ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் சார்பாக இயங்குவதாக கருதப்படும் ஒரு முகநூலில் 02.03.2026 அன்று திருப்பணிகளிற்காக வளங்கப்படும் நிதி உதவிகளை நேரடியாக தமது வங்கிக்கணக்கிற்கு மட்டுமே அனுப்பி வைக்குமாறும் வேறு எந்த முகவர்கள் ஊடாகவும் வழங்க வேண்டாம் எனவும் ஒரு அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதற்கான காரணம் கடந்த காலங்களில் குறிப்பாக 2011ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகளிற்காக அடியார் சபை/ திருப்பணி சபை எனும் பெயர்களில் சிலர் கோடி கோடியாக பணத்தை பெற்றதும் கும்பாபிஷேகம் நிறைவுற்று இற்றைக்கு 15 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையிலும் 2011ம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற கும்பாபிஷேகம் வரையான திருப்பணிகளிற்கான வரவு செலவு அறிக்கை வெளிவரவில்லை என்பதும் அப்போது அந்த அமைப்புக்கள் சார்பாக இயங்கியவர்கள் ஒரே தேவைக்காக பலரிடம் நிதியுதவி பெற்றுள்ளதும், கோயிலின் பெயரால் பலரிடம் கடன் பெற்றுள்ளதும் பின்னர் கடனை அன்பளிப்பாக மாற்றியுள்ளதும்….
கடனாக வழங்கியவர்கள் அன்பளிப்பாக தமது உதவிகளை மாற்றிய போதும் இற்றைவரை கோயிலும் வேண்டாம் கோவணமும் வேண்டாம் என விலகியிருப்பதுவும் யாவரும் அறிந்த விடயம்.
அது மாத்திரமன்றி வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் முன்னாள் காரைவாசிகள் கிள்ளிக்கொடுத்தாலும், அள்ளிக்கொடுக்கும் கொடைவள்ளல்கள் இதே காரைநகரில் வாழ்ந்து வருகின்ற போதிலும் அவர்கள் இன்னமும் கோடிக்கணக்காக கொட்டிக்கொடுக்க முன்வருகின்ற போதிலும் அவர்கள் மீது இதுவரை 7 தேவையற்ற வழக்குகளை சுமத்தி வெளியேற்றியுள்ள நிலையில், மேலும் அச்சுறுத்தவும் தமது 2011ம் ஆண்டுக்கான திருப்பணி சபை/ அடியார் சபை க்கான கணக்கு வழக்குகளை வெளியிட முடியாத நிலையில் ஆதீனகர்த்தாக்கள் நிர்வாகத்தில் இயங்கி வந்த காரைநகர் சிவன் கோயில் நிர்வாகம் ‘ Karainagar Sivan Kovil Trust Fund Elaththu Chitambaram’ என்னும் பெயரிற்கு பணம் அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளது.
ஆகவே இனிவரும் காலங்களில் இந்த கோயில் ஆதீன கர்த்தாக்களால் நிர்வகிக்கப்படாது என்பது அல்லது ஒரு மேற்கூறிய Trust அமைப்பினால் நிர்வகிக்கப்படும் என கருதப்பட வேண்டும். ஆனாலும் ‘ Trust’ அதாவது நம்பிக்கை நிதியம் ஒருவரிற்கு மேற்பட்ட பலரினால் நிர்வகிக்கப்பட வேண்டும். அப்படியாயின் அந்த ‘ Trust’ இல் உள்ள மற்றைய அங்கத்தவர்கள் யார்..?
இந்த கோயிலின் சார்பாக இயங்குவதற்கு இந்த கோயிலின் ஆதீன கர்த்தாக்களான திரு. அம்பலவிமுருகன் ஆண்டிஐயா, திரு. குகநேசன் சுந்தரலிங்கம் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளார்களா..?
அல்லது ஆதீனகர்த்தாக்கள் பொறுப்பிலிருந்து திரு.அம்பலவிமுருகன் ஆண்டிஐயா அல்லது திரு. குகநேசன் சுந்தரலிங்கம் ஆகியோரில் ஒருவர் அப்பொறுப்பில் இருந்து ஏதாவது ஒரு கோர்ட் கேஸ் மூலம் விலத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா…? அல்லது ஏதாவது கோர்ட் தீர்ப்புகள் மூலம் விசேட அனுமதி பெற்றுள்றார்களா…? அல்லது இதுவரை காரைநகர் மக்கள் பலரும் அறிந்து கொள்ளாத வகையில் ஏதாவது பொதுக்கூட்டங்கள் மூலம் ஆதீனகர்த்தாக்கள் நிர்வாகத்தில் இயங்கி வந்த சிவன்கோயில் நிர்வாகம் ‘Karainagar Sivan Kovil Trust Fund Elaththu Chithambaram’ என்னும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு நிர்வாகம் கையளிக்கப்பட்டதா..? என்பதை பொதுவெளியில் அறியப்படுத்தியிருந்தார்களா…?
எந்த விளக்கமோ அல்லது விபரமோ அற்ற நிலையிலும், 2011ம் ஆண்டுக்கான கும்பாபிஷேக கணக்கறிக்கைகள் அடியார்சபை/ திருப்பணி சபை சார்பாக வெளியாகாத நிலையில் நேற்று முன்தினம் வெளியான இவ்வாறான அறிக்கை சிந்தனையும் செயற்பாடும், ஈழத்து சிதம்பரத்தின் கடந்த 100 ஆண்டுகள் வரலாறு தெரிந்த பலரையும் மிகவும் சிந்திக்க வைத்துள்ளது.
மேலே பல விடை தெரியாத பல கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகம் சார்பாக( அது யாராக இருந்தாலும்) காரைநகர் மக்களிற்கும் இடம்பெயர்ந்த காரைநகர் மக்களிற்கும் தெளிவான விளக்கம் அளிக்க விரும்பினால் இதே முகநூல் ஊடாக அதற்கான தங்களது விளக்கத்தினையும் எடுத்துவர தயாராக உள்ளேன். தொடர்பு கொள்ளவும்.
(ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் திண்ணபும் சிவன் கோயில் கடந்த மூன்றாண்டுகளாக கும்பாபிஷேகத்திற்கான எந்தவித அறிவித்தலும் இன்றி பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளதும், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலை இயற்கை அழிவு தவிர்ந்து ஒரு வருடத்திற்கு மேல் பாலாலயத்தில் வைத்திருப்பது ஆகம விதிக்கு அப்பாற்பட்டது என்பது ஆகம விதிப்படி இயங்கும் கோயில்களிற்கு உள்ள சாஸ்திரமாகும்).







