இத்தாள் விளங்கிக்கொள்ளப்படவேண்டியது யாதெனில்…
(முழுவதும் வாசிக்கப்படவேண்டும்…)
ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயிலில் கடந்த பல தசாப்தங்களாக பரம்பரை ஆதீனகர்த்தாக்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த நிர்வாகம் மாற்றம் அடைந்துள்ளது அல்லது மாற்றப்பட்டுள்ளது.
நல்லூர் நிர்வாகத்தினை மாதிரியாக கொண்டு “எஜமானன்” வகையிலான நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தின் பிரகாரமோ அன்றி சிவனடியார்களின் வேண்டுகோளின்படியோ இல்லாது “எஜமானன்” மாதிரியிலான நிர்வாகம் தனியொருவர் அனைத்து அதிகாரங்களையும் கொண்டு விளங்கும் வகையில் நல்லூர் நிர்வாகத்தை ஒத்த வகையில் திணிக்கப்பட்டுள்ளது.
ஈழத்து சிதம்பரத்தில் 75 ஆண்டுகளிற்கு மேலாக சிவப்பணியாற்றிய மூதறிஞர் க. வைத்தீஸ்வரகுருக்கள் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட “மணிவாசகர் சபை” ஏற்கனவே கலைக்கப்பட்டுள்ளது. திருப்பணிகளை காலத்திற்கு காலம் முன்னெடுத்து வந்த ” திருப்பணி சபை”, ” அடியார் சபை” என்பனவும் கடந்த கும்பாபிஷேகத்தின் பின்னர் கலைந்துள்ள நிலையில் இனிவரும் காலங்களில் அவ்வாறானதொரு சபை அமைக்கப்பட போவதில்லை அத்துடன் அனைத்து கோயில் நிர்வாகம், திருப்பணிகள் மற்றும் கோயில் சுற்றுப்புறம் கோயிலை சூழவுள்ள அனைத்து செயற்பாடுகளும் ” எஜமானன்” அவர்களால் நிர்வகிக்கப்படும்.
நல்லூர் கோயில் மாதிரியான நிர்வாகம் ஏற்கனவே திணிக்கப்பட்டுள்ள நிலையில் “எஜமானன்” அவர்களால் எவருக்கும் எதற்கும் பதில் சொல்லப்படமாட்டாது. அடியவர்கள் நித்திய பூசை, திருவிழாக்கள், திருப்பணி, அன்னதானம் மற்றும் சமயப்பணிகள் எதுவானாலும் ” எஜமானன் ” ஊடாக மட்டுமே செய்து கொள்ள முடியும்.
திருப்பணி, அன்னதானம் மற்றும் சமய பணிகளிற்காக வளங்கப்படும் நிதி உதவிகளினை மற்றையவர்களிற்கு தெரியப்படுத்தவோ அன்றி கணக்கறிக்கை போன்ற எந்தவொரு ஆவணங்களும் வெளிப்படுத்த தேவையில்லை. நல்லூர் போன்று… விரும்பினால் பணத்தை கொடுக்கலாம் அல்லது உண்டியலில் உங்கள் காணிக்கைகளை செலுத்தலாம்.
இது இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்றோ அல்லது கருத்து தெரிவிக்கவோ, பாரம்பரியம், நடைமுறை என்று எந்த வகையிலும் “எஜமானன்” அவர்களுக்கு அட்வைஸ்பண்ண எவருக்கும் அதிகாரம் இல்லை. கோயிலுக்கு போனால் கும்பிடனும். அங்கு நடைபெறும் பூஜை திருவிழாக்களை பார்க்கணும். விரும்பினால் காணிக்கை செலுத்தலாம். நிர்வாகத்தில் தலையிடவோ அல்லது கேள்விகள் கேட்கவோ எவருக்கும் அனுமதி கிடையாது.
அந்த வகையில் ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயில் ஏற்கனவே இதன் அடிப்படையில் ” எஜமானன் ” வகையிலான நிர்வாகம் நடைமுறைக்கு வந்து ஏற்கவே மூன்றாண்டுகள் ஆகின்றன. இதனை வெளிப்படையாக அடியவர்களிற்கு தெரிவிக்க முடியாத நிலையில் ஈழத்து சிதம்பம் திண்ணபுரம் சிவன் அடியவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இந்த வகையிலான நிர்வாகத்தை கொண்டு வருவதற்காகவே கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற பல விடயங்களை ஆதாரமாக மீண்டும் அசைபோட்டு பார்க்கவும்.
பரம்பரை வழி வந்த அந்தணர்கள் காரணங்கள் பல சொல்லி வெளியேற்றப்பட்டனர். ஆதீனகர்த்தாக்கள் இருவர் என ஆண்டாண்டு காலமாக நிலவி வந்த நிலமையினை மாற்றி திரு.ஆண்டிஜயா அம்பலவிமுருகன் அவர்கள் விலத்தி வைக்கப்பட்டார். நன்றாக இயங்கி வந்த மணிவாசகர் மடாலயம் பூட்டி திறப்பு எடுக்கப்பட்டது.
