இயற்கை அனர்த்தம்…. பாதிப்படைந்த மக்கள் பெற்றுக்கொண்டவை என்ன..! அரசும் அரச இயந்திரங்களாலும் காரைநகரில் எந்த பயனும் இதுவரை இல்லை.( முழுவதும் வாசியுங்க… புரிந்து கொள்ள..)

காரைநகர் மக்களும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகளும் வழங்கும் தற்காலிக உதவிகள் பொது அமைப்புக்கள் ஊடாகவும் தனிநபர்கள் ஊடாகவும் மட்டுமே ஓரிரு நாள் சமைத்த உணவு மற்றும் சில ஆயிரங்கள் ரூபா செலவிலான பொதிகள் என இதுவரை பாதிப்படைந்த மக்களை சென்றடைந்துள்ளன.

அது மட்டுமன்றி அரசின் செயற்பாட்டு இயந்திரங்களில் ஒன்றான பிரதேச சபை ஊடாகவும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள் வழங்கிய நிதி உதவியுடன் மட்டுமே சில தற்காலிக உதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி காரைநகர் பிரதேச சபை தமது ஊழியர்கள் மூலமாக வெள்ள நீரை வெளியேற்றவும் முறிந்து விழுந்த மரங்களை உடனுக்குடன் நீக்கி வீதியையும் மின்சாரத்தையும் மீள இயங்க வழி சமைத்துள்ளது.

பிரதேச சபையின் உடனுக்குடனான மற்றும் மக்களுடன் நேரடியாக தொடர்புகளை கொண்டு கடந்த சில நாட்களாக முழுமையான தமது ஒத்துழைப்பை வழங்கியதை பராட்டுவோம். ஆனாலும்…

மக்களின் நல்லாதரவை பெற்றதும் ஜனாதிபதி அவர்களின் உடனடி நடவடிக்கைகள், நிதி ஒதுக்கீடுகள் என கோடி கோடியாக கொடுப்பதாகவும், வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தால் 25,000 ரூபா சுத்தீகரிப்புக்கு எனவும், ஓரிரு நாள் இடம்பெயர்ந்திருந்தாலும் 10,000 ரூபா மீள குடியேறவும், அத்துடன் பாதிப்படைந்த வீடுகளிற்கு முழுமையான நஷ்ட ஈடும் உடனடியாக வழங்க பாராளுமன்றத்தில் இதுவரை நடைமுறையில் இருந்த சட்டங்களை மாற்றியமைத்து பிரதேச செயலர்(DS), பிரதேச சபை, கிராம சேவகர்கள்(GS) ஆகியோர் நேரடியாக தலையிட்டு உடனடியாக பாதிப்படைந்தவர்களிற்கு உரிய நஷ்ட ஈட்டை உடனடியாக வழங்கும் வகையில் அனைத்து அரச இயந்திரங்களும் செயற்படுவதாக செய்திகள் எல்லா முன்னணி ஊடகங்களிலும் முழங்குகின்றன. இதுவரை காரைநகரில் அவ்வாறு ஏதாவது உடனடி அரச உதவிகள் வழங்கப்பட்டதாக இன்னமும் பொதுமக்களிடமிருந்து செய்திகள் வரவில்லை.

காரைநகர் பிரதேச செயலர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் மற்றும் கிராம சேவகர்கள் இன்னமும் மக்களிற்கு எந்தவிதமான இந்த அரசின் கோடிகளில் இருந்து எந்த பைசாவும் பெற்றுக்கொடுத்ததாக செய்திகள் எதுவும் உத்தியோகபூர்வமாக வரவே இல்லை.

வந்தார்கள், பார்த்தார்கள்… ஆனால் அரசு கோடி கோடியாக கொடுப்பதாகவும் உடனடியாக அதிவேகமாக ஓரிரு நாட்களில் பாதிப்படைந்தவர்களை சென்றடையும் வகையில் மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக, பிரதேச ரீதியாக பணியாற்றும் அரச அதிகாரிகள் பெற்றுக்கொடுப்பார்கள் எனவும்… அத்துடன் நிதி கேட்க கேட்க கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அவர்கள் நித்திரை இல்லாமல் தினமும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்.

தயவு செய்து உரியவர்கள் உத்தியோக பூர்வமாக காரைநகர் அரச நிர்வாகம் சார்ந்து அறிக்கை வெளியிடவும். இதுவரை எத்தனை பாதிப்படைந்த மக்களிற்கு அரசின் மேற்சொன்ன உதவிகளை பெற்றுக்கொடுத்துள்ளீர்கள்…? ஊடகங்களை அழைத்து காரைநகர் பிரதேச செயலரும் பிரதேச சபை தவிசாளரும் தங்களால் அரச நிதியில் இருந்து மக்களிற்கு எதனை செய்தார்கள்… எத்தனை குடும்பங்களிற்கு அரச உதவிகளை வழங்கினார்கள் என்பதை இப்போதே தெரிவிக்க வேண்டும்.

