காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…
காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன.
அத்துடன் இந்த சமய சடங்குகள், பாரம்பரியம், ஆகம விதிகள் எல்லோராலும் பின்பற்றப்பட்டு வருவதோடு, இன்றும் சந்ததிவழியாக பின்பற்றப்பட்டு வருகின்றன என்பது யாவரும் அறிந்ததே.
அதன்காரணமாக இன்றும் சமயச்சடங்குகளை நிறைவேற்ற வெளியூர்களில் இருந்து காரைநகரிற்கு பணியாற்ற வரும் அந்தணர்களும், சமய சடங்காளர்களும், தவில், நாதஸ்வர கலைஞர்கள் என பலரும் காரைநகரின் தனித்துவமான பண்பாடு, பழக்கவழக்கம், நம்பிக்கை என்பவற்றை அறிந்தும், தெரிந்தும், கேட்டும் விளங்கிக்கொண்ட பின்னரே பொன்னாலைப்பாலத்தை கடந்து காரை மண்ணிற்குள் பிரவேசித்தும் வருகிறார்கள். இந்த நடைமுறையானது இன்றும் மேற்படியானவர்கள் தமது இஷ்டத்திற்கு காரைநகரிற்குள் கடமைக்காகவும், காசுக்காகவும் தமது சமய, ஆகம விதிகளை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை கட்டியம் கூறியுள்ள உண்மையாகும்.
ஆனாலும் காரைநகர் ஈழத்து சிதம்பரத்தின் புனிதம், கடந்த 125 ஆண்டுகள் பழமை கொண்டது. ஈழத்து சிதம்பரத்தின் ஆடலரசன் நடராசப்பெருமானின் புனித த்தை திட்டமிட்டு சீரளிக்கும் வகையில் சைவ ஆகம விதிகளிற்கு அப்பாற்பட்டு நல்லூர் கலாசாரத்தை புகுத்தவும், ஆகம விதிகளை துறந்தும், வர்த்தக ரீதியாக தமது சொந்த வருமானங்களிற்கு ஆதாரமாக திண்ணபுரம் சிவன்கோயிலை பயன்படுத்த, ஆதீனகர்த்தாக்களை பலரும் அறிந்த வகையில் பல வழிகளிலும் ‘blackmail’ செய்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார் ஒருவர்.
குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளாக ஈழத்து சிதம்பரத்தின் ஒவ்வொரு நிர்வாக செயற்பாடுகளும் இதனை அப்பட்டமாக வெளிக்கொண்டு வந்துள்ளது. 2011ம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற கும்பாபிபிஷேகத்தின் பின்னர் திட்டமிட்ட வகையில் கோயில் நிர்வாகம் சார்ந்து கோர்ட் கேசுகளும், நடைமுறைகளும், நிதி மேலாண்மைகளும் மாற்றப்பட்டு வந்துள்ளதும், இன்று முற்றிலும் எந்த விடயமானாலும் ‘அண்ணனை’ கேட்க வேணும், ‘அண்ணனிடம் சொல்லுங்கள்’ என்று வெளிப்படையாகவே கூறுகின்ற அளவிற்கு ஈழத்து சிதம்பரத்தின் ஆதீனகர்த்தாக்களில் ஒருவர் கொண்டுவரப்பட்டுள்ளார்.
காலம் காலமாக இருந்து வந்த ஆதீனகர்த்தாக்கள் பரம்பரம்பரையில் இருந்து ஒரு பரம்பரையினர் கடந்த பத்து ஆண்டுகளில திட்டமிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதையும் உணர்ந்து கொள்ளாத முடியாத காரை மக்கள்…. மற்றொரு ஆதீனகர்ரத்தீவாகிய முருகேசு சுந்தரலிங்கம் குகநேசன் அவர்கள் கோயிலின் முன்னாள் 50m தூரத்தில் ஐயனார் வாசலின் முன்னாள் பிறந்து வளர்ந்து தனது இளமைக்காலத்தில் துடிப்புடனும், தனது பரம்பரையின் பொறுப்பு அறிந்து செயற்பட்டு வந்த 21ம் நூற்றாண்டின் இளைஞர் ஆவார். ஆனால் இன்று அவரையும் ‘டம்மி’ பீசாக்கி…. ‘அண்ணன்’ ஆட்சியில் ஈழத்து சிதம்பரம்.
