கலாநிதி கென்னடி விஜயரத்தினம் பிறந்தநாள் இன்று 16.12.2024

16.12.1967 – 10.01.2018
(கென்னடி இறப்பிற்கு சில மாதங்கள் முன்னர் தனது தாயாரின் நினைவையொட்டி அவரால் எழுதப்பட்டது, இத்தனை அவசரமாய் ஏன் சென்றான் என்பதனை இந்த வரிகள் முடிவில் அவனே எழுதிச் சென்றான்)
அம்மா..!
அன்பில் திளைத்து அதன் அடையாளமாய்
படைப்பின் வலிமையாய்
வயிற்றில் உயிர் துளிர்க்கப்
பெருமையுற்றாய்!
கணங்கணமாய் உடலுள்
ஓருடலின் துடிப்புணர்ந்து
போசித்துக் காலமும் அண்டமும்
கடந்த கடவுளாய் அதீதியாயனாய்!
அக்கணத்திலிருந்தே
உன்னலம், உன்னுடல் மறந்து
என்னை நினைத்தே அல்லும் பகலும்
மூச்சிலும் பேச்சிலும் நடையிலும்
நித்திரையிலும் ஏன் கனவிலேம் தானே!
உயிர் வளர்த்த தாயே!
பிரபஞ்ச உயிர்ப்பின் உருவே!
பூவாய், பிஞ்சாய்
உன் உதிரக்கொடி பற்றியாடி
அமுதக் கடலில் உறங்கி
மிதந்த இம்மண் உருவை
உயிராய் உடலாய் உயர்ந்தவனாய்
உள்ளி நிதம் கண் விழித்து
காலம் பாராது கனவு கண்டாய்!
உனக்குள் இருந்தே
உருத்தெரியா என் கால்கள் உதைக்க
உதரம் தடவி பூரித்து
உள்ளமெலாம் உவகை கொண்டாய்!
உனக்குள் மிதந்த
என் கண்கள் மூடிய முகம் நினைத்து
உயிரே பிரியும் பெருவலிதான்
பொறுத்தாண்டாய்!
விண்ணும் மண்ணும் அதிர
ஓவென்று அலறி
உயிர் துடித்துச்
சாவின் விளிம்பைத் தரிசித்து
மயங்கி நினைவிழந்து
அழவும் தென்பின்றி
அனுங்கி முனகி
நோ ஆற்றாது அரற்றினாய்!
உடல் ரணமாகி உதிரக் காடாக
உணர்விழந்தாய்!
நாதியற்ற என் அழுகையில்
உருகி உவகை கொண்டு
அத்தனை வலியும் மறந்து
என் குருத்துடல் பற்றி
உன்னையும் மறந்து
பரவசமாய் உச்சி முகர்ந்தாய்!
கண்கள் திறவாத
மண்ணுடல் அருகில் வைத்து
புண்ணான உடல் வருத்தம் மறந்து
பகலிரவாய் விழித்திருந்தும்
பரிந்தும் பரிதவித்தும் பாதியுறக்கத்திலும்
பாலூட்டி உறங்க வைத்து
உறங்காமல் ரசித்தாய்!
பாலுண்ட கிறக்கத்தின் கனவுகளில்
மீண்டும் கருவறையின்
மொழியற்ற ஆதிப்பாடல் தாலாட்ட
கண்மூடி வாய் சுழித்து
மலர்ந்த என் முதற் புன்னகையை
கவனமாய்க் கண்களால்
ஏந்திக் கொண்டாய்!
என் தளிர்க் கரங்கள்
பற்றி ஆடிக் கண்கள் சிமிட்டி
களிப்பூட்டி, பாட்டிசைத்து,
பார்வையால் வளர்த்தாய்!
படைமுகாம் போல்
ஏழு பிள்ளைகள் நிறைந்த வீட்டில்
அம்மாவாய் 50 வருடங்கள்
உழைத்து உயிர்த்திருந்தாய்!
இன்னமுத வாழை ஈன்று பின்
உயிர் ஈந்து மாய்தல் போல்
காலக் கணியன்
கணக்கெழுதி வைத்தாற் போல்!
அன்றுமுதல் ஏதிலியான
நான் மூட்டிய தீயிலும், காற்றிலும்
விண்ணிலும், மண்ணிலும்,
கடலலையிலும் காத்திரு!
அம்மா..!
மீண்டும் வருவேன்
ஒரு பூவாயேனும்
அதே மழலைப் புன்னகையேந்தி !

  • சிவயோகச்செல்வன்-
    (கென்னடி விஜயரத்தினம்)

More From Author

திருமதி கேதீஸ்வரதாசன் அபிராமிப்பிள்ளை : ‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் கண்ணீர் அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும். மறைவு: 16.12.2024

கனடிய டொலரின் இலங்கை பெறுமதி இரண்டு வருடங்களின் பின்னர் 200 ரூபாய்கும் குறைவாக (வங்கி) இறங்கியுள்ளது.

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.