மாலைதீவு போன்ற ஒரு இலங்கையை விட பின்தங்கிய பொருளாதாரத்தை கொண்டியங்கும் நாட்டு மக்கள் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை அங்குள்ள குடிமக்கள் சேர்த்து வழங்கியுள்ளார்கள். அனர்த்தங்களால் சிறுவர்கள் போஷாக்கு இழந்து விடக்கூடாது என்பதற்காக உலக சுகாதார நிறுவனம் 1.5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. மற்றும் அமெரிக்கா 2 மில்லியன் டொலர்கள், அது மட்டுமன்றி மற்றும் பல நாடுகளும் வழங்கியுள்ளன. அது தவிர இலங்கையிலும் ஏற்கனவே அனர்த்த முகாமைத்துவ நிதியாக ஒதுக்கப்பட்ட 1.2 பில்லியன் ரூபாய்கள், மேலும் பேரனர்த்தம் காரணமாக பாராளுமன்ற ஒப்புதலும் இன்றி 3.2 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டதுடன், இன்று இலங்கை பாராளுமன்றத்தில் மேலும் 50 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்குவதற்கு ஆளும் கட்சி சார்பாக முன்வைக்கப்பட்டுள்ளது, அதில் 20 பில்லியன் ரூபாய்கள் உடனடி நிவாரணம் ஆகவும் 30 பில்லியன் ரூபா சேதங்களை சீர்படுத்தவும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கா அரசு அதிரடியாக பல அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவுமா..! என்பதை பாதிப்படைந்த காரைநகர் மக்களின் அரச பிரதிநிதியாக செயற்படும் பிரதேச சபை செயலர் (DS) அம்மா அவர்களும் மக்களின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டு அரசிடம் அதிகாரத்துடன் கேட்பதற்கு தகுதியான பிரதேச சபை தவிசாளரும் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால் வெளியிடப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் ஊடகங்களிற்கு தங்களினால் மேற்கொள்ளப்படும் அனர்த்த செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும். அல்லது ஜனாதிபதி அவர்களால் வெளியிடப்படும் அறிக்கைகள், மற்றும் ஒதுக்கப்படுவதாக கூறப்படும் நிதி எதுவும் தங்களிற்கு வந்து சேரவும் இல்லை, தங்களிற்கு அது தொடர்பாக எதுவும் தெரியாது என்றாவது சொல்ல வேண்டும்.

கடந்த கால அரசுகளின் ஊடாக போரையும், சுனாமியையும் காரணம் காட்டி பில்லியன் கணக்கான டொலர்கள் அப்போதைய அமைச்சர்கள், அரசியல்வாதிகள், கூலிக்கும்பல்கள் என சென்றடைந்து போல இந்த இயற்கை அனர்த்தமும் தற்போதைய அரசிற்கும் அரசியல்வாதிகளிற்கும் சாதகமாக வெள்ளத்தை பார்வையிட்டு சென்றதுடன் முடிந்துவிடப்போகிறதா…?

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க அரசு கோடி கோடியாகவும்…, பிரதேச செயலகம் ஒன்றிற்கு தேவையேற்பட்டால் ஐந்து கோடி செலவு செய்ய அனுமதி வழங்கியுள்ளதாகவும், தேவையேற்படின் மேலும் நிதி உதவி வழங்க முடியும் என தெரிவித்து வருகின்றது. அதற்கு மேலாகவும் சென்று… ‘எமது நாட்டு மக்கள் அவர்களை நாமே மற்றைய எல்லா பணிகளையும் பின்தள்ளி இயற்கை அனர்த்தத்தில் இருந்து முற்றாக வெளிவர செய்வோம் என கூறியுள்ளது’

இந்த அரசின் ஆட்சியிலும், பிரதேச சபையும், பிரதேச செயலகங்களும் இன்னமும் வெளிநாட்டு வாழ் முன்னாள் உறவுகளிடம் வெறும் இலட்சங்களிற்கும் ஆயிரங்களிற்கும் கையேந்தியுள்ளதும் அரசியல் யதார்த்தத்தில் எங்கேயோ பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதை உணர்த்தியுள்ளது.

வெளிநாடுகள் வாழ் மக்கள் தமது உறவுகளிற்காக நேரடியாகவும் அரச சார்பற்ற பொது அமைப்புக்கள் ஊடாகவும், தனிநபர்கள் ஊடாகவும், உறவுகள், நண்பர்கள் ஊடாகவும் தமது நல்லெண்ணத்தை, தமது அன்பை, தமது கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். எம்மால் முடிந்ததை நாம் அன்றும் இன்றும் என்றும் செய்து கொண்டே இருக்கிறோம்.

ஆனால்…. இரண்டு நாள் உணவும், சில ஆயிரம் ரூபாய்கள் பொதியும் மட்டுமே எம்மால் சாத்தியமானது. அதுவும் இதுவரை அரச நிதி அல்லாத வெளிநாடுகள் வாழ் உறவுகள் மற்றும் உள்ளூர் பொது அமைப்புக்களால் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அதைப்பெற்றுக்கொண்ட பாதிப்படைந்த மக்களும் கடந்த காலங்களை போலவே திருப்தியும் அடைந்து வருகிறார்கள்….

