவங்கள் ஊடாகவும் எமது ஊர் காரைநகர் மண்ணின் சார்பாகவும் பதவிகளிற்கு அப்பாலும் நாம் அறிந்து கொள்ளப்பட வேண்டியவைகள் பல… “””” அதனால் தான் நாங்கள் காரை தீவார் “””
நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
காரைநகர் பிரதேச சபையில் ஆட்சியமைக்க முடியாத நிலையில் எல்லாமே ‘ ரண்டக்க ரண்டக்க’ நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் தாம் தான் முன்னணி வகிப்பதாக கருதுகிறார்கள். அது மாத்திரமன்றி ஒரே ஒரு ஆசனத்தை பெற்ற கட்சியும் தானே ஆட்சியமைக்க வேண்டும் என கங்கணம் கட்டியுள்ளது.
காரைநகரிற்கு வெளியே அரசியலும், கட்சிகளின் கொள்கைகளும் எதுவாகவேனும் இருக்கட்டும். ஆனால் காரைநகரில் மட்டும் தமக்கென ஒரு கொள்கை, காரைநகரிற்குள்ளேயே சிறுபாண்மை, பெரும்பாண்மை என்கிற பாகுபாடு உண்டென கடந்த இரண்டு பிரதேச சபை தேர்தல்களிலும் அடித்து உணர்த்தியுள்ள “மாட்டுவண்டில்” சின்னத்தில் போட்டியிட்டு 25% விகிதமான வோட்டுக்களையும் காரைநகர் பிரதேசத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்ற சுயேட்சைகளிற்கு நிச்சயமாக பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் எந்த கட்சியானாலும் முக்கிய பங்கு வழங்கியே ஆகவேண்டும்.
அது தவிர “மாட்டுவண்டில்” சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைகளை தவிர்த்து எந்த கட்சியானாலும் ஆட்சி அமைத்தால் அது ஜனநாயகமாவும் இருக்க போவதில்லை, காரைநகர் மக்கள் கல்வியில் சிறந்தவர்கள் என்பதை வெளிக்கொணரப்போவதும் இல்லை.
காரைநகரில் இருந்து வெளிவரும் செய்திகளில் இருந்து அறியப்படுவதாவது… தேர்தல் பிரச்சாரத்தின் போதும்… தேர்தல் முடிவு வெளியானதன் பின்னரும் சுயேற்சையாக போட்டியிட்டவர்களிற்கு சார்பாக முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்களும் வெற்றிக்கொண்டாட்டங்களும் மற்றைய கட்சிகளில் போட்டியிட்டவர்களையும் ஊரவர்களையும் மிகவும் சங்கடப்படுத்தியுள்ளதோடு, சுயேற்சையாக போட்டியிட்டவர்களது அனுசரணையோடு ஆட்சி அமைக்கக்கூடாது என்ற சூழ்நிலைக்கு சென்றுள்ளதாகவும், காரைநகர் பிரதேச சபையில் ஆட்சியே அமைக்க முடியாது போனாலும் சுயேட்சைகளை சேர்த்து கொள்ள போவதில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளதாக அறியப்படுகிறது.
“மாட்டுவண்டில்” சின்னத்தில் போட்டியிட்டு காரைநகரில் அதிகூடிய வாக்குகளை பெற்றும், காரை மண்ணில் மட்டும் உள்ள கொள்கை, கோட்பாடு, மண்ணின் மக்களின் அபிவிருத்தியை முன்னிறுத்தி “மாட்டுவண்டில்” சின்னத்தில் போட்டியிட்ட சுயேற்சைகள், காரைநகர் பிரதேச சபையின் ஆட்சியில் நிச்சயமாக பங்கேற்க வேண்டும்.
