காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் அடியவர்கள் மற்றும் ஊரவர்கள் அறிந்து கொள்ளப்படவேண்டிய அறிவித்தல்.! 02.08.2025 (முக்கியமான அறிவித்தல்).
நீலிப்பந்தனை அம்பாள் ஆலயத்தின் தெற்குப்புறமாக தச்சவெட்டையும் “துரையப்பா பங்கு” என அழைக்கப்படும் 26 பரப்பு காணியும் உள்ளது. அம்பாள் ஆலயத்தின் தெற்கு வாயில் முன்பாக வீதியோர கிணற்றையும் உள்ளடங்கலாக கோயிலுக்கு சரியாக நேரெதில் உள்ள 9 பரப்பும் 2 குழியும் அளவுள்ள காணி இன்று 02.08.2025 நீலிப்பந்தனை அம்பாள் ஆலயத்திற்கு தர்ம ஆதனமாக அமரர் துரையப்பா குமாரசாமி அவர்களது பிள்ளைகளாலும் மருமக்களாலும் பேரப்பிள்ளைகளாலும் மனமுவந்து சட்டப்படி எழுதி வழங்கப்பட்டுள்ளது.
தச்சவெட்டையின் ஒருபகுதி ஏற்கனவே துரையப்பா விஸ்வநாதன் அவர்களால் நீலிப்பந்தனை அம்பாள் ஆலயத்திற்கு தர்ம ஆதனமாக எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளதும் ஏற்கனவே யாவரும் அறிந்ததே.
அதன் எல்லையாக மிகுதி 26 பரப்பு காணி அமரர் துரையப்பா குமாரசாமி அவர்களது பிள்ளைகளிற்கான ஆதனமாக இருந்து வந்துள்ளதும், இக்காணியானது தச்சவெட்டையில் தொடங்கி நடுத்தெரு வரை முன்பக்கமா நல்ல தண்ணீர் கிணற்றுடன் அமைந்துள்ளதும் யாவரும் அறிவார்கள்.
தற்போது அமரர் துரையப்பா குமாரசாமி அவர்களது ஆதனமாக விளங்கி வந்த மேற்படி 26 பரப்பு காணியில் இருந்து நீலிப்பந்தனை அம்பாள் ஆலயத்தின் தெற்கு வாசலுக்கு சரியாக முன்னாள் உள்ள 9 பரப்பு 2 குழி அளவிலான காணி மட்டுமே அம்பாள் ஆலயத்திற்கு 02.08.2025 இன்று சனிக்கிழமையன்று ஊர்ப்பெரியவர்கள், சட்டத்தரணி ஆகியோர் கலந்து கொள்ள சாட்சியாக கோயில் ஆதீனகர்த்தாக்கள் சார்பில் திருமதி.சோமசேகரம்பிள்ளை செல்வராணி, திரு.சோமசேகரம்பிள்ளை குமரன் ஆகியோர் ஏற்றுக்கொள்ள கோயில் முன்றலில் தர்ம ஆதனமாக கோயிலுக்கு சட்டப்படி கையளிக்கப்பட்டது.
அமரர் துரையப்பா குமாரசாமி குடும்பம் சார்பாக அன்னாருடைய பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மனமுவந்து அமரர் துரையப்பா குமாரசாமி இராஜேஸ்வரி(கந்தையாபிள்ளை) வழி வந்த பூட்டனாகிய திரு.கந்தையாபிள்ளை ஜெயந்தன் அவர்களிற்கு சட்ட அனுமதியை வழங்கி, அதனூடாக இன்று திரு.கந்தையாபிள்ளை ஜெயந்தன் அவர்களால் நீலிப்பந்தனை அம்பாள் ஆலயத்திற்கு தர்ம ஆதனமாக வழங்கப்பட்டது.
மேலும் அம்பாள் ஆலயத்தின் மடப்பள்ளி அறைக்கு நேராக தெற்கு பகுதியில் மேட்டு காணியில் தொடங்கி நடுத்தெரு வரை செல்லும் மிகுதி காணி (26-9)= 17 பரப்பு காணி விற்பனைக்காக உள்ளது எனவும் கொழும்பில் வதியும் செல்வி கனகேஸ்வரி குமாரசாமி துரையப்பா அவர்கள் அறியத்தந்துள்ளார்.
தர்ம ஆதனமாக வழங்கப்பட்ட காணியில் வீதி ஓரமாக இருக்கும் நல்ல தண்ணீர் கிணறு கடந்த காலங்களில் குளிப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில் 2015ம் ஆண்டளவில் ஏற்பட்ட குடிநீர் பிரச்சனைகள் காரணமாக காரைநகர் பிரதேச சபை முன்வந்து குடிநீருக்கு பயன்படுத்தும் வகையில் புனரமைத்து சுத்தம் செய்தது, இருந்தபோதிலும் கேணிக்கு 50 M தூரத்திற்குள் இக்கிணறு அமைந்துள்ளதாலும் பெளசர் மூலம் குடிநீர் கிடைக்கப்பெறுவதாலும் புனரமைக்கப்பட்ட கிணறு ஊர் மக்களால் இன்றுவரை பாவனைக்குட்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் சில மாதங்களிற்கு முன்னர் இயற்கை எய்திய ஆலய ஆதீனகர்த்தாக்களில் ஒருவரான அமரர் அருளையா ஆனந்தகுமாரசாமி அவர்களுடன் நெருங்கி பழகிய கடந்த சில வருடங்களில் அன்னாரால் தெரிவிக்கப்பட்ட விடயம் என்னவெனில் ” தீசன் கோயிலுக்கென எவரிடமும் நிதியோ அல்லது பொருளோ நீங்கள் கேட்க வேண்டிய தேவை இல்லை, அம்பாள் தனக்கு எது தேவையோ அதை உரிய நேரத்தில் தானாகவே அடியவர்கள் கொண்டு வந்து வழங்கும் வகையில் மாற்றங்களை புரிய வைப்பார்” என்பதாகும்.
1980களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், ஆயிரக்கண்ணக்கான பக்தர்கள், வெள்ளி, செவ்வாய் ஆகட்டும், சிறிய அலங்கார திருவிழா ஆகட்டும் கூடுகின்ற கூட்டம் என்ன…ஊரிற்குள் இல்லாத செல்வந்தர்களா எல்லோரும் கோயிலை வளமாக்க அந்த காணியை வேண்டவும், இந்த காணியை வேண்டவும் என முண்டியடித்த காலங்கள் கண்முன்னே கடந்து செல்ல மானாலிப்பிட்டியும், துரையப்பா பங்கும் தேவையானளவு அம்பாளிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
அம்பாளின் கருணையோ கருணை. 1980களில் கனவு கண்ட பல இளைஞர்கள் மனங்களில் அன்றைய கனவு இன்னும் ஞாபகத்தில் இருந்தால்… அல்லது மீண்டும் அதே கனவுகளை வரவழைக்க அம்பாள் அடியவர்கள் மனங்களில் வரவேண்டும்.
ஆண்டிகளாக கண்ட கனவுகளை நிறைவேற்றவும் நீலிப்பந்தனை அழகான கிராமமாக எமது காலத்திலேயே மாற்றம் பெறவும் தொடர்ந்து பயணிப்போம்.






