நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை..!
காரைநகர் பிரதேச செயலர்(DS) செல்வி. ந. ரஞ்சனா அவர்களிற்கும் காரைநகர் மக்களின் இடர்கால நியாயமான பரிகாரங்களிற்காக மேன்மை தங்கிய ஜனாதிபதி அநுர குமார தியநாயக்கா 5 கோடி ரூபாய்களை வழங்க விசேட பிறப்பானை வழங்கியுள்ளார்.
மேற்படி செய்தி வதந்தி அல்ல, பகிடியும் அல்ல. விசேடமாக ஜனாதிபதி அவர்களால் கசட் மூலம் அறியப்படுத்தியுள்ளார். இலங்கையின் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிற்கும் தலா ஐந்து கோடி இடர்கால உடனடி உதவியாக வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால்…. காரைநகர் பிரதேச செயலர் காரைநகர் மக்களிற்கு அந்த அரசின் உதவியை(5 கோடி ரூபாய்களை) பெற்றுக்கொடுக்க ஆவண செய்வாரா என்பதையும், பாதிக்கப்பட்ட மக்கள், வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிப்படைந்த மக்கள், கடந்த மூன்று நான்கு நாட்களாக தினக்கூலிகளாக வேலை செய்யும் நாளாந்த வருமானம் இழந்துள்ள தொழிலாளர்கள் போன்றோரிற்கும் இடர்கால கொடுப்பனவுகளிற்குட்பட்ட வகையில் சட்டதிட்டங்களிற்கு உட்பட்டளவில் பிரதேச சபையின் செயற்பாடுகள் மற்றும் இடர்கால பணியில் ஈடுபடும் பொது அமைப்புக்கள் என்பவற்றின் செயற்பாடுகளை கண்டறிந்து காரைநகர் பிரதேசத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து கோடி ரூபாய்களை உரியவர்களிற்கு பெற்றுக்கொடுப்பாரா என்பதையும் தற்போதைய பிரதேச செயலர் செல்வி ந.ரஞ்சனா அவர்களின் மக்களிற்கான சேவையினையும் திறமையினையும் காரைநகர் மக்கள் இனிமேல் தான் கண்டு கொள்வார்கள்.
காரைநகர் சிவபூமி. காரைநகரிற்கு அரச பணிகளிற்காக எவர் வந்தாலும், எந்த எண்ணத்தில் வந்திருந்தாலும் அவர்களை புடம் போட்டு மக்களிற்காக மேன்மை தங்கிய பணிகளை செயற்படுத்தி மகோன்னத மனிதர்களாக, சேவையாளர்களாக, புண்ணியம் செய்த புனிதர்களாகவே காரை மண் இதுவரை அனுப்பி வைத்துள்ளது. காரைநகரில் பணி செய்த அனைத்து பிரதேச செயலர்களும் பதவி உயர்வு பெற்று சிறந்த நற்பணியாளர்களாகவே விளங்கி வருகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் காரைநகர் மக்கள் அனைவரும் மீண்டும் மீண்டும் என்றும் எப்போதும் நன்றி மறவாது நினைவில் கொள்ள வேண்டியவர் எங்கள் மண்ணின் மைந்தன் அமரர் தியாகராசா மகேஸ்வரன் என்பதும் என்றும் எப்போதும் எவரும் மறைப்பதற்கோ அல்லது மறுப்பதற்கோ அல்ல என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும். தனது குறுகிய கால அரசியல் பயணத்தில் இலங்கை அரசியல் ஆட்சியில் தனியானதொரு ‘பிரதேசம்’ ஆக காரைநகரை பிரகடனப்படுத்தி தனியானதொரு நிர்வாக அலகாக கொண்டு வந்தவர். அல்லது இன்றும் காரைநகர் வட்டுக்கோட்டையுடனோ அல்லது தீவகம் அல்லது ஊர்காவற்றுறை நிர்வாகத்துடனோ தான் இருந்திருப்போம்.
அம்மா செயலர் அவர்களே காரைநகர் மக்களிற்கான பணியை மகேஸ்வரன் பணியாக எண்ணி இந்த இடர்கால இக்கட்டான சூழ்நிலையில் என்றும் இல்லாதது போன்று இந்த அரசின் ஜனாதிபதி அவர்கள் மனமுவந்து ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் வழங்க முன்வந்துள்ள ஐந்து கோடி ரூபாய்களை பெற்றுக்கொடுத்து சிறந்த பணியாற்றி காரைநகர் மக்களின் மனங்களில் நிறைந்து கொள்ள எதிர்பார்க்கிறோம்.



