காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய வம்சாவழி ஆதீனகர்த்தாக்களில் ஒருவரும் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் மருதடியை வசிப்பிடமாகவும் கொண்ட விதானை அருளையா அவர்களின் சிரேஷ்ட புத்திரனுமாகிய திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி அவர்கள் 02.07.2025 ஆனி உத்தர நன்னாளில் இறைவன் அடியை சேர்ந்து கொண்டார்.



இரண்டாயிரமாம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் தனது ஓய்வு காலத்தின் பின்னர் ஊர் திரும்பிய திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி அவர்கள் தனது தந்தையார் வழி வந்த நீலிப்பந்தனை அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளதும், ஈழத்து சிதம்பரத்திற்கு சென்று தினமும் வழிபடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
கடந்த ஆறு மாதங்களிற்கு முன்னதாக தனது ஆருயிர் மனைவியை இழந்த நிலையில் 03.07.2025 தனது மனைவியின் 6ம் மாத திதியினை முன்னிட்டு நடைபெறவுள்ள கிரியைகளிற்காக காரைநகர் BOC வங்கிற்கு தனது துவிச்சக்கர வண்டியில் பணம் எடுப்பதற்காக சென்றபோது வங்கியின் முகவாயிலில் மயக்கமடைந்து விழுந்த நிலையில் இறைவனடியை சென்றடைந்துள்ளார்.
தனது 80வது வயதுகளை அண்மித்த திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி அவர்கள் தனது மனைவியின் திடீர் இழப்பிற்கு பின்னர் 31ம் நாள் காரியங்கள் நிறைவுறுவதற்கு முன்னர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நிர்வாக பொறுப்புக்களை மற்றுமொரு வம்சாவழி வந்த ஆதீனகர்த்தாக்களில் ஒருவரான திருமதி சோமசேகரம்பிள்ளை செல்வராணி அவர்களையும் மற்றும் திரு.சோமசேகரம்பிள்ளை குமரன் மற்றும் சில அடியவர்களை தனது இல்லத்திற்கு அழைத்து அம்பாள் ஆலய நிலப்பத்திரங்கள் மற்றும் அம்பாளின நகை மற்றும் வங்கிக்கணக்கு விபரங்களை கையளித்ததுடன் தனக்கு பின்னர் தனது சகோதரர்கள் அல்லது அவர்கள் வழி வந்தவர்கள் நிர்வாக பொறுப்பினை ஏற்கும் வரையில் செயற்படுவதற்கான ஒரு நிர்வாகத்தினை நடைமுறைப்படுத்தவும் அதற்காக அதுவரை மற்றுமோர் ஆதீனகர்த்தாவாகிய திருமதி சோமசேகரம்பிள்ளை செல்வராணி அவர்களுடன் இணைந்து செயற்படும் வகையில் ஒரு நிர்வாகத்தினை ஏற்படுத்தியும் உள்ளார்.
தனது மனைவியின் இழப்பிற்கு பின்னர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய ஆதீனகர்த்தாவிற்குரிய அனைத்து பொறுப்புக்களையும் உரிய முறையில் கையளித்ததுடன், தனது வயது மூப்பினை தெளிவற புரிந்து கொண்ட நிலையில் மற்றுமொரு வம்சாவழி ஆதீனகர்த்தாவாகிய திருமதி சோமசேகரம்பிள்ளை செல்வராணி, மற்றும் திரு. சோமசேகரம்பிள்ளை குமரன் ஆகியோர் முன்னிலையில் தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் ஒப்படைத்துச்சென்றுள்ளார்.
திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி அவர்கள் 02.07.2025 ஆனி உத்தர நன்னாளில் சிவபதம் அடைந்த நிலையில் காரைநகர் நடுத்தெருவை சேர்ந்த விதானை அருளையா அவர்களின் மற்றைய புத்திரர்கள் மற்றும் அவர்கள் வழி வந்தவர்கள் மேற்கொண்டு நீலிப்பந்தனை ஶ்ரீதுர்க்கா தேவி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தாக்கள் பொறுப்பினை திருமதி. சோமசேகரம்பிள்ளை செல்வராணி மற்றும் திரு. சோமசேகரம்பிள்ளை குமரன் அவர்களுடன் இணைந்து வம்சாவழியாக நிர்வகிப்பார்கள்.
திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி அவர்களுடன் கடந்த 15 ஆண்டுகளாக நீலிப்பந்தனை அம்பாள் ஆலய செயற்பாடுகளில் இணைந்து பயணித்திருக்கிறேன். நித்திய பூசைகளை கிரமமாக்க நித்திய பூசை நிதியம் 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 12 இலட்சம் ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டது. அதன் பின்னர் அந்த நித்திய பூசை நிதியத்தினை மேலும் வலுவூட்ட அதன் விபரங்களை தொடர்ந்து வெளியிடவும் மேலும் ஆதரவினை பெற்றுக்கொள்ளவும் வருடந்தோறும் முயற்சிகளை எடுத்த போதிலும்… திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி அவர்கள் என்னிடம் தெரிவித்த விடயம் யாதெனில்… ” தம்பி.. நான் கேட்டா நீர் இதனை செய்தீர்..? அம்பாள் உம்மை எப்படி இதனை செய்ய வைத்தாவோ அதே போல் தனது அடியவர்களையும் தானே சென்று உணரவைத்து, தனக்கு வேண்டியதை பெற்றுக்கொள்வார்..”
2011ம் ஆண்டு 12 இலட்சம் ரூபாய்களைடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட நித்திய பூசை நிதியம் 30 இலட்சம் ரூபாய்களை நிரந்தர வைப்பாக கொண்டுள்ளது.
(2008ம் ஆண்டு நீலிப்பந்தனை அம்பாள் ஆலயத்திற்கான நித்திய பூசை நிதியத்திற்கான வேண்டுகோள் “எனது ஊர் காரைநகர்” இணையத்தளம் ஊடாக வெளியிடப்பட்டு கனடாவிலும் மற்றும் சில வெளிநாடுகளில் வதியும் 20க்கும் உட்பட்ட அம்பாள் அடியவர்கள் வருடந்தோறும் தமது நேர்த்தியாக வளங்கிய சிறுதொகையை சேர்த்தே 2011ம் ஆண்டு வைப்பில் இடப்பட்டது).
திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி அவர்கள் கடந்த 15 ஆண்டுகளில் தனது சரீர உதவிகளுடன் நிர்வாக செயற்பாடுகளையும் நீலிப்பந்தனை அம்பாளின் துணையோடு மிகவும் சிறப்பாகவும், தெளிவான சிந்தனைகளுடனும் வெளிப்படையாகவும் ஆற்றியுள்ளார். உண்டியலில் சேர்ந்த பக்தர்களின் காணிக்கை, திருவிழா உபயகாரர்கள் திருவிழாக்களிற்கு வளங்கிய நிதியின் எஞ்சிய நிதி என்பவற்றைய்யும் நிரந்தர வைப்பு நிதியத்தில் சேர்த்து 30 இலட்சம் ரூபாய்களிற்கு மேற்பட்டளவில் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நித்திய பூசை நிரந்தர வைப்பு விளங்கி வருகிறது.
திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி அவர்கள் தனது ஓய்வு காலத்தில் தனது ஊரிற்கும், தனது வம்சாவழி வந்த நீலிப்பந்தனை அம்பாள் கோயில் நிர்வாகத்தினை பொறுப்பேற்றும், ஈழத்து சிதம்பரம், மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வழிபாடுகள் மற்றும் ஆன்மீக வழிகளில் செற்பட்டு காரை மக்களின் நன்மதிப்பினைப்பெற்று இவ்வுலக வாழ்வை நீத்து இறைவனடிக்கு மிகச்சிறந்த நன்னாளிலே சென்றுள்ளார். அன்னாரின் ஆத்மா ஆனந்த நடராஜப்பெருமான் திருவடிகளில் நிரந்தர நிம்மதிப்பெருவாழ்வு பெற இறைஞ்சுவோமாக.



