ஐங்கரன்.. என்னும் ஊரவன்..! 26.08.2024 இன்று அதிகாலை முதல் காரை மண் மயான அமைதியில் உறைந்துள்ளது.
ஐங்கரன்.. என்னும் ஊரவன்..!
26.08.2024 இன்று அதிகாலை முதல் காரை மண் மயான அமைதியில் உறைந்துள்ளது.
விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் ஐங்கரன் பத்மநாதன் என்னும் ஒரு இளம் குடுப்பஸ்தன் அகால மரணச்செய்தி இரண்டுக்கு நாலு தடவை உறுதிப்படுத்த தோன்றியது.
இலங்கை நேரம் 25.08.2024 ஞாயிறு இரவு 8.30 மணியளவில் தனது மகனுடன் யாழ் Brown Road இல் வலம்புரி காரியாலயத்திற்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஐங்கரனை அதிவேகமாக குடிபோதையில் நான்கு பேர் கொண்ட முச்சக்கர வண்டி ஒன்று மோதித்தள்ளி குடை சாய்ந்தது. குடைசாய்ந்த முச்சக்கர வண்டியை மீண்டும் நிமிர்த்தும் நோக்குடன் குடிபோதையில் வந்தவர்கள் புரட்டிய போது மீண்டும் நெஞ்சிலே விழுந்தது முச்சக்கர வண்டி. படுகாயமடைந்த நிலையில் யாழ் Northern வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐங்கரன் உயிர் வைத்தியர்கள் பலரது கண் முன்னே அதிகாலை 3.30 மணியளவில் பிரிந்தது.
கடந்த மாதம் தனது 50வது பிறந்த நாளினை வெகுவிமர்சையாக யாழ் நகரில் கொண்டாடிய ஐங்கரன் காரைநகரின் முதல் இணையத்தள ஊடகவியலாளர் என்னும் பெருமைக்குரியவர். ஊர் மண்ணின் மீது அளவிலா அன்பு கொண்டவர். 2005ம் ஆண்டு முதல் காரை மண்ணின் செய்திகளை வெளியுலகத்திற்கு கொண்டுவர கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக தீசன் திரவியநாதன் ஆகிய என்னால் ஊடகவியலாளராகவும் மறுஅவதாரம் பெற்றுக்கொண்டவர்.
‘எனது ஊர் காரைநகர்’ தனித்து செயற்பட்ட போதும் கடந்த வாரம் வரை என்னோடு தொடர்பில் இருந்தவர்.
கடந்த பத்து ஆண்டுகளில் ஐங்கரன் அவர்கள் மக்களிற்காக ஆற்றிய சேவைகள் பல. சுமூகமாக எந்த பிரச்சனைகளை கையாளவேண்டுமாயின் ஐங்கரனை தொடர்பு கொண்டால் போதும்.
ஐங்கரனே கடந்த வாரம் உன்னோடு பேசிய போது உன்னால் மட்டும் முடிந்த இன்னொரு பணியினையும் கொடுத்தேனே முடிக்காமல் சென்றுவிட்டாய்.
ஐம்பது வயது என்பது ஆபத்தான வயது போலும்.
கடந்த வருடம் கனடா வந்தாய், வீட்டிற்கு வந்தாய் விடிய விடிய கதைத்திருந்தோம். இடையிலேயே விட்டு விட்டு போய்விட்டாய். ஏன்டா அவசரம். காலனவன் காத்திருந்து உன்னை கவர்ந்து சென்றுவிட்டான்.
உன்னோடு பேசிய பொழுதுகள், ஊரிற்காய் நீ செலவு செய்த நேரங்கள், எனக்காக நீ செய்த தியாகங்கள் எனக்கும் உனக்கும் மட்டுமே தெரிந்த ஊர் விடயங்கள் எப்போதும் இனி உயிர் பெறப்போவதில்லை.
நீ எல்லாவற்றிலும் கெட்டிக்காரன். ஐம்பது வயதிலே அனைத்தையும் பெற்றவன் என்பாய். அதற்குள்ளே மரணத்தையும் பெற்றுவிட்டாய்.
ஐங்கரா நீ விட்டுச்செல்லும் வலி ஏராளம். நீ இல்லாத காரைநகர் நிறையவே இழந்து நிற்கும்.


Leave a Reply
You must be logged in to post a comment.