சிங்கள கட்சிகள் எங்கள் ஊர் காரைநகரில் பிரதேச சபையில் ஆட்சி அமைக்க… கட்சிகளிற்காக வக்காலத்தும், தேசியம், இனவாதம், மதவாதம் பேசும் காரை மக்களே…. சுயேட்சையாக களமிறங்கி தமது பலத்தையும், தமது தேவைகளையும் ஜனநாயக ரீதியாக தொடர்ந்து இரண்டு தடவைகள் நிரூபித்துள்ளார்கள் சுயேற்சைகள்.
“மாட்டுவண்டில்” சின்னத்தில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளை பெற்ற சுயேட்சைகளிற்கு ஆட்சியில் பங்கு இல்லாது எந்த கட்சியாவது ஆட்சியமைக்குமாக இருந்தால் அது ஜனநாயகமும் அல்ல, காரைநகர் மக்களின் நல்லெண்ணமும் அல்ல. பொன்னாலை பாலத்திற்கு அப்பால் மட்டுமே கட்சிகளும், கட்சிகளின் சின்னங்களும் ஆட்சியமைக்கட்டும். ஆனால் காரைநகர் மக்கள் நாம் மனிதாபிமானம் காப்போம், ஜனநாயகம் காப்போம்,
“மாட்டு வண்டில்” சின்னத்தில் சுயேற்சையாக போட்டியிட்டவர்கள் மற்றைய கட்சிகளை விட அதிகம் வாக்குகள் பெற்றுள்ளனர். ஆனால் மற்றைய கட்சிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் போன்று தேர்தல் பிரச்சாரத்தின் போதும், தேர்தல் முடிவுகளின் பின்னரும் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனை உணர்ந்து கொள்ள தவறினால் சிங்கள கட்சிகளிடம் கையேந்துவதை கொள்கையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
எங்கள் ஊரில் ஜனநாயக வழியில் சுயேற்சையாக போட்டியிட்டவர்கள் தமது பலத்தையும் மக்களது ஆதரவையும் “மீன்” சின்னத்திலும் ” மாட்டுவண்டி” சின்னத்திலும் நிரூபித்துள்ளார்கள்.
தீசன் திரவியநாதன் ஆகிய நான் ஊரிற்கும் மண்ணிற்கும் மக்களிற்கும் மதிப்பளித்து “எனது ஊர் காரைநகர்” என்று துணிந்து சொல்வது உண்மையானால் இந்த பிரதேச சபை தேர்தலில் அதிகூடிய வாக்குகளையும் மக்கள் அனுசரணையினையும் (NPPஐ விடவும், தமிழரசு கட்சியை விடவும்..) பெற்றுள்ளார்கள் என்பதை காரைநகர் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சுயேற்சையாக “மாட்டுவண்டில்” சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்களை தவிர்த்து காரைநகர் பிரதேச சபையில் ஆட்சி அமைத்தால் அது ஜனநாயகமும் அல்ல, தேர்தல் அரசியலும் அல்ல. அது அப்பட்டமான “சாதி அரசியல்” என்பதை காரைநகர் மக்கள் அகில இலங்கைக்கும் பிரகடனப்படுத்துவார்கள்.
அதற்கு ” எனது ஊர் காரைநகர்” ஒரு போதும் துணையாகாது. காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய முக்கியமானவர்களில் ஒருவரான “கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம்” அவர்களின் பாசறையில் அடிப்படை அரசியலை கற்றுக்கொண்டு அரசியல் அனுபவத்தை பரீட்சித்து பார்க்க வந்தவன் என்கிற ரீதியில் சாதியத்தை நாம் கைவிடும் வரையில் இனவாதம் எம்மை விட்டு விலகாது என்னும் தேசிய கொள்கையினை நானும் திடமாக நம்புகிறேன்.
