காரைநகர் யாழ்ப்பாணம் பேரூந்து தடங்களான 782 மானிப்பாய் ஊடான தடம், 784 கல்லுண்டாய் தடம், 786 வட்டுக்கோட்டை ஊடான தடம் என்பன கார்ப்பெற் வீதியாக செப்பனிடும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும் அனைத்து தடங்களும் இடைநடுவே விடப்பட்டுள்ளதுடன் மேற்கொண்டு எந்த வகையான விபரங்களும் பொதுமக்களிற்கு வழங்கப்படவில்லை.









இந்த நிலையில் அரசியல்வாதிகளின் தலையீடு கட்டாயம் எனவும் காரைநகர் மக்கள் இது தொடர்பாக விழிப்புணர்வு பெறவேண்டும் எனவும் தொடர்ச்சியாக ‘எனது ஊர் காரைநகர்’ தெரிவித்து வருவதும் யாவரும் அறிந்ததே. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவும் தற்போதும் காரைநகரில் நடைபெற்றுவரும் பொதுப்பணிகள் தொடர்பான போட்டிகளில் ஊர் மக்களிற்கான தேவைகளை கண்டறிந்து செயற்படவும் சேவைகளை வழங்கவும் ஆக்கபூர்வமான போட்டிகளில் அரசியல் பிரமுகர்கள் களம் இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களின் சார்பாகவும், காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியேற்றுக்கொண்ட திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் சார்பாகவும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தனா அவர்களிற்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
10.09.2022 அன்று திகதியிடப்பட்ட மேற்படி மூன்று வழித்தடங்கல் புனரமைப்பு தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி யாழ் மாவட்ட உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அலுவலகத்தில் இருந்து வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், 07.10.2022 அன்று காரைநகர் பிரதேச சபை தவிசாளர் நேரடியாக அமைச்சரை சந்தித்து மேற்படி வீதிகளின் புனரமைப்பின் அத்தியாவசியம் தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வீதியானது நாவாந்துறையில் இருந்து வட்டுக்கோட்டை வரையான பகுதி கடந்த வருடமே செப்பனிடப்பட்டிருந்தாலும் வட்டுக்கோட்டையில் இருந்து பொன்னாலை வரையான பகுதி மிகவும் மோசமான நிலையில் இருந்தும் கண்டுகொள்ளாத நிலையில் இருந்து வந்துள்ளது. இந்த பகுதியானது முற்றிலும் கூடியளவில் காரைநகர் மக்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் பகுதியாகும். இதனை அரசியல்வாதிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல ‘எனது ஊர் காரைநகர்” பல வழிகளிலும் முயற்சி செய்து வந்துள்ளது.
இந்த நிலையில் காரைநகரில் ஏற்பட்டுள்ள சேவையாளர்களிற்கு இடையே ஏற்பட்டுள்ள தற்போதைய ஆக்கபூர்வமான போட்டியில் காரை மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயற்படும் எந்த அணியானாலும், எந்த தனிப்பட்ட நபர்களானாலும் காரைநகர் மக்களால் அடையாளம் காணப்படுவார்கள் எனவும் தன்னலமற்ற வகையில் பொதுப்பணியாற்றிவரும் சேவையாளர்களையே காரைநகர் மக்கள் இனம் கண்டு ஆதரவு வழங்குவார்கள் என்பதும் அண்மைக்காலமாக காரைநகர் மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள் என்பதும் அனைவரும் கவனிக்கத்தக்கது.



