காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக 2018ம் ஆண்டு மார்ச் மாதம் தெரிவு செய்யப்பட்ட திரு.விஜயதர்மா கேதீஸ்வரதாசன் அவர்கள் 21.10.2021 அன்று காலமானதை தொடர்ந்து தவிசாளர் பதவி வெற்றிடமானது. அதனையடுத்து வெற்றிடமான பிரதேச சபை அங்கத்தவர்களிற்கு அமரர் வி.கேதீஸ்வரதாசன் அவர்கள் போட்டியிட்ட தொகுதியில் இருந்து திரு.கை.நாகராசா அவர்கள் 05.11.2021 அன்று பிரதேச சபை உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டார்.









அதனையடுத்து தவிசாளர் தெரிவு 10.11.2021 இன்று புதன்கிழமை நடைபெற்றது. காரைநகர் பிரதேச சபையின் 11 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகத்தில் 2018ம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவில் சுயேட்சைகுழு சார்பில் மீன் சின்னத்தில் போட்டியிட்ட 3 அங்கத்தவர்களும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் 3 அங்கத்தவர்களும், ஐதேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட 2 அங்கத்தவர்களும், ஈ.பி.டி.பி சார்பில் போட்டியிட்ட 2 அங்கத்தவர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட அங்கத்தவருமாக 11 அங்கத்தவர்கள் தெரிவாகியிருந்தனர்.
இன்று நடைபெற்ற காரைநகர் பிரதேச சபை தவிசாளர் தெரிவானது பகிரங்க வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என முதற்கண் வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தவிசாளராக தெரிவு செய்யப்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட திரு. ஆண்டிஐயா விஜயராகவன் அவர்களும் சுயேட்சைகளின் சார்பில் போட்டியிட்ட திரு.மயிலன் அப்புத்துரை அவர்களும் முன்மொழியப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து நபெற்ற வாக்கெடுப்பில் 5 வாக்குகளைப் பெற்று திரு.மயிலன் அப்புத்துரை அவர்கள் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
சுயேட்சை வேட்பாளர்கள் மூவருடன் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் இருவருடன் வாக்குமாக 5 வாக்குகள் பெற்று திரு.மயிலன் அப்புத்துரை தெரிவானார்.
ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பிரதேச சபை உறுப்பினர்களாக இருந்த திரு.சுந்தரேசன் கிருஷ்ணபவன், திருமதி.கனகசபை தவமணிதேவி ஆகியோர் இன்றைய நிகழ்வில் பங்களிக்கவில்லையென்பதும், தமிழ் தேசிய முன்னணி சார்பில் பிரதேச சபை உறுப்பினராக இருந்த திருமதி தவமணி பரமானந்தம் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலமை வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



