23.08.2024 வெள்ளிக்கிழமை.
கல்விக்கான உதவிக்கு கையேந்த வைக்காதீர்கள்.!
கண்டு கொண்டு உதவிடுவோம். காரை இந்துவில் உயர்தரத்தில் Bio Science பாடத்தில் திறமையுடன் கல்வி கற்றுவரும் காரைநகர் சடையாளி மல்லிகையை சேர்ந்த ஒரு மாணவனுக்கு உடனடியாக கற்றலுக்கான உதவியை வழங்கும் பொருட்டு மாதாந்தம் 8,000 ரூபா முதல் 10,000 ரூபா வரை உடனடியாக உதவ வேண்டியுள்ளது. தகப்பனை இழந்து தாய் வாய் பேச முடியாத வலுவிழந்த நிலையிலும் இன்னொருவர் தயவுடன் வாழும் மாணவன் காரை இந்துவில் Bio Science பாடத்தில் திறமையுடன் கல்வி கற்று வருவதுடன் படைத்தவன் கருணையால் கல்வியில் ஆர்வத்துடன் பயின்று வருகிறார் என்பதும் இந்த மாணவனை மேலதிக ரியூசன் வகுப்புகளிற்காக சென்று பயிற்றுவிக்க உதவினால் ஒரு வைத்தியனாக உருவாக்க முடியும் என காரை இந்து அதிபர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
காரை இந்து பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக மேற்படி மாணவனின்கான மேலதிக கற்றலுக்கான உதவி மாதாந்தம் 10,000 ரூபா வரை உதவ கேட்டதும் ஒப்புக்கொண்டுள்ளேன். உடனடியாக August மாதம் முதலாவது மாதத்திற்குரிய 10,000 ரூபாவை வழங்கவும் , ஊர்ப்பணிகளிற்காக எனது கனடிய மாதாந்த Costco சம்பளத்தின் பெரும்பகுதி சென்று கொண்டிருப்பதால் இந்த கைங்கரியத்தை இன்னொருவர் ஏற்றுக்கொண்டு தர்மத்தின் பெரும் பயனை அடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் தலைமையில் அமைந்துள்ள காரை இந்து பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக இந்த மாணவனுக்கான உதவி மாதாந்தம் வழங்கப்படும். நேரடியாக காரை இந்து பழைய மாணவர் சங்க கணக்கிற்கு உங்கள் உதவியை அனுப்பி வைக்கலாம். எனக்கும் இந்த மாணவனிற்கும் நேரடியாக எந்தவித சம்பந்தமும் இல்லாது விட்டாலும் வருடத்திற்கு இரண்டு தடவை ஊர் சென்று வெட்டியாக ஊர் சுற்றும் என்னால் இதற்கான உத்தரவாதத்தை வழங்க முடியும்.
‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக செல்லும் எந்த உதவிகளும் தவறான கைகளில் சென்றது இல்லை, எம்மூடாக உதவி பெற்றவர்களை, பெறுபவர்களை அவ்வப்போது கண்காணிப்பதும் அவர்களுடைய செயற்பாடுகள் தொடர்பாக துல்லிதமாக அறிகின்ற வசதிகளையும் பல்வழிகளிலும் ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் ஆகிய நான் கொண்டுள்ளேன்.
1989 ஐப்பசி மாதம் 6ம் திகதி குமரப்பா, புலேந்திரன் ஞாபகர்த்தமாக free pass நடவடிக்கை ஊடாக ஊரைவிட்டு உயிரை கையில் பிடித்து ஓடிவந்த நான் 2015 க்கு பின்னர் வருடத்திற்கு இரண்டு தடவை ஊர் செல்வதன் நோக்கம், அன்று நான் விட்டு வந்த என் காரை மண்ணை அங்குலம் அங்குலமாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.
ஊர்ப்பணியில் காரை மன்றங்கள் ஊடாக மிகப்பெரும் அபிவிருத்தி கண்டு வந்த காரை மண், தற்போது பொதுப்பணியில் ஈடுபட்ட ஒரு சிலரின் நடவடிக்கைகளினால் வெளிநாடுகளில் மட்டுமன்றி உள்ளூர் காரைநகர் அபிவிருத்தி சபை மீதும் நம்பிக்கை அற்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
கனடாவில் தன்னிலமைகளையே கொண்டு செல்ல முடியாத ஒருவன் எப்போது கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவனாக ஆக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதோ அன்றோடு கனடா காரை கலாசார மன்றத்திற்கு சவக்குழி தோண்டப்பட்ட நாள். அதற்கு நானும் தெரிந்தோ தெரியாமலோ உடந்தையாக இருந்துள்ளேன் என்பதால் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
தனியொருவரிற்கு கல்வி வழங்குவதன் மூலம் ஏழு சந்ததிகளின்கு கல்வி புகட்டியவர்களாவீர்கள். கடவுளே கண்டு அதிசயப்படும் விடயம் மனிதன் பெற்ற கல்வியறிவு. மனிதனை படைத்த கடவுளிற்கே மறு அவதாரம் கொடுத்தவன் மனிதன்.
ஏழு சந்ததிகளை வாழ வைக்க தனி ஒருவருக்கு கல்வி புகட்டினால் முடியும் என்பதை கல்வியறிவு இருந்தால் உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.
காரைநகர் சடையாளி மல்லிகையை சேர்ந்த மாணவனுக்கு மொத்தமாக இரண்டு வருடங்களிற்கு உயர்கல்வி கற்பதற்கு இரண்டு இலட்சத்து நாற்பது ஆயிரம் ரூபாய்கள் தனி ஒருவரால் கொடுக்க வேண்டியதில்லை. உங்களால் முடிந்ததை கொடுங்கள், காரைநகர் இந்துகல்லூரி பழைய மாணவர் சங்கம் நீங்கள் வழங்கும் ஒவ்வொருவருடைய நிதியும் அந்த மாணவனின் மேலதிக கல்விக்காக செல்வதை நெறிப்படுத்தும், அதில் ஏதும் தவறுகள் ஏற்பட்டால் அல்லது வேறு காரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டு தடைகள் ஏற்பட்டால் காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் மொத்த நிதிக்கும் பொறுப்பு ஏற்கும்.
இது காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதனுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் அல்ல, ஆனாலும் பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகத்தின் செயற்பாடுகளை அறிந்து கேட்காமல் செய்யப்படும் உதவியாகும்.
கேட்காமல் அறிந்து கொண்டு செய்தால் உதவி, கேட்டுச் செய்தால் பிச்சை. தயவு செய்து எவரையும் பிச்சை எடுக்கும் அளவிற்கு கொண்டு சென்று விடாதீர்கள்.
எங்கள் ஊர் காரைநகர் எப்போதும் யாழ்நகரின் நெற்றியில் திலகமாய் இருக்கும்.
– எனது ஊர் காரைநகர்.