எனக்கு தெரிந்தவரை திரு. சுந்தரலிங்கம் குகநேசன் அவர்களின் நான்கு பரம்பரை மூலமாக ‘ஈழத்து சிதம்பரமாக’ இலங்கையின் சிவத்தலங்களில் ஒன்றாக விளங்கும் திண்ணபுரம் சிவன் கோயிலின் ஆதீனகர்த்தாவாக திகழ்ந்து வருகிறார். இன்று 40 வயதுகளை தாண்டிய நிலையில் எதனையும் தனித்து நின்று முடிவு செய்ய முடியாத நிலைக்கு எவ்வாறு தள்ளப்பட்டார்..!
திரு. குகநேசன் சுந்தரலிங்கம் அவர்களது பேரனார் அமரர் து. முருகேசு அவர்களின் நிர்வாகத்தை அறிந்தவர்கள் இன்னமும் உயிரோடு வாழ்கிறார்கள்..
மாப்பாணவூரி(கிழக்கு தெரு), சடையாளி, நடுத்தெரு, புதுறோட், வடகாடு மக்களை நம்பியே எனக்கு தெரிந்தவரை சிவன்கோயில் நிர்வாகம் செயற்பட்டு வந்தது. இவர்கள் சொல்வது தான் சட்டம். ஆனால் இவர்களில் ஒருவரும் தனிப்பட்ட தமது செயலுக்காக திண்ணபுரம் சிவன்கோயிலை பயன்படுத்தியதும் இல்லை, பயன்படுத்தவும் முடியாது.
மாப்பாணவூரியாரையும் நடுத்தெருவாரையும் தாண்டி சிவன்கோயிலில் ஆதீனகர்த்தாக்களிற்கு அட்வைஸ் பண்ணக்க்கூடியவர்கள் எவரும் இருந்தது இல்லை, அந்தளவிற்கு துணிந்தவர்களும் வேறு இடங்களில் இருந்தும் வந்து விட முடியாது.
(நான் பிரதேசவாதம் கதைக்கவில்லை, அன்று பிரதேசவாதமும் இருந்தது இல்லை).
அன்பானவர்களே… ஈழத்து சிதம்பரத்தின் 125 வருட கால வரலாறுகளை தெரிந்து கொண்டவர்களே… கடந்த 125 ஆண்டுகால திண்ணபுர சிவன்கோயிலின் உரிமையை, அதன் நிர்வாகத்தை கைப்பற்றவோ அல்லது தான் நினைத்ததை செயற்படுத்தவும், ஆதீனகர்த்தாக்களிடம் இருந்து கோயிலை நடுத்தெருவிற்கு கொண்டுவரவோ முயற்சித்தது இல்லை. ஆனால் இதோ இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.
முன்னைநாள் சுங்கத்துறை அதிகாரியும் தங்கோடையை சேர்ந்தவருமான அமரர் K.K.சுப்பிரமணியம் அவர்கள் அளவிலா சிவபக்தன். அவருடைய காலத்தில் தான் பங்குனி மகோற்சவத்திற்கு அடுத்தபடியாக திருவெம்பாவை உற்சவமும் நடேசப்பெருமானின் ஆருத்ரா தரிசனமும் மகோற்சவத்தை விடவும் பெரும் வரவேற்பை பெற்றது. அமர ர் K.K. சுப்பிரமணியம் ஊடான சொந்தம் மற்றும் இன்னொரென்ன அரசியல் பணிகள் காரணமாக அமரர் தியாகராசா மகேஸ்வரன் ஈழத்து சிதம்பரத்தை வந்தடைந்தார்.
ஈழத்து சிதம்பரத்தின் பெயரும், அங்கிருந்த நடைமுறைகள், நிர்வாக செயற்பாடுகள் ஊடாக பயனடைந்த அரசியல்வாதிகள் பலர் ஆனால் அவர்களில் எவரும் ஈழத்து சிதம்பரத்தின் நிர்வாகத்தை கைப்பற்ற முனையவே இல்லை.. அதே போன்று இந்துகலாசாரா அமைச்சராக ஈழத்து சிதம்பரத்தின் புனரமைப்பு மற்றும் சிவன், ஐயனார் சித்திர தேர்கள் உட்பட பல திருப்பணிகளை நிறைவேற்றி ஆதீனகர்த்தாக்களிற்கு உறுதுணையாக விளங்கிய அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களும் ஈழத்து சிதம்பரத்தின் நிர்வாகத்தில் தலையிட்டதும் இல்லை, தலையிட விரும்பியவரும் அல்ல. ஆதீனகர்த்தாக்கள் ஆண்டிஐயா அம்பலவிமுருகன், முருகேசு சுந்தரலிங்கம் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தே திருப்பணிகள் பலவற்றையும் நிறைவேற்றி வைத்தார்.
