(கண்டிப்பாக காரைநகர் மக்கள் முழுமையாக வாசிக்க வேண்டியது…!)
காரைநகர் ஈழத்து சிதம்பரம் வடக்கு வீதியில் அமைந்துள்ள “சிவாச்சிரமம்” புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் கும்பாபிஷேகத்தின் போது மீள திறக்கலாம்..!
ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் திண்ணபுரம் சிவன்கோயிலின் தேரோடும் வீதியாம் மாமணி வீதியில் வடக்குப்புறத்தில் அமையப்பெற்று பல தசாப்பங்களாக சைவப்பணியாற்றி சிவனடியார்களிற்கு அமுதளித்து வந்த ‘சிவாச்சிரமம்’ என பெயர்கொண்டதும் ‘அம்மா மடம்’ என அறியப்பட்டதுமான அமரர் திருமதி தங்கம்மா நடராசா அவர்களால் நிர்வகிக்கப்பட்டு அவரது மறைவின் பின்னர் 1980 இறுதிப்பகுதிலிருந்து செயற்படாது இருந்த அமுதசுரபி புனரமைக்கப்பட்டு மீண்டும் செயற்பட தயாராகவுள்ளது.
அமரர் தங்கம்மா நடராசா அவர்கள் தனது 80 ஏக்கர்( 80 பரப்பு அல்ல, 80 ஏக்கர்) நெற்காணிகளை தர்மசாசனம் செய்து அதன் மூலம் பெறப்படும் வருவாய்களை வைத்து நிர்வகிக்க Trustee நிர்வாகத்தை அமைத்து ஈழத்து சிதம்பரத்திற்கு ஒரு பகுதியையும், அதனை அண்டி சிவபூசை செய்துவந்த உத்தரகோச மங்கையில் இருந்து வந்து வம்சாவழியாக பூஜித்து வந்த அந்தணர் பரம்பம்பரைக்கு ஒரு பகுதியும், ஈழத்து சிதம்பர ஆஸ்தான கலைஞர்களான அமரர் கைலாயக்கம்பர் பரம்பரயினருக்கு ஒரு பகுதியும் மிகுதியில் ‘சிவாச்சிரமம்’ பணிகளிற்காகவெனவும் தனது சொத்துக்களையும் கிளிநொச்சியில் அமைந்துள்ள 80 ஏக்கர் நெற்காணிகளையும் தர்மசாசனம் செய்து வைத்ததுடன் அதற்கென ஒரு Trustee ஐயும் அமைத்து வெளிப்படையாக அனைவரும் அறிய சட்டப்பிரகாரம் உரிய வழிமுறைகளையும் செய்து வைத்தார்.(கடவுளின் செயலால் அந்த Trustee இன் சட்ட பதிவுகள் சிலவும், விபரங்கள் சிலவும் அவற்றின் பிரதிகள் எனது கைகளிலும் ஆண்டிகேணி ஐயன் தந்து வைத்துள்ளான்).
கிளிநொச்சியில் ‘சிவாச்சிரமம்’ பெயரில் தர்மசாசனம் செய்யப்பட்ட 80 ஏக்கர் காணில் சிறுபகுதியானது 1980 மற்றும் 90களில் அப்போதைய நிர்வாகத்தை கவனித்து வந்த விடுதலைப்புலிகளால் ஒரு சிலருக்கு பராமரிக்க வழங்கப்பட்டதுடன் பெரும்பகுதிக்கான குத்தகையும் வருமானமும் அமரர் தங்கம்மா நடராசா அவர்களால் நியமிக்கப்பட்ட நிர்வாக குழுவினரால் பெறப்பட்டும் வந்துள்ளது.
அதன்மூலம் 2015ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் பெருமளவிலான நெல் ஈழத்து சிதம்பரத்திற்கு கொண்டுவரப்பட்டதும் அதன் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டதும் யாவரும் ‘எனது ஊர் காரைநகர்’ ஊடான செய்திகளின் மூலமும் புகைப்படங்கள் ஊடாகவும் நீங்கள் அறிந்ததாகும்.
‘சிவாச்சிரமம்’ மற்றும் தங்கம்மா நடராசா மற்றும் அவரது கணவரான நீதிபதி நடராசா ஆகியோரது பெரும் பணிகளை அறிந்தவரும் அவர்களுடன் சமகாலத்தில் வாழ்ந்தவருமான வைத்தியர் S.சுவாமிநாதன் அவர்கள் தனது சொந்த முயற்சியால், சொந்த நிதியான பல மில்லியன் ரூபா செலவில் சிவாச்சிரமத்தை புனரமைத்து மீண்டும் செயற்படும் வகையில் இருந்த மாதிரியே புனரமைத்துக்கொடுத்துள்ளார்.
