காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் தொடர்பாக அறிந்து கொள்ளப்படவேண்டியது..! 22.08.2025

காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் தொடர்பாக அறிந்து கொள்ளப்படவேண்டியது..! 22.08.2025

(மண்ணையும் மக்களையும் நேசிப்பவர்கள் முழுமையாக வாசிப்பார்கள்..)

காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்காலிக நிர்வாக சபையானது 2023.07.08(இரண்டு வருடங்களிற்கு முன்னர்) திரு.வி.ஹம்சன் தலைவராகவும், திரு.பொ.பரந்தாமன் செயலாளராகவும், திரு.மு.பரம்தில்லைராசா பொருளாளராகவும் கொண்டு காரைநகர் பிரதேச செயலகத்தின் தலையீட்டுடன் தெரிவு செய்யப்பட்டது.

### (கேள்வி பதில் மூலம் விளக்கமாக அறிந்து கொள்வோம்)

1). ஏன் எதற்காக தற்காலிக நிர்வாக சபையாக தெரிவு செய்யப்பட்டது..?

2023 இல் நிர்வாக சபை தெரிவிற்காக இரண்டு பொதுக்கூட்டங்கள் கூட்டப்பட்டன, ஆனால் இரண்டிலும் அங்கத்தவர்களின் கோரம் கிடைக்கப்பெறவில்லை. தொடர்ந்து மூன்றாவது நிர்வாக சபை தெரிவிற்கான பொதுக்கூட்டமும் 2023.07.08 அன்று கூட்டப்பட்டது. அப்போதும் போதியளவு கோரம் கிடைக்கப்பெறவில்லை. அதன் காரணமாக தற்காலிக நிர்வாக சபையானது ஆறு மாதங்களை மட்டும் ஆயுட்காலமாக கொண்டு தெரிவு செய்யப்படுவதாக காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தரின் அறிவுறுத்தலின் பெயரில் நிபந்தனைகளுடன் தெரிவு செய்யப்பட்டது.

2). ஏன் கோரம் கிடைக்கப்பெறவில்லை..?

காரைநகர் அபிவிருத்தி சபையின் அங்கத்தவர்கள் பலர் வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் வதிபவர்கள் அதனால் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்பது முக்கியமான காரணமாக இருந்தாலும் உள்ளூரில் வசிக்கும் பலரும் “don’t care” என்னும் attitude இல் வசிப்பவர்கள்.

3). தற்காலிக நிர்வாக சபைக்கான நிபந்தனைகள் என்ன..?

தற்காலிக நிர்வாக சபையானது ஆறு மாத காலங்களினுள் பொதுக்கூட்டங்களில் கோரம் கிடைக்கக்கூடிய வகையிலும், வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் வதியும் அங்கத்தவர்களை அடிப்படை அங்கத்தவர் அல்லாது சிறப்பு அங்கத்தவராக அல்லது கெளரவ அங்கத்தவர்களாக மட்டும் இணைத்துக்கொண்டு, அல்லது மூன்று பொதுக்கூட்டங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பொதுக்கூட்டங்களிற்கு சமூகமளிக்காத அங்கத்தவர்களை அங்கத்தவர் தகுதியில் இருந்து நீக்கி, அல்லது பொதுக்கூட்டங்களிற்கு சமூகமளிக்க தவறும் அங்கத்தவர்கள் தமது சார்பாக இன்னொருவரை நியமிக்கும் வகையில்(Proxy) புதிய யாப்பினை தயார்படுத்தி அதனை காரைநகர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்த பின்னர் புதிய நிர்வாக சபை தெரிவிற்கான கூட்டத்தினை கூட்டவும், அதுவரை காரைநகர் அபிவிருத்தி சபையின் அத்தியாவசிய அவசியமான செயற்பாடுகளை மட்டும் முன்னெடுக்கவும், புதிய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவும், மட்டுப்படுத்தப்பட்டளவில் நிதி செயற்பாடுகளை முன்னெடுக்கவும் தற்காலிக நிர்வாக சபையானது திரு.வி.ஹம்சன் தலைமையில் தெரிவு செய்யப்பட்டது.

4). அந்த ஆறு மாத காலத்தினுள் நடந்தது என்ன..?

திரு.வி.ஹம்சன் தலைமையிலான தற்காலிக நிர்வாக சபையானது புதிய திருத்திய யாப்பினை பிரதேச செயலகத்திற்கு கையளித்திருந்தது. புதிய திருத்திய யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டதுடன் அங்கத்தவர்களின் அங்கீகாரத்துடன் அதனை பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் 2025.03.10 வரை திரு.வி.ஹம்சன் தலைமையிலான தற்காலிக நிர்வாக சபையானது, காரைநகர் பிரதேச சபையுடன் தொடர்புகளை மேற்கொள்ளவில்லை.

சொல்லப்படும் காரணம் யாதெனில்…. அவர்கள் தொடர்பு கொள்வார்கள் என இவர்களும், இவர்கள் தொடர்பு கொள்வார்கள் என அவர்களும் காத்திருந்து இரண்டு வருடங்கள் கடந்து போய்விட்டன. ஆனாலும் ‘மருந்துக்கு வலியா புண்ணுக்கு வலியா’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

5). அடுத்து என்ன… இப்ப என்ன…?