இதுவா அநுர ஆட்சியும்…? கோடி கோடியாக ஒதுக்கிய நிதியும் அதன் பலனும் பலாபலனும் எங்கே…!

பாவம் பாதிப்படைந்த மக்கள்…! அதைவிட பாவம் வெளிநாடுகள் வாழ் ஊர் உறவுகள்…. ஏதோ தம்மாலன வகையில் நூறு இருநூறு பேர்களிற்கு சாப்பாடும், ஐம்பது நூறு பொதிகளையும் வழங்கிவிட்டு முகநூலில் அதற்கான படங்களையும் பதிவேற்றிவிட்டு திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள்…! அதைவிட YouTubers களும் ஏதோ படம் காட்டினோம் நிறைய பேர்கள் பார்த்தார்கள், அவர்களது பொக்கற் நிரம்பியது. அத்துடன் அவர்களது பணியும் முடிந்தது.

ஆனால் எங்கே அந்த கோடிகள்…. வீட்டிற்குள் வெள்ளம் புகுந்திருந்தால் 25,000 ரூபா, மீள குடியேற 10,000 ரூபா மற்றும் அரச உதவியினால் சிறுவர்களிற்கான போஷாக்கு உணவு என அரசு அறிவித்தும் அதனை காரைநகரில் இதுவரை யார் பெற்றுக்கொண்டார்கள்…? யாரிடமாவது பதில் உண்டா..?

அல்லது தயவு செய்து ‘வழமை போல் மாரி மழை தான் பெய்தது’ என்று பிரதேச சபை செயலரும், தவிசாளரும் அறிக்கை விடவேண்டும்.

காரைநகர் கிழக்கு றோட்டிற்கு கிழக்காக வேணன் அணைக்கட்டு கட்டப்பட்ட பின்னர் வேறு வழியின்றி அங்கேயே நன்னீர் தேக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் வீடமைத்து குடியிருக்கும் 9 குடும்பங்களின் குடிசை வீடுகளில் கடந்த காலங்களில் நீர் புகுந்து இடம்பெயர்ந்திருக்கிறார்கள், அவர்களது வீடுகளில் நீர் புகுந்த காரணத்தினால் வேணன் அணை கடந்த காலங்களில் உடைக்கப்பட்டிருக்கிறது… அன்று அவர்களிற்காக அணை உடைக்க திரண்டவர்கள்…. இன்று என்னவானார்கள்…? இந்த பேரனர்த்தம் காரணமாக நீர் புகவில்லையோ…! அவர்கள் அந்த வீட்டில் தான் இருந்தார்களோ…!

அநுர அரசின் மீதும், அநுர அரசு தினம் தினம் வெளியிடும் அறிக்கைகள் மற்றும் மேற்கொள்ளும் திட்டங்கள் மீதும் மக்களிற்கு இன்னமும் நம்பிக்கை உள்ளது ஆனால் அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் வந்தோம், பார்த்தோம் என்பதுடன் அதற்கு மேல் செயற்பட முடியாதளவில் கடந்த அரசுகள் செயற்பட்டது போன்று கடமைக்காக தமது பணிகளை செய்து கொண்டிருக்கிறார்களா என்று தான் எண்ணத்தோன்றுகின்றது.

மக்களிற்காக அரசின் உதவிகளை பெற்றுக்கொடுக்க அரச உத்தியோகத்தர்கள் செய்பட்டால் போதும். ஏதோ வெளிநாடுகள் வாழ் உறவுகள் தமது உடன்பிறப்புக்களிற்காக நல்லெண்ணம் கருதி வழங்கும் நிதி உதவிகளை பெற்று இரண்டு நேர சாப்பாடு, ஒரு பொதியை மட்டும் வழங்கிவிட்டு அது தான் உங்கள் பணியென திருப்திப்பட்டுக்கொள்ளாதீர்கள்.

அரசின் பொறுப்புள்ள பதவிகளிற்கு வருபவர்கள் சம்பளத்திற்காக பணிபுரிபவர்களாக அல்லாமல் மக்கள் நலன்களையும் அவ்வப்போது இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் இறங்கி வேலை செய்யக்கூடியவர்களாக இருத்தல் அவசியம்.

விளங்கிக்கொண்டால் நீங்கள் மக்களிற்கான பணியாளர்கள் அல்லது உங்கட கடமையை உங்கள் மாதாந்த சம்பளத்திற்காக செய்கிறீர்கள் என்பதே நாம் விளங்கிக்கொள்கிறோம்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் மாதாந்தம் தனிப்பட்ட உபயகாரர்கள் உபயத்துடன் இந்த ஆண்டு(2025) ஏப்ரல் மாதம் முதல் ஆலய அறங்காவலர்கள் மூலமாக தீர்மானிக்கப்பட்ட நிர்வாகத்தின் கீழ் மிகவும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

எனது வாழ்க்கை பயணத்தில் 24வது ஆண்டில் Costco. இன்று 06.12.2025 அன்று Christmas Holyday party.

Leave a Reply