2011ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் ஈழத்து சிதம்பரத்தின் நிர்வாகத்தை கைப்பற்றவும், அதனை வைத்து 2009ம் ஆண்டுக்கு பின்னர் சேர்த்த சொத்திற்கு கணக்கு காட்டவும் திட்டமிட்டு கடந்த 10 ஆண்டுகளாக ஈழத்து சிதம்பரம் அதன் புனித தன்மையை இழந்து வருவதும், கடந்த மூன்றாண்டுகளிற்கு மேலாக பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயிலில் ஆகமவிதிகளிற்கு அப்பாற்பட்டு நல்லூர் கலாசாரம் புகுத்தப்பட்டு வந்துள்ளதுடன், மகோற்சவத்திற்கு முன்னதாக கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்பதும், கும்பாபிஷேகத்திற்கு பின்னர் கொடியேறி மகோற்சவம் நடைபெற்று சிவனிற்கும் பார்வதிக்கும் திருக்கல்யாணம் நடைபெறவேண்டும் என்பதும் அதன் பின்னரே மற்றைய உற்சவங்கள், சுவாமிகள் வீதி உலா வருவதும் ஆகமங்கள் கூறும் விதிகளாகும்.
இதனை அறிந்தே பலரும் 05.07.2026 கும்பாபிஷேகம் நடைபெற்றாலும் 15.12.2026 இல் திருவெம்பாவை உற்சவம் நடைபெறுமா..? நடைபெற்றால் பஞ்சரதப்பவணி நடைபெறுமா..? அவ்வாறாயின் ஆடலரசன் ஆழிக்கூத்தாட பார்வதியை விடுத்து தனியாக பெருந்தேரில் வெளிவீதிவரப்போகிறாரா அல்லது ஆனந்தகூத்தாடி ஊரிற்கும் உலகிற்கும் அருள்வளங்க வரப்போகிறாரா…? என்றெல்லாம் ஆகமம் தெரிந்தவர்கள், சிவனை முழுமுதல் கடவுளாக கொண்டு வழிபடும் சைவசமய பக்தர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆகமங்களை கற்றுத்தேர்ந்த அந்தணர்களும் கலாச்சாரம் போற்றும் காரைநகர் மக்களும் நடப்பதை கண்டு கொள்ளலாம் என்றும் மெளனமாகவே இருந்து ஆகமங்களையும் ஊர் சமய கலாசாரங்களையும் குழிதோண்டி புதைத்து விடாதீர்கள்.
05.07.2026 கும்பாபிஷேகத்திற்கு பின்னர் சிவன் பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறவும் அதற்கும் சைவ ஆகமங்களில் குறிப்புகள் உள்ளன என்றும் ஆகமங்கள் கற்றறிந்த அந்தணர்கள் கூறுகின்றனர். எனவே அவற்றையும் பரிசீலித்து ஆதீனகர்த்தாக்களின் பரம்பரை வழிவந்த கடந்த 125 ஆண்டுகால அர்ப்பணிப்புகளையும் கருத்தில் கொண்டு ஊர்மக்கள் செயற்படவேண்டும்.
‘என் கடன் பணி செய்து கிடப்பதே’
‘நன்றும் தீதும் பிறர் தரவாரா..’
என்சிற்றறிவிற்கும் நான் கற்ற கல்விக்கும், நான் ஒழுகிவரும் சைவசமய கலாசார பண்பாடுகளிற்கு அமையவும் சொல்ல வேண்டிய விடயங்களை சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்லியிருக்கிறேன்.
இலங்கையின் வடபால் யாழ்ப்பாணத்தின் நெற்றிப்பொட்டாக திகழும் காரைநகர் யாழ்ப்பாண மக்களிற்கே சைவ ஆகமங்களை கற்றுக்கொடுத்த சைவப்பெரியார்களை உருவாக்கி அவர்கள் வழி வாழ்ந்து வருவதோடு இன்றும் சைவசமய கலாச்சாரத்தை இலங்கை திருநாட்டிற்கே உணரவைக்கின்ற பெருமை பெறும் பூமியாகும். காரை மண் சிவபூமி. சொல்லிச் சென்றவர் யோகர் சுவாமிகள்.
எல்லாம் அவன் செயல்.



