காரைநகர் அபிவிருத்தி சபையை உரசிப்பார்க்கும் தெரு நாய்கள்..!
காரைநகர் அபிவிருத்தி சபையை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இலங்கை பயங்கரவாத புலனாய்வு துறையினரால் கடந்த சில வாரங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
கடந்த வாரம் செயலாளர் செந்தூரன் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதுடன், இன்று 30.05.2023 செவ்வாய்கிழமை தலைவர் மற்றும் பொருளாளர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவில் இருந்து 2015ம் ஆண்டு காரைநகர் பாடசாலைகளிற்காக காரைநகர் அபிவிருத்தி சபையின் பெயரில் நிரந்தர வைப்பு செய்யப்பட்ட ஒரு கோடி இருபது இலட்சம் தொடர்பில் கனடாவில் இருந்து மேற்கொள்ளப்படும் பின்னணிகள் தொடர்பாகவே விசாரணைகள் இடம்பெறுவதாகவும், தொடர்ந்து காரைநகர் பாடசாலை அதிபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் எனவும் அறியப்படுகிறது.
கனடா காரை கலாசார மன்றத்தினால் 2015ம் ஆண்டு காரைநகர் பாடசாலைகளிற்காக நிரந்தர வைப்பில் இடப்பட்ட ஒருகோடி இருபது இலட்சம் ரூபாய்கள் கடந்த 8 ஆண்டுகளில் ஒருகோடிக்கு மேற்பட்டளவில் வட்டியாக காரைநகர் பாடசாலைகளிற்கு வழங்கியுள்ள நிலையில் 2015ம் ஆண்டு முதல் கனடா காரை கலாசார மன்றத்தினால் வழங்கப்பட்ட மேற்படி நிதியானது பயங்கரவாத செயற்பாடுகளிற்கு வழங்கப்பட்டதாகவும் அதனை கனடா காரை கலாசார மன்றத்தின் முன்னாள் பதில் செயலாளர் காரைநகர் அபிவிருத்தி சபை முன்னாள் பொருளாளரிற்கு அனுப்பியதாகவும் கனடாவில் ஒன்ராரியோ பொதுப்பணிகள் அமைச்சு செயலகத்தில் ஒருசிலரால் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் தனியொருவரினால் காரைநகர்ப்பொது அமைப்புக்களில் நிர்வாக பதவி வகித்தவர்கள் மற்றும் நிதியுதவி வழங்கியவர்கள் மேல் கடந்த காலங்களில் தொடர்ந்த வழக்குகளின் பிரகாரமே இந்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நம்பப்படுகிறது.
2015 இல் கனடாவில் இருந்து பாடசாலைகளிற்காக அனுப்பப்பட்ட நிதியினை இன்றுவரை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சிலரின் பின்னணியில் சம்பந்தமே இல்லாத ஒருவரின் வேலை மினக்கெட்ட செயற்பாட்டினால் தான் இந்த தேவையற்ற விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
காரைநகர் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் உறவுகள் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் முட்டை போட்ட கோழிகளை விட பக்கத்து வீட்டு பூனைக்கு ஏற்படும் வலிக்கு எவராலும் எதுவும் செய்ய முடியாது.
காரைநகர் அபிவிருத்தி சபை கடந்த கால நிர்வாகங்கள் தெளிவான வரவு செலவு விபரங்களையும் விபரமான செயற்பாட்டு அறிக்கைகளையும் பட்டய கணக்காளர்களின் உத்தியோக பூர்வ ஏற்றுக்கொள்ளலுடன் உள்ளது என்பதும், சட்ட விரோத அல்லது சட்டத்துக்கு முரணான வகையில் நிதிகளை கையாளவில்லை என்பதையும் இந்த விசாரணைகளின் மூலம் அறிந்து கொண்டு கனடாவைப்போன்று இலங்கையிலும் பாடசாலைகளிற்கு வழங்கப்பட்ட நிதி அதன் பணியை செவ்வனே செய்கின்றது என்பதனை பயங்கரவாத புலனாய்வுப்பிரிவும் உறுதிப்படுத்திக்கொள்ளும்.



