இலங்கை அரசின் 2021 வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிற்கும் தலா 30 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டது. காரைநகர் பிரதேச செயலக ஆளுகைக்குள் 9 கிராம சேவை பிரிவுகள் உள்ளன. மேற்படி ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் முதல்கட்டமாக கிராம சேவகர் காரியாலயம் இல்லாத பிரிவுகளிற்கு கிராம சேவகர் காரியாலயம் அமைக்கவும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் புதிய வருமான வழிகளை ஊக்குவிக்கவும் பயன்படுத்த முடியும்.




காரைநகரில் கிராம சேவகர் காரியாலயம் அமைக்க காணிகளை காரைநகர் பிரதேச செயலகத்திற்கு வழங்க முன்வருமாறு கட்ந்த வருடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனையடுத்து கிராமசேவகர் பிரிவு J/47 வலந்தலை, J/45 கருங்காலி, J/44, பாலாவோடை, J/43 விளானை ஆகிய பகுதிகளிற்கு கிராம சேவகர் காரியாலயம் அமைக்க காணிகளை வழங்க முன்வந்தனர்.
J/47 வலந்தலை பிரிவிற்கு திரு.வேலாயுதபிள்ளை செல்வராசா பண்டித்தாழ்வு கோணன்ஓடையில் அமைந்துள்ள தனது காணியில் 2 பரப்பு காணியினையும்,
J/45 கருங்காலி பிரிவிற்கு திரு.நமசிவாயம் சச்சிதானந்தன்(இளவரசி ரெக்ஸ், யாழ்ப்பாணம்),
J/44 பாலாவோடை பிரிவிற்கு திரு.ஆறுமுகம் சபாநாதன்(பாலாவோடை, டென்மார்க்),
J/43 விளானை பிரிவிற்கு பிரபல வர்த்தகர் திரு.நேசேந்திரம் சிதம்பரப்பிள்ளை அவர்களும் காணிகளை அன்பளிப்பாக வழங்கினர்.
அதனையடுத்து J/47, J/45, J/44 ஆகிய பிரிவுகளில் கிராம சேவகர் அலுவலகம் அமைக்க காரைநகர் பிரதேச செயலர் திரு.மரியதாசன் ஜேகூ அவர்கள் தலைமையில் 03.02.2022 அன்று அத்திவாரம் இடப்பட்டது.






J/47 வலந்தலை கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட 30 இலட்சம் நிதியில் இருந்து 21 இலட்சம் ரூபா செலவில் திரு.செல்வராசா வேலாயுதபிள்ளை அவர்கள் அன்பளிப்பாக வழங்கிய இரண்டு பரப்பு காணியில் கிராமசேவகர் காரியாலயம் அமைக்கப்படுவதோடு, 6 இலட்சம் ரூபா செலவில் பெரியமணல் கிராம முன்னேற்றச் சங்கத்தின் ஊடாக தேங்காய் எண்ணை ஊற்றும் ஆலைக்கான உபகரணம் பெற்றுக்கொடுக்கவும், மேலும் மூன்று குடும்பங்களிற்கு தலா ஒரு இலட்சம் வீதம் புதிய தொழில் முயற்சிக்கான உதவியும் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.








