ஊர்ப்பொடியன், உங்களில் ஒருவன், உங்களோடு தோள் கொடுக்க அருகில் நிற்பவன்… நான் சொல்கிறேன் கொஞ்சம் கேளுங்கள்…!(வாசித்தால் உண்மை புரியும்..)
மழை வந்தால் குளிர் வரும்… மார்கழி வந்தால் காரைநகராருக்கு ஊர் நினைப்பு வரும்…. காரணம் ஈழத்து சிதம்பரம்…
யாழ்ப்பாண மாவட்டத்திலேயே கோயில்களிற்கு பெயர் போன ஊர் காரைநகர்… அதிலும் திண்ணபுரம் சிவன் கோயில் என்றால் சிவனையும் ‘மார்கழி திருவாதிரை’ யையும் ஆருத்ரா தரிசனம் என்றால் என்னவென்று முறையாக ஆகம முறைப்படி ஆன்மீகம் அறிந்த யாழ்ப்பாணத்து சைவர்கள் மனங்களில் நிலைத்திருப்பது ‘ஈழத்து சிதம்பரம்’ என பெயர் பெற்று விளங்கும் காரைநகர் திண்ணபுரம் சிவன் கோயில்.
ஆனால் அங்கு என்ன நடக்கிறது தெரியுமா..! மூன்றாண்டுகளாக பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 8″ க்கு 10″ சீமெந்து சிறைக்குள் 64 சுவாமிகளும், ஐயனாருக்கு தனியாக ஒரு சிறையும் என அடைத்து விட்டு, உள்வீதியிலேயே சாப்பிட்டுவிட்டு பேண்டுவிட்டு போக அதிரடியாக அன்னதான விறாந்தையும் கக்கூசும் கட்டி வைத்துள்ளார்கள்.(சத்தியமான உண்மை, எந்த சிலேடையும் இல்லை).
தேரோடும் மூன்றாம் வீதியில், குற்றம் குறை மற்றும் எந்தவித அசூசைகள் இருந்தாலும்…. சாம்பலோடைக்கு பிணமே கொண்டு செல்லும் வீதியாக இருந்தாலும் கக்கூசு கட்ட முடியாது என புனிதம் பேணிய சிவன்கோயிலில் கொழும்பில் இருந்து சென்றாலும் கக்கூசுக்கு சென்றுவிட்டு போகவேண்டும் என்பதற்காக கோயில் உள்வீதியிலேயே கக்கூசுடன் கூடிய 3 star விருந்தகம்.
பக்தியுடன் கோயிலுக்கு வருபவர்களிற்கு தரிசனத்திற்கு பின்னர் வயிராற உண்டு கழைப்பாறவும், பின்னர் உறங்கவும் மூன்றாம் வீதியில் மூன்று அன்னதான சபைகள் இயங்கி வருகின்ற போதிலும், பின்னர் உண்டபின் உறங்கவும் திருவிழா காலங்களில் தங்கியிருந்து தரிசனம் காணவும் கோடிகளை கொட்டி அடியவர் மடமும் திரு.சண்முகம் சிவஞானம் அவர்களால் கட்டப்பட்டு கையளித்த போதிலும் கோயிலுக்குள்ளே தான் கக்கூசுக்கு போவேன் என்று சபதம் பூண்ட ஒருவர் ஈழத்து சிதம்பரத்தின் வரலாறு தெரியாதளவில்….. பணத்தினால் பக்தியை காசு கொடுத்து வேண்டலாம் என நினைக்கும் ஒரு அதிரடி பணக்காரனால் மட்டுமே முடியும்.
மூன்று வருடமாக கோயில் இயங்கவில்லை ஆனால் இயங்குவது போல பாசாங்கு, பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயிலில் எழுந்தருளி விக்கிரகங்களிற்கு இராஜ உபசாரங்களுடன் கூடிய பூஜை புனஸ்காரங்கள். ஆகமங்களை மீறிய வகையில் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்றுவரும் செயற்பாடுகளிற்கு பின்னரும் தனியொருவர் மட்டுமே இவற்றிற்கெல்லாம் காரணம் என்பதும், அது பரமேஸ்வரன் என்பதும் அனைவரும் அறிவார்கள்.
இறுதியாக 2011ம் ஆண்டு அடியார் சபை என்னும் திருப்பணிச்சபையினரால் குடமுழுக்கு நடாத்தப்பட்டது. கோடி கோடியாக செலவு செய்து 33 குண்டங்கள் வைத்து குடமுழுக்கு நிறைவேற்றப்பட்டது. அப்போது கோயில் கர்ப்பக்கிரகம் தவிர்த்து அனைத்தும் முற்றும் முழுதாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது.
ஆனால் இன்று நடப்பது என்ன…! 2011ம் ஆண்டு அடியார் சபை என்னும் அமைப்பினால் புனரமைப்பும், குடமுழுக்கும் செய்யப்பட்ட போதிலும் அந்த அமைப்பைச் சார்ந்த எவரும் அதற்கு பொறுப்பேற்று இன்றுவரை அதற்கான வரவு செலவு அறிக்கை வெளியிடவில்லை என்பதுடன், ஒரே செயற்பாட்டிற்காக பலரிடம் பல இலட்சங்கள் பெறப்பட்டுள்ளதும் பலருக்கும் நன்றாகவே தெரிந்த விடயம். அதற்கு தலைமை தாங்கிய பரமேஸ்வரனே இவற்றிற்கெல்லாம் காரணமானான்.