அன்று Dr. John Manokaran Kennedy Viyajaratnam வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தலைமைத்துவத்தின் வழிகாட்டலில் ஒருங்கிணைக்க பாடுபட்டு வெற்றி கண்டாரோ அதன் ஒரு துளி காரைநகரில் சாதியம் இல்லாது, அதிலும் வெற்றியை இரண்டு தடவைகள் தொடர்ந்து நிலைநாட்டிய சுயேற்சைகளை தவிர்த்து காரைநகர் பிரதேச சபையில் ஆட்சியமைக்க எவராவது முயற்சி செய்தால் அதனை அடியோடு புறக்கணிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் சிங்கள கட்சிகளிற்கு எதிராகவும் தமிழ் தேசியத்துக்கு சார்பாகவும் வாக்களித்த காரைநகர் மக்களின் கட்சிகளின் கடமையாகும்.
தேர்தல் அரசியலுக்குள் பிரதேச மக்களின் அரசியல், வாழ்வாதார அரசியல், சமூக அரசியல் என பல “அரசியல்” கோட்பாடுகள் உண்டு. அதற்கு உதாரணமாக நீங்களே பார்க்கும் அரசியலாவது NPP உடன் இணைந்து வடக்கில் எந்த தமிழ் கட்சிகளும் ஆட்சி அமைக்காது. காரைநகரிலும் அது தான் நிலமை. அதே போல் காரைநகரில் அதிகூடிய வாக்குகளை பெற்ற “மாட்டுவண்டில்” சின்னத்தில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளை பெற்ற சுயேற்சைகளை தவிர்த்து, ஆட்சியமைத்தால் அது எந்த அரசியலுக்கும் உட்படாத அரசியல். அதன் பெயர் புறக்கணிப்பு, அதன் மோசமான பெயர் சாதிய வெறி…. வெற்றி பெற்றவர்களின் வெற்றியை அங்கீகரிக்க தவறுவது கற்றவர்கள் விடும் மாபெரும் தவறாக அமையும். அதில் அரசியலுக்கு இடமில்லை. மனிதாபிமானமற்ற அரசியலால் எவருக்கும் நன்மை ஏற்படப்போவதில்லை.
காரைநகர் பிரதேச சபையில் “ரண்டக்க ரண்டக்க” சீற்பெற்ற எந்த கட்சியானாலும் அல்லது தமிழ் தேசியம் தங்களது உரிமை எனக்கோரும் ஒரு சீற் பெற்ற தமிழரசு கட்சி ஆகட்டும்…..
எங்கள் ஊர் காரைநகரில் “அனைத்து கட்சிகளைவிடவும் அதிகமான” வாக்குகளை பெற்ற சுயேற்சைகளை இணைத்துக்கொள்ளாது ஆட்சியமைத்தால் அது மாபெரும் துரோகமாக அமையும். மனித குலத்திற்கு, காரைநகர் மக்களிற்கு,, அரசியலுக்கு, தமிழ் மக்களிற்கு செய்யும பெரும் துரோகமாக அமையும். அதற்கு “எனது ஊர் காரைநகர்” கட்டியம் கூறுகின்றது.
அரசியலில் நீங்கள் வல்லவர்கள், திறமைசாலிகள், நன்கு திட்டமிடலில் முதன்மையானவர்கள் எனில் “மாட்டு வண்டில்” சின்னத்தில் போட்டியிட்டவர்களிற்கு உங்கள் அரசியலை விளங்க வையுங்கள். அல்லது அவர்களுடன் சேர்ந்து பயணியுங்கள். இது தான் ஜனநாயகம்.
இது எனது அரசியல் அனுபவம் மற்றும் எனது ஊர் காரைநகர் மூலம் நான் பெற்ற அனுபவத்தினூடான கருத்துக்கள். இதில் துளியளவேனும் எனது விருப்பு வெறுப்புகள் உள்ளடக்கப்படவில்லை. நான் பெற்ற அனுபவமும், எனது அரசியல் குரு Dr. ஜோன் மனோகரன் கெனடி வியரத்தினம் ஊடாக நான் பெற்ற சிறிதளவிலான அரசியல் கருத்து ஆகும்.