‘மருந்துக்கு வலியா… புண்ணுக்கு வலியா… என்று பார்த்தால்… இப்பெல்லாம் மருந்துக்கு தான் வலி… காரணம் தகுந்த நேரத்தில் தகந்த மருந்து கொடுத்திருந்தால் புரையோடிப்போய் புற்றுநோயாக மாறுகின்ற அவலம் ஏற்படாது என்பதால் கோர்ட், கேசு என்று போய் கடைசியாக கோயிலும் இல்லை சாமியும் இல்லை, சோறு கொடுப்பதும், சோத்துக்காக விளம்பரம் செய்வதும் தான் சிவப்பணியாகியது போல்…

1980களில் இருந்து இன்று 2025 வரை ஊரை விட்டு இடம் பெயர்ந்த ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட முன்னாள் காரைநகர் மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் கடந்த 45 ஆண்டுகளில் இயற்கை எய்திவிட்டார்கள், மீதம் இருப்பவர்களில் 20 வயதில் இடம்பெயர்ந்தவர்களிற்கு இன்று 65 வயது… இடம் பெயர்ந்த நாட்டில், இடம்பெயர்ந்த இடத்தில் வாழப்பழகிக்கொண்டாலும் ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவானில் நனிசிறந்ததுவே’ என்பதற்கு இணங்கவும் மனச்சாட்சி, மனிதாபிமானம் என்பவற்றை கருத்தில் கொண்டேனும் தான் பிறந்த ஊரிற்கும், தனக்கு கல்வி கற்பித்த குருவிற்கும், தனது குலதெய்வத்திற்கும், தன்னை நல்வழிப்படுத்திய தனது சமூகத்திற்கும் சாவுக்கு முதல் ஏதாவது நல்லது செய்ய முடியுமா என ஏங்கும் நல்லுள்ளங்களிற்கு நம்பிக்கை ஒளி வழங்க “காரைநகர் அபிவிருத்தி சபை” யை விட்டால் யாரிடம்.. அல்லது யார் மூலம்… நம்பிக்கையுடன் எனது ஊரிற்கான உதவியை வழங்குவேன்…?

காரைநகர் அபிவிருத்தி சபை உங்களுடையது, உங்களிற்கானது, உங்களிற்காகவே ஆரம்பிக்கப்பட்டது….வெளிநாடுகள் வாழ் காரைநகர் மக்களால் உங்களிற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.

1996ம் ஆண்டு காரைநகரிற்கு குடி தண்ணீர் வெளியே இருந்து கொண்டுவந்து விநியோகிக்க முடியும் என நிரூபித்துக்காட்டியது. இன்று அதனையே முற்று முழுதாக நம்பி காரைநகரின் குடிநீர் பிரச்சனை தங்கியுள்ளது.

முன்பள்ளிகள் இல்லாத காலமாகிய 2005 இல் இருந்து 2011 வரை ஆறு ஆண்டுகளில் 10 முன்பள்ளிகள்… குறைந்த காலத்தில் முன்பள்ளிகள் அதீத வளர்ச்சி காண காரைநகர் அபிவிருத்தி சபை ஆற்றிய பங்கு அளப்பரியது. 2009க்கு பின்னர் கல்வியில் வருடத்திற்கு நூறு மாணவர்கள், வருடத்திற்கு நூறு குடும்பங்கள் குறைந்த பட்சம் முன்னேற அல்லது முழுமையாக முன்னேற “காரைநகர் அபிவிருத்தி சபை” ஊடாக மட்டுமே கனடா, இலண்டன், சுவிஸ், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜேர்மனி போன்ற நாடுகளில் உள்ள முன்னாள் காரைவாசிகள் யார் மூலமாக கோடி கோடியாக அனுப்பினார்கள் என்று கொஞ்சமாவது சிந்தித்தீர்களா…!

கடந்த 15 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இயங்கும் காரை மன்றங்கள் அல்லது தனிப்பட்ட நபர்கள் ஊடாக காரைநகரில் வசதி குறைந்த குடும்பங்களை சேர்ந்த எத்தனை மாணவர்கள் “காரைநகர் அபிவிருத்தி சபை” யை நம்பி பணம் அனுப்பி, படிக்க வைத்து, பட்டப்படிப்பை முடித்துக்கொண்டுள்ளதுடன், அவர்கள் பெற்ற உதவிக்காக தனிப்பட்ட எத்தனை மாணவ மாணவிகள் தமது நன்றி அறிதல் கடிதங்களை ஊர் மன்றங்களிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள் என்பதும், அந்த உதவிகளை பெற்று இன்று பட்டதாரி மாணவர்களாக மிளிரும் தனிப்பட்டவர்களின் சுயமரியாதை கருதி அவற்றையெல்லாம் விளம்பரத்திற்காக வெளிக்கொணர முடியாமல் எத்தனை ஊரவர்கள் உள்ளார்கள் என்பதும், இன்றும் எத்தனை மாணவ மாணவிகளின் கல்விக்கான உதவிகளை காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக பெற்று வருகிறார்கள் என்பதும் உங்களில் பலருக்கும் தெரிய வாய்ப்புகள் இல்லை. ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ மட்டுமே இன்னும் மிச்சமுள்ள இருபதோ முப்பதோ வருடம் இடம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் முன்னாள் காரைவாசிகளிடம் இருந்து அவர்களின் மனச்சாட்சிக்கு பதில் வழங்கும் முகமாக உதவிகளை வழங்க முடியும்.