மணிவாசகர் சபை நிர்வாகம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், கடைசியாக நிர்வாக தலைமை வகித்த திரு.வே.முருகமூர்த்தி ஆசிரியர் அவர்கள் அனைத்தையும் கையளிக்க பணிக்கப்பட்டார். கோயிலை சூழவுள்ள பகுதியில் அமைக்கப்பட்ட யோகர் வளாகம் பலவித காரணங்களை முன்வைத்து செயற்படுவது தடை செய்யப்பட்டது.
மணிவாசகர் மடாலயம் பூட்டி திறப்பு எடுக்கப்பட்ட போதிலும் சட்ட நடவடிக்கையினை நாடியதுடன் இன்னமும்
பலவித அசெளகரியங்களிற்கு மத்தியிலும் தாக்குப்பிடித்தும் வருகிறது.
2022ம் ஆண்டு மார்கழி திருவாதிரை உற்சவத்தினை இடைநிறுத்தி பாலஸ்தாபனம் செய்து கொள்ள முயற்சித்த போதிலும் காரை அடியவர்கள் மற்றும் சட்ட துணையுடன் அந்த ஆண்டிற்குரிய மார்கழி திருவாதிரை உற்சவம் நடைபெற்றதுடன் தொடர்ந்து 2023ம் ஆண்டு ஆரம்பத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு சுவாமிகள் அனைத்தும் தற்காலிக பாலாலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து பரம்பரை வழி வந்த ஆதீனகர்த்தாக்கள் முறையில் திரு. ஆண்டிஐயா அம்பலிமுருகன் அவர்களை விலத்தவும், மணிவாசகர் மடாலயத்தின் நிர்வாகத்தை கலைத்து அதனையும் ” எஜமானன்” நடைமுறைக்குள் கொண்டு வரவதற்கான சட்டப்படியான வழக்குகள் நடைபெற்று வருவதும், “ஆதீன கர்த்தாக்கள்” என்று பல தசாப்தங்கள் நிலவி வந்த நடைமுறை சொற்பிரயோகம் மாற்றப்பட்டு ” நம்பிக்கை பொறுப்பாளர் ” என்கிற சொற்பிரயோகம் நடைமுறைக்குள புகுத்தப்பட்டதும் பலரும் கண்டு கொள்ள தவறியிருக்கலாம்.
ஆகவே இத்தாள் யாவரும் அறியப்பட வேண்டியது யாதெனில்… எல்லாம் திட்டமிட்டபடி கச்சிதமாக நடைபெற்று வருகிறது. எதேட்சையாக நடைபெறுவன அல்ல. இன்னமும் ” எப்போது கும்பாபிஷேகம், எப்போது குடமுழுக்கு…? ” என்று வினபுபவர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில்… இன்னமும் என்னென்ன திட்டங்கள், திணிப்புகள், வெளியேற்றல்கள், கையகப்படுத்தல்கள் மிச்சமிருக்கின்றன என்பதையோ அல்லது இவற்றிற்கெல்லாம் காரணகாரியங்கள் என்னவென்பதையோ நாம் அறியாத வகையில் அந்த பரமேஸ்வரனின் திருவிளையாடல்களிற்காக காத்திருப்போம்.
குறைந்த பட்சம் ஒரு வருட காலத்தினுள் நடைபெற்றிருக்க வேண்டிய கும்பாபிஷேகம் மூன்றாண்டுகளை பூர்த்தி செய்யவுள்ள நிலையில் இனி எப்போது நடைபெற்றாலும் பலாபலன்கள் ஒன்றே தான்.
இந்த நிலையில் 01.07.2025 ஆனி உத்தர நன்னாளில் தெற்கு வாயில் அம்பாள் சந்நிதிக்கான இராஜகோபுரத்திற்கான பூர்வாங்க கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு இன்னும் ஒரு வருடத்திற்கு குடமுழுக்கு இல்லை என்பதனையும் தொடர்ந்து சுவாமிகள் தற்காலிக பாலாலயத்தில் தான் என்பதையும் உணர்த்தியுள்ளது.
இராஜகோபுர திருப்பணிகளின் போது பாலஸ்தாபனம் செய்யப்பட வேண்டியது இல்லையெனவும் வடக்கு மற்றும் தெற்கு குபேரவாயில் இராஜகோபுரங்களை அமைத்து குடமுழுக்கு செய்த நல்லூர் எஜமானன் ஏற்கவே உணர்த்தியுள்ளார் என்பதும் அறிந்து கொள்ளலாம்.
உலகளாவிய காரை மக்கள் அறிந்து கொள்ளவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் காலம் உணர்த்திய உண்மைகளை எனது பார்வையில் இங்கே எழுதியுள்ளேன். இது யாருக்கும் சார்பானதோ அன்றி எதிரானதோ அல்ல. சொல்ல முடியாதவர்கள் சார்பிலும், அறிந்து கொள்ள வேண்டியவர் சார்பிலும் இதனை தெரிவித்துள்ளேன்.
காலம் இதனைத்தான் உணர்த்தியுள்ளது. காலம் இன்னும் பல விடயங்களை வெளிக்கொண்டு வரும்.
நன்றி.




