காரைநகர் வலந்தலை சங்க நூற் செல்வர் பண்டிதமணி சு.அருளம்பலவனார் வீதி பெயர் சூட்டப்பட்டுள்ளது |09.08.2021

காரைநகர் வலந்தலை கணக்கனார்கண்டி வீதியில் வாழ்ந்து வந்த அமரர் சுவாமிநாதன் அருளம்பலவனார் சைவ தமிழ் உலகத்திற்கு ஆற்றிய பெரும் பணிகளால் இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் தமிழர்களால் அறியப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டவர்.

அமரர் சு.அருளம்பலவனார் அவர்களால் இலங்கையில் முதன்முதலில் திருவாசகத்திற்கான ஆராய்ச்சியுரை எழுதப்பட்டதாகவும் அதுவே அதற்கு முன்னர் எழுதப்பட்ட திருவாசக ஆராய்ச்சியுரைகளை விட தெளிவாகவும் விளக்கமாகவும் இருந்ததாகவும் தமிழகத்திலுள்ள அண்ணாமலைப்பல்கழைக்கழகத்தினரால் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அது மட்டுமன்றி தமிழக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் இலங்கையிலும் அன்னாரது நூல்கள் பாடநூல்களாக்கப்பட்டு பெருமை பெற்றன.

சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய பணிகளில் திருவாசகத்திற்கான ஆராய்ச்சியுரை, திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சியுரை, பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை, பெரும்பாணாற்றுப்படை ஆராய்ச்சியுரை என்பனவும் பெரும் கௌரவம் பெற்றன. யாழ் ஆரிய திராவிட பாஷாவிருத்தி சங்கம் இவற்றை கௌரவித்து அன்னாருக்கு வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலத்தில் நடைபெற்ற விழாவில் ‘பண்டிதமணி’ என்னும் பட்டத்தை வழங்கி கௌரவித்தார்கள்.

1910.04.11 இல் பிறந்த அருளம்பலவனார் 1929ம் ஆண்டு பத்தொன்பது வயதில் பாலபண்டிதர் பரீட்சையில் சித்திபெற்று 1936ம் ஆண்டு மதுரை தமிழ் சங்கம் நடாத்திய பண்டிதர் பரீட்சையில் திறமையாக சித்தியடைந்து ‘பண்டிதர்’ பட்டம் பெற்று இலங்கையின் பெயரை நிலைநாட்டினார்.

1961ம் ஆண்டு சாகித்திய மண்டலத்தினர் இவரின் பதிற்றுப்பத்து ஆராய்சியுரையினை கௌரவித்து பரிசளித்தனர். அதனை தொடர்ந்து 1961.10.08 அன்று காரைநகர் இந்துக்கல்லூரியில் காரை மக்களால் பாராட்டு விழா நடாத்தப்பட்டு அன்னாருக்கு ‘சங்கநூற் செல்வர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

1966.05.20 அன்று 56வது வயதில்அன்னார் இறைவன் திருவடிகளை அடைந்தார். அன்னாரது மறைவிற்கு பின்னர் 1993ம் ஆண்டு சாகித்திய மண்டல பரிசு மீண்டும் வழங்கப்பட்டு அன்னாரது சைவத்திற்கும் தமிழுக்குமான பணிகள் கௌரவிக்கப்பட்டன.

2021.08.09 இன்று அன்னாரது நினைவாக அன்னாரது பணிகளை கௌரவித்து காரை மக்கள் அன்னார் வாழ்ந்த இடமான காரைநகர் வலந்தலை கணக்கனார்கண்டி வீதியினை ‘பண்டிதர் அருளம்பலவனார் வீதி’ என பெயர்சூட்டி கௌரவிக்கின்றார்கள்.

காரைநகர் வலந்தலையில் பழைய கண்டி வீதியின் ஊடாக சிவன்கோயில் செல்லும் பாதையில் சம்பந்தர் கண்டிக்கு முன்னதாக வலது பக்கமாக பண்டித்தாழ்வு நோக்கி செல்லும் 183 மீற்றர் நீளமான வீதியே ‘பண்டிதர் அருளம்பலவாணர் வீதி’ என 2021.08.09 முதல் பெயர் மாற்றம் பெறுகின்றது.

இன்றைய நிகழ்வுகளை தலைமை தாங்கி திரு.நா.பாலகிருஷ்ணன் அவர்களும், பிரதம அதிதியாக காரைநகர் பிரதேச சபை தவிசாளரும் பண்டிதர் அருளம்பலவனார் அவர்களின் உற்ற உறவினருமான திரு.வி.கேதீஸ்வரதாசன் அவர்களும், மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள், கலாநிதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம், ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு.S.K.T சதாசிவம், திரு.செல்லையா கெங்காதரன் ஆகியோர் கலந்து கொள்ள சிறப்புற நடைபெற்றது.

நன்றி படங்கள்: சிந்துஜா போட்டோ

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

கனடா காரை கலாசார மன்றத்தின் அளப்பரிய சாதனை..! |25.06.2021

காரைநகர் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் தாம் பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்க்க வாழ்வார்கள்.|09.08.2021

Leave a Reply