எங்கள் குரு வி.ஈஸ்வரக்குருக்கள் ஐயா – வணங்குகிறோம் ஐயா.
காரைநகர் மக்களின் மனதில் 47 ஆண்டுகள் சிவபூஜை செய்து சிவத்திற்காக வாழ்ந்து சிவனிடம் சென்ற எங்கள் குரு வி.ஈஸ்வரக்குருக்கள் அவர்களின் பூதவுடலுக்கு காரைநகர் மக்கள் அதிகூடிய மரியாதை செய்து, சாம்பலோடை மயானத்தில் அவரிற்கென தனியானதொரு இடத்தில் சிதை மூட்டி பூதவுடலை பஞ்ச பூதங்களிற்கும் அர்ப்பணித்தனர்.
சிறுவனாக இருந்த போது சடையாளி வைரவர் ஆலயத்திலும் பின்னர் 47 ஆண்டுகள் ஈழத்து சிதம்பரம் எனப்போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் பிரதம குருவாகவும் விளங்கிய குருக்கள் ஐயாவிற்கு காரைநகர் மக்கள் வழங்கிய இறுதி மரியாதை காரை மக்களின் சிவப்பணியை புரிய வைத்தது.
மெய்சிலிர்க்க வைத்தது. வெளிநாடுகளில் வசிக்கும் காரை சிவபக்தர்களும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்த சோகத்தில் தம்பி விஜயன் மூலமாக நேரடி வீடியோ பதில் பார்த்து கண் கலங்கினார்கள்.
மரணம் என்பது இயற்கை தான் ஆனால் ஊரோடும் உறவோடும் எங்களில் ஒருவராக பழகிய குருக்கள் ஐயாவின் இழப்பு காரைநகர் மக்கள் எங்கிருந்தாலும் கண் கலங்க வைத்துள்ளது என்பதும் உண்மையே.
சென்று வாருங்கள் ஐயா. இனிமேல் உங்களிற்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி.
வணங்குகிறோம் ஐயா.
எங்களிற்காக நீங்கள் செய்த பிரார்த்தனைகள் பல…
எங்கள் பெயருடன் நட்சத்திரமும் இறைவனிடம் சமர்ப்பித்தீர்கள்…
உங்களிற்கு ஞாபக சக்தி அதிகம்…
கண்டவுடன் கடவுளிடம் சொல்லி விடுவீர்கள்…
தியாகர் என்னும் திருவருள் மூலம் சிறுவயது முதல் சிவபூஜை பயின்றவர்…
அவரிற்குப் பின் அவனருள் பெற அல்லும் பகலுமாய்
அவனோடு வாழ்ந்தீர்கள்…
சிவனருள் பெற ஊர் திரும்பும் ஒவ்வொரு பொழுதும்
திருவருளுடன் குருவருள் பெற வருவேன் ஐயா…
சிவனே என்று வணங்கும் போது என்றும் உங்கள் முகம் வந்து போகும்…
சிவனோடு ஐக்கியமாகிய எங்கள் குருவே
வணங்குகிறோம் ஐயா…
எங்கள் குரு வி.ஈஸ்வரக்குருக்கள் ஐயாவின் பிரிவால் துயருற்றுருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் கவலையினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓம் சாந்தி!

Leave a Reply
You must be logged in to post a comment.