வைத்தியர் சுவாமிநாதன் அவர்களது சிவாச்சிரம புனரமைப்பும், ஈழத்து சிதம்பரம் மூன்றாம் வீதியில் தினகரன்பிட்டி கேணியும், மற்றும் சில புனரமைப்பும் தனது சொந்த நிதியில் 95% விகிதம் மற்றும் ஒரு சிலரது பொருள் உதவிகளுடனும் 2015 முதல் 2023 வரையான காலப்பகுதியில் அண்ணளவாக 45 இலட்சம் ரூபா செலவில் புனரமைத்து வழங்கியுள்ளார்.
2023ம் ஆண்டு நிறைவு பெற்ற சிவாச்சிரம புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று அதனை மீள செயற்படுத்தும் வகையில் ஈழத்து சிதம்பரம் ஆதினகர்த்தாக்களிடம் அதன் பொறுப்பை கையளித்து தனது பணியினை நிறைவு செய்துள்ளார் வைத்தியர் சுவாமிநாதன் அவர்கள்.
காரைநகர் வாழ் ஊர் மக்களே, வைத்தியர் சுவாமிநாதன் அவர்கள் தனது 90வது வயதுகளில் சில மாதங்களின் முன்னர் தனது துணைவியாரை இழந்துள்ள நிலையில் தனது வாழ் நாள் சேமிப்பின் பெரும் பகுதியினை நாம் எல்லோரும் அறிந்த ‘சிவாச்சிரமம்’ என்னும்… வரலாற்றில் பதிவாகியுள்ள… சிவப்பணியாற்றி சிவனடியார்களிற்கு பல தசாப்தங்களாக அமுதளித்து வந்த ‘அம்மா மடத்திற்கு’ தானமாக வழங்கியுள்ளார்.
வைத்தியர் சுவாமிநாதன் அவர்களுடைய வாழ் நாளிலேயே அவருடைய சிவப்பணியினையும் காரைநகர் மக்களின் அன்பினையும் அவருடைய தூய ஆத்மாவிற்கு உயிர் உள்ள நிலையிலேயே சமர்ப்பணம் ஆக்குவோம்.( உயிருடன் உள்ளவரை ஆத்மா என்பதற்காக தப்பான அர்த்தம் கண்டு கொள்ளாதீர்கள்).
வைத்தியர் சுவாமிதாதன் அவர்களது மனமும் அவரது தற்போதைய வைத்திய பணி மட்டுமன்றி காரைநகர் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையும் பக்தியும் அவர் வாழும் போதே அவருடைய பணிகள் கெளரவிக்கப்பட வேண்டும்.
ஐந்தும் பத்தும் கொடுக்க மனமில்லாத ஒரு சிலர் அடுத்தவர் பணத்தில் தமது பெயர் பதிக்க ஐந்து சதமும் செலவு செய்ய முடியாத நிலையில் தனது வாழ் நாள் வைத்திய துறையில் சம்பாதித்து தனது ஓய்வு காலத்திற்காக சேமித்த தொகையினையும் ஊரிற்கே தானமாக வளங்கியுள்ளார். தனது வயது முதிர்ச்சியையும் பாராது காரைநகர் மக்களிற்கு இன்றுவரை இந்த நிமிடம் வரை வைத்தியப்பணியாற்றிவரும் எங்கள் ஊர் வைத்தியருக்காக நாம் என்ன செய்ய போகிறோம்..!
அன்பான ஊரவர்களே அவருடைய புனித ஆத்மாவை உயிருடன் வாழும் போதே திருப்திப்படுத்துங்கள்.
05.07.2026 அன்று ஈழத்து சிதம்பரம் செளந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப்பெருமான், ஆண்டிகேணி ஐயன் மீண்டும் தங்கள் நிரந்தர இடம் அமையும் போது எங்கள் ஊர் ‘சுவாமிதாதனுக்கும்’ அவர் பணி சிறக்க அவருடைய எண்ணம் சிறக்க, அவர் ஆத்மா குளிர ‘சிவாச்சிரமத்தை திறந்து வைப்போம்.
செய்வீர்களா..காரை மக்களே..! கடவுளை மனித உருவில் காண்பீர்களா…காரை மக்களே..! வைத்தியரையே கடவுளாக கருதும் எமது சம்பிரதாயம், எங்களூர் சுவாமிநாதன் கடவுளுக்கே நாதனாக மிகப்பெரும் கைங்கரியம் செய்துள்ளார்.
பொறுத்தது எல்லாம் போதும். கடவுள் மனித உருவில் உங்களில் ஒருவனாக உள்ளார். என்னை கருவியாக அதை உங்களிற்கு சொல்லவும் வைத்துள்ளார்.
இப்போ இல்லா விட்டால் எப்போ…! செய்தவனுக்கு சிறப்பு செய்வது செத்தா பிறகு அல்ல..! உயிருடன் வாழும் போதே செய்வோம்.
நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்.
செயல் தான் முக்கியம்.











