காரைநகர் ஈழத்து சிதம்பரம் திருவெம்பவை உற்சவம் இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் நடைபெறாது என்பதை வெளிநாடுகள் வாழ் காரை சிவன் அடியார்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். (நடக்குமா… நடக்குமா என்று இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்காதீர்கள்).
பாலஸ்தாபனம் செய்யப்பட்டு பாலாலயத்தில் விக்கிரகங்கள் உள்ள நிலையில் திருவிழாக்கள் நடைபெறுவதில்லை என்பது ஆகம விதிகளில் ஒன்றானது என்பதும், திருவெம்பாவை உற்சவத்திற்கு இன்னமும் சில மாதங்கள் மீதமுள்ள நிலையில் திருப்பணியும் குடமுழுக்கும் திருவிழாவும் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதை காரை சைவர்கள் உணர்ந்து கொள்ளப்படவேண்டியது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான காரை மக்கள் ஊர் திரும்பவும் ஊரோடும் உறவோடும் கலந்து கொள்ள விடுமுறை காலமான மார்கழியில் திருவெம்பாவை உற்சவ காலத்தில் மண்ணை தரிசிப்பதும் வழக்கமாக இருந்த நிலையில்,
ஆதீனகர்த்தாக்கள் பரம்பரையில் நிர்வகிக்கப்பட்டு ஈழத்து சிதம்பரம் நிர்வாகத்தை சீர்குலைத்து, திட்டமிடப்பட்ட திருப்பணி நிர்வாகமோ அற்ற நிலையில் மணிவாசகர் மடாலய சோத்து பிரச்சனைகளை சொந்த பிரச்சனைகளாக்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலாலயத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்ட விக்கிரகங்கள் மீண்டும் எப்போது கீர்த்தி பெறும் என்பதற்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.
அவசரம் அவசரமாக மூன்றாண்டுகளிற்கு முன்னரே பாலஸ்தாபனம் செய்ய முண்டியடித்தவர்களும் சரி, கோர்ட்டுக்கு போய் அதை நிறுத்தி ஓராண்டு தள்ளி போட்டவர்களும் சரி…. இன்னும் ஏன் தாமதம் என்பதற்கான பதில் எவரிடமும் இல்லை.
நிர்வாகம் ஆதினகர்த்தாக்களின் வழிநடாத்தலில் கடந்த பல தசாப்தங்களாக இருந்து வந்த போதிலும் நம்பிக்கையும் நாணயமும் அத்துடன் செயல் திறனும் மிகுந்த காரை சிவன் அடியவர்கள் அவ்வப்போது திருப்பணி சபை என்னும் பெயரில் தற்காலிக நிர்வாகங்கள் அமைத்து கோடி கோடியாக கொடுக்கும் கொடை வள்ளல்களிடமிருந்தும் காரை சிவன் அடியவர்கள் ஒவ்வரிடமிருந்தும் சிறுதுளி பெற்றும் திருப்பணிகளை நிறைவேற்றி உரிய காலத்தில் குடமுழுக்கு செய்து ஊரின் சைவ பாரப்பரியத்தை கட்டி காப்பாற்றி வந்தனர்.
இந்த நிலையில் ஆதினகர்த்தாக்களை பிளவுபடுத்தி கோயிலை பலப்பரீட்டை பார்க்கும் இடமாக மாற்றி மாதத்திற்கு நான்கு தடவை ஏதோ ஒரு வழக்கிற்காக ஊர்காவற்றுறை கோர்ட்டிற்கு சென்று வரும் வகையில் ஆக்கியதுடன், கோயிலுக்கு போனால் கும்பிட்டு முடிய வயிராற சாப்பிட்டும் வரலாம் என்ற நிலை மாறி சாப்பாட்டுக்காக விளம்பரமும், அன்னதானத்திற்காக கோயிலும் என்ற நிலைக்கு கொண்டு வந்தவர்கள் சாமியை கொண்டு வந்து சந்திலை வைத்திருக்கிறார்கள்.
அடுத்து என்னவென்றால்… பதில் எவருக்கும் தெரியாது…!
காலம் தான் பதில் சொல்லும் என்கிற நிலையில் கடவுளும் காரைநகர் மக்களும் காத்திருக்கிறார்கள்.
விடுமுறைக்காக ஊர் செல்லும் வெளிநாட்டுவாசிகள் கொஞ்சம் ஊர்பற்றுடன் நடந்து கொண்டு…. ஏன்… ஏன்… ஏன்..? என்ற கேள்விகளிற்கு விடை காண முற்பட்பட்டால் மட்டும் போதும்.
கோயிலில் திருப்பணி நடைபெறவேண்டும், குடமுழுக்கு நடைபெறவேண்டும், திருவிழாக்கள் நடைபெற வேண்டும், ஆதினகர்த்தாக்கள் மதிப்பும் மரியாதையும் பேணப்படவேண்டும் என்கிற அடிப்படை உணர்வுடன் பயணித்து செயற்படுகின்ற சிவனடியார்களை மட்டும் இனம் காணுங்கள்.
கோடி கோடியாக திருப்பணிக்கு அள்ளி வழங்க ஊரவர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்தாலும் நம்பிக்கையும் நாணயமும் செல்லாக்காசின் இரண்டு பக்கங்களாக காரை மண்ணில் திண்ணக்கழியில் போட்டி போடுகின்றன.
அவன் அருளாலே அவன் தாழ் வணங்க அவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று