1980களில் கல்வி பயின்ற தீசன் திரவியநாதன் போன்ற என்போன்று இலவசமாக கல்வி பயிலவும் 1988 இல் O/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற வெளிநாடுகளில் இருந்து எவரும் உதவியதில்லை, உள்ளூரில் ‘பிருந்தா கல்வி நிலையம்’ பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, கணிதத்திற்கு வே. முருகமூர்த்தி, விஞ்ஞானத்திற்கு இ. திருப்புகழூர்சிங்கம், ஆங்கிலத்திற்கு நீலிப்பந்தனை நல்லதம்பி விஜயரத்தினம் இவர்கள் போன்றோர் அன்று வசதி குறைந்த குடும்பத்தை சேர்ந்த குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளை வீடு தேடி சென்று அழைத்து வந்து படிப்பித்தார்கள்.

தெருவிலோ சந்தியிலோ கண்டால் கண்ட இடத்திலேயே கன்னத்தை பொத்தி அறைந்தார்கள், றோட்டில உனக்கு என்ன வேலை என்று கேட்டார்கள். இன்று அதை செய்யவும் ஆள் இல்லை, செய்யவும் முடியாது. ஆனால் எங்களால் தான் முடியும். குறைந்த பட்சம் நன்றாக கல்வி கற்ககூடிய மாணவர்களை கண்டறிந்து அவர்களிற்கான உதவியை நாம் தான் தேடிச்சென்று உதவ வேண்டிய நிலைக்கு ‘ மருந்துக்கு தான் வலி’ என்கிற நிலமைக்கு காலம் எங்களை கூட்டிச்சென்றுள்ளது. அல்லது இன்று உங்களால் கல்வி மறுக்கப்பட்டவர்கள் நாளை உங்கள் ஊரில் களவானிகளாக, கஞ்சா விற்பனையாளராக, கள்ள மாடு பிடித்து இறைச்சிக்கு விற்பவர்களாக கண்டு கொண்டுள்ளோம். கடந்த 15 ஆண்டுகளாக எனது கண்ணால் நான் கண்ட உண்மைகள் இவை.

‘யாரொடு நோவோம் யார்க்கொடுத்துரைப்போம்’ என்றும் ஊர் மானம் போகிறது, காரைநகரில் ‘கஞ்சாவா..!’ காரைநகரில் மாட்டை வெட்டி தலையை போட்டு விட்டு மாட்டை இறைச்சிக்காக கடத்தி கொண்டு போகிறார்களா..’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் தேவை ‘ காரைநகர் அபிவிருத்தி சபை’ இன்னும் பத்தோ இருபதோ வருடம் தான் இடம்பெயர்ந்த காரை மக்களின் அன்பும் ஆதரவும் கருணையும் காருண்யமும்… அதற்கு பிறகு… மீண்டும் ஒரு நல்ல சமுதாயம் உருவாக வேண்டுமானால் இப்போதைக்கு மருந்துக்கு தான் வலிக்க வேண்டும். அல்லது புற்று நோயாக புரையோட விட்டால் காரைநகர் கலாசாரம் முற்றாக மாறிவிடலாம் அப்போதும் நாம் அடுத்தவர்களை நோக்கியே கை காட்டிவிட்டு இடம்பெயர்ந்த நாட்டில் அட்றஸ்சே இல்லாமல், செத்து சுண்ணாம்பாக போய்விடுவோம்.

வாழ்வதிலும் அர்த்தம் வேண்டும், வாழ்ந்தததிற்கான அர்த்தமும் வேண்டும்.

பசித்தால் தின்று, களைத்தால் தூங்கி, இடையில் இச்சைகளை தீர்த்து வாழ்வதற்கு நாம் ஒன்றும் மிருக வாழ்க்கை வாழவில்லை என்பதை இடம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் புரிந்து கொண்டால் நல்லது.

முடியாதது என்று எதுவும் இல்லை முயற்சிசெய்யும் வரை.

More From Author

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான விளக்கமும் கலந்துரையாடலும் 24.08.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7.00 மணிக்கு சமூகவலைத்தளம் ஊடாக நடைபெறும். (கனடா நேரம் ஞாயிறு காலை 9.30 am).

வெள்ளிக்கிழமை கைது…! சனி, ஞாயிறு இரண்டு நாளாவது உள்ள வைச்சிட வேண்டும் என்கிற ஆசையா… இவ்வளவு காலமும் பொறுத்தவர்கள் சட்டத்தை நம்பியிருந்தால் திங்கள்கிழமை கைது செய்திருப்பார்கள்.

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.