பிரித்தானியாவில் காரைநகர் மக்களின் சார்பாக இயங்கி வரும் “பிரித்தானியா காரை நலன்புரி சங்கம்” 26.10.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நிர்வாக சபையினை திரு.பொன்னையா ஞானாநந்தன் தலைமையில் பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 26.10.2025 அன்று Zoom செயலி ஊடாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரும், காரைநகர் களபூமியை சொந்த இடமாகவும், கண்டி பரதேனியா பல்கலைக்கழக பொறியியல்துறை பட்டதாரியும், 1969 முதல் 1985 வரையான காலப்பகுதியில் இலங்கை புகையிரத சேவை திணைக்கழத்தில் பொறியியலாளராக கடமையாற்றியவரும், முன்னைநாள் பிரித்தானியா காரை நலன்புரிச்சங்க பொருளாளராக சேவையாற்றியவரும் காரை மண்ணின் அபிமானியும், பிரித்தானிய காரை மக்களின் நன்மதிப்பை பெற்றவருமான திரு. பொன்னையா ஞானாநந்தன் அவர்கள் ஏகமனதாக தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் செயலாளராக காரைநகர் களபூமியை சேர்ந்த திரு.அம்பிகைபாகன் சிவபாதசுந்தரம் அவர்களும், பொருளாளராக பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் கடந்த இரண்டு நிர்வாக சபையில் பொருளாளராக சேவையாற்றியவரும் கணக்காளருமான திரு. இராசேந்திரசோழன் தர்சன் அவர்களும் நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளிற்கு தெரிவாகியுள்ளனர்.
பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கம் இடம்பெயர்ந்து வாழும் காரைநகர் மக்களின் நல்லாதரவுடன் முதன்முதலாக 1980களின் நடுப்பகுதியில் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டு, காரைநகரில் வாழும் மக்களிற்காக குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்க குடிநீர் வழங்கலை ஆரம்பித்து வைத்ததுடன் இன்றுவரை அதனை பின்பற்றி ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊடாக காரைநகர் மக்கள் நன்னீரை பெற்று வருகிறார்கள் என்பது காரைநகர் மக்கள் அனைவரும் அறிந்த உண்மையாகும்.