2011 அடியார் சபை திருப்பணி மற்றும் குடமுழுக்கினை அப்போதைய திருப்பணி சபையிடம் இருந்து கைப்பற்றி கோடி கோடியாக பெற்றதுடன் மட்டுமல்லாது, இதுவரை எத்தனையோ நல்லுள்ளங்கள் கேட்டுக்கொண்டும் உத்தேசமான வரவு செலவு அறிக்கையினை வெளியிட கேட்டும் முடியாத நிலையில், புதிதாக கொண்டு வந்த முறைதான் ‘நல்லூர் நிர்வாகம்’.
அதென்ன ‘நல்லூர் நிர்வாகம்’ என்று கேட்கிறீர்களா. அதை தெரியவில்லையானால் நீங்கள் அந்த பரமேஸ்வரனுடன் இன்னும் கதைக்கவில்லை என கருதுகிறேன்.
‘ நல்லூர் நிர்வாகம்’ என்றால் பணத்தை கொடுங்கள், ரசீது கேட்காதீர்கள், அல்லது உண்டியலில் போட்டுவிட்டு போங்கள், வரவும் செலவும் கேட்கேலாது, ரசீது இல்லை. அது தான் ‘நல்லூர் நிர்வாகம்’.
முடிந்தால் நல்லூரில் போய் ரசீது கேட்டுப் பாருங்கள் கோயில் பிரகாரத்தை விட்டே வெளியே அனுப்புவார்கள். இது தான் 2011 அடியார் சபை கும்பாபிஷேகத்திற்கு பின்னர் பரமேஸ்வரன் சொல்லும் பதில்.
ஆண்டி ஐயாவும், முருகேசு ஐயாவும் கோயிலை நிர்வகித்த போது எவரும் கணக்கறிக்கை கேட்டதில்லை. ஆனாலும் ‘திருப்பணி சபை’ என்றவொரு அமைப்பு இரட்டை இராஜகோபுரங்கள் அமைத்ததுவும், இடம்பெயர்ந்து, கடல்கடந்து பரதேசம் போனபின்னரும் மீண்டும் வந்து அதே நிர்வாகம் 1996 இல் அமரர் தியாகராசா மகேஸ்வரனின் பேருதவியுடன் குடமுழுக்கு மட்டும் நடாத்தவில்லை, யுத்தகால இடப்பெயர்வுகள், கூண்டோடு ஊரைவிட்டு ஓடிய பின்னரும் கணக்கும் வழக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து 1996 வரை நடைபெற்ற திருப்பணிகளிற்கு கணக்கறிக்கை வெளியிட்டார்களே அது கடவுளிற்கும் மேல். அதுதான் நம்பிக்கை. காரணம் அன்று அவர்கள் ஊரை விட்டு அதிரடியாக இடம்பெயர்ந்த போதிலும், தமது சொந்த சொத்துக்களை விட்டு விட்டு ஓடினார்களோயொழிய, கணக்கையும் வழக்கையும் நம்பிக்கையையும் கைவிட்டு விட்டு ஓடவில்லை. அதனால் காரை மக்கள் அவர்களையும் கடவுளாக கும்பிடுகிறார்கள்.
ஈழத்து சிதம்பரம் குருக்கள் பரம்பரையினரும் தமிழ்நாடு உத்தரகோசமங்கை வழிவந்தவர்களென தியாகக்குருக்கள் எனப்படும் சிவஶ்ரீ க.மங்களேஸ்வரக்குருக்கள் வழிவந்த குருக்கள் பரம்பரையினரை வெளியேற்றி 2023இல் பாலஸ்தாபனம் செய்ப்பட்ட ஈழத்து சிதம்பரம் அதன் புனித தன்மையை படிப்படியாக இழந்து வருகிறது என்பது ஊரவர்களும், ஊரை விட்டு இடம்பெயர்ந்து வாழும் உறவுகளும் அறிந்தும் அறியாமலும் இருப்பது மனவேதனைக்குரியது.
‘ஈழத்து சிதம்பரம்’ ஒரு போதும் நல்லூராக முடியாது. அது மட்டுமல்ல முருகன் கோயிலாக இருந்தாலும் ‘செல்வச்சந்நிதியும்’ நல்லூரும் கூட ஒன்றாக முடியாது.
அதே போன்று எமது காரைநகர் ‘திண்ணபுரம் சிவன் கோயிலுக்கும்’ நூறு ஆண்டுகளைத் தாண்டிய வரலாறும் வழிபாட்டு முறையும் அதுவே கலாச்சாரமும் ஆகி கலந்துள்ளது.
‘எனது ஊர் காரைநகர்’ என்றும் எப்போதும் நீங்கள் கேட்க தயாராக இருக்கும் போது மட்டும் உண்மையை உங்கள் காதுகளில் கொண்டு வந்து சேர்க்கும்.
பரமேஸ்வரனின் இச்செயற்பாடுகளிற்கு அப்பால் பணம், பதவி, ஆசை, மோகங்களிற்கும் அப்பால் மேலும் ஒரு வலுவான காரணம் உண்டு. அது என்னவென்று அறிய ஆவலாக உள்ளீர்களா…! கொஞ்சம் சிந்தியுங்கள்.
மிகுதியை நேரலையோடு சந்திப்போம்.




