காரைநகர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள்…
அடிப்படை அறிவும் அரசியல் அறிவும்…. குறைந்த பட்சம் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவை…
காரைநகர் பிரதேச சபையில் 11 ஆசனங்களை கொண்ட சபைக்காக தேர்தலில் ஆறு சின்னங்களில் போட்டியிட்டவர்களில் ஐந்து சின்னங்களில் போட்டியிட்டவர்களிற்கு தலா இரண்டு ஆசனங்களும் ஒரு சின்னத்திற்கு ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றது அறிந்ததே.
காரைநகர் பிரதேச சபைக்கான தேர்தல் ஆறு வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு, அந்த ஆறு வட்டாரங்களிற்கான உறுப்பினர்கள் மக்கள் நேரடியாக வளங்கிய வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
ஆனாலும் இலங்கையில் நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறைமையின் ஊடாக கட்சிகள் அல்லது சின்னங்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மேலும் 5 ஆசனங்கள் வளங்கப்பட்டன. அதன் அடிப்படையில் மொத்தமாக உள்ள 11 ஆசனங்களில் ஐந்து கட்சிகள் தலா இரண்டு ஆசனங்களை பெற்றுள்ளன. ஒரு கட்சி ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது.
மொத்தமாக காரைநகர் பிரதேச சபையில் உள்ள 11 ஆசனங்களில் 6 ஆசனங்களை ஒன்றிணைத்து காரைநகர் பிரதேச சபையில் கூட்டாக ஆட்சி அமைக்க முடியும்.(50% வீதம் அல்லது அதற்கு மேல்).
அதாவது தலா இரண்டு ஆசனங்களை பெற்ற ஐந்து சின்னங்களில் இருந்து மூன்று சின்னங்கள் ஒன்றுணைந்தால் அந்த மூன்று கட்சிகளும் இணைந்து கொண்டு ஆட்சியை அமைக்க முடியும்.
ஆனாலும் இலங்கை தேர்தல் ஆணையகத்தின் பிரகாரம் ஆட்சியமைக்க கோரும் முதலாவது அமர்வில் வெற்றிபெற்ற வட்டார உறுப்பினர்கள் ஆறு பேர்கள், அத்துடன் விகிதாசார அடிப்படையில் கட்சிகள் பெற்ற உறுப்பினர்கள் 5 பேர்கள்… மொத்தம் 11 பேர்களில் 2/3 அதாவது 7.33 உறுப்பினர்கள் முதலாவது ஆட்சியமைக்கவுள்ள அமர்வில் பிரசன்னமாகியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 8 அங்கத்தவர்கள் பிரசன்னமாகவில்லையெனில் கோரம் அற்றதாக கருதி மேலும் ஒரு சந்தர்ப்பம் வளங்கப்படும்.
இரண்டாவது கூட்டத்தின் போதும் கோரம் இல்லையெனின் காரைநகர் பிரதேச சபை தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து 11 உறுப்பினர்களும் அர்த்தமற்றதாகி, அரச உத்தியோகத்தரான பிரதேச சபை செயலாளரின் செயற்பாட்டில் வளமையான பிரதேச சபை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
இதில் கவனிக்கப்பட வேண்டியதும், முக்கியமானதுமான ஒரு சிக்கலான விடயம் உள்ளது. அதாவது மேற்படி வெற்றி பெற்ற இரண்டு ஆசனங்களை கொண்ட ஐந்து சின்னங்களை சேர்ந்தவர்களில் மூன்று சின்னங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க முன்வந்தாலும் நான்காவது சின்னத்தை சேர்ந்த இருவர் முதலாவது ஆட்சியமைக்க கோரும் கூட்டத்திற்கு சமூகமளிக்க வேண்டும். கூட்டத்திற்கான கோரம் அடைவதற்காக.
எனவே மூன்று சின்னங்கள் ஒன்றுணைந்து ஆட்சியமைக்க ஒப்புக்கொண்டாலும் நான்காவது சின்னத்தை சேர்ந்தவர்களும் முதலாவது கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஆனாலும் ஆதரவு அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.(கோரத்திற்காக மட்டும்).
அடுத்ததாக எந்த மூன்று கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க முன்வரலாம் என்றாலும்…அதிலும் பிரச்சனை…. அதில் யார் தலைவர் என்பது…. பிரதேச தபையில் தலைமை பதவி வகிப்பவர் தவிசாளர் எனப்படுவார். மாநகர சபையில் தலைமைப்பதவி வகிப்பவர் மேயர் எனப்படுவார்.
இறுதியாக உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்ட போது காரைநகரில் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் தவிசாளராகவும், யாழ் மாநகர சபையின் மேஜராக சட்டத்தரணி வி. மணிவண்ணன் அவர்கள் யாழ் மாநகர சபையின் மேஜராகவும் பொறுப்பேற்றுருந்தனர்.
இதற்கு மேலும் குறிப்பாக கட்சிகளின் நிலைப்பாடுகள், காரைநகரில் கட்சிகளின் பெயரால் போட்டியிட்டு வட்டாரங்களில் வெற்றி பெறாத நிலையில் கட்சி தலைமையகத்தால் பிரேரிக்கப்பட்ட உறுப்பினர்கள் என்பவற்றில் கட்சிகளிற்குள்ளும், மற்றைய கட்சிகளுடன் இதுவரை ஏற்படாத உடன்படிக்கைகளும் இன்றுவரை சாத்தியமாகாத நிலையில்… 16.05.2025 வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையகம் கட்சிகளிடம் தமது உறுப்பினர்கள் தொடர்பான பிரேரணைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது. இரண்டொரு தினங்களில் கட்சிகள் தமது விகிதாசார உறுப்பினர்களை சமர்ப்பிக்க வேண்டும்.
– ஆட்சியமைக்க கோரும் கூட்ட தினத்தன்று குறைந்த பட்சம் 8 அங்கத்தவர்கள் பிரசன்னமாகியிருக்க வேண்டும்.
– ஆட்சியமைக்க மூன்று சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகளை சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஒன்றிணைய வேண்டும்.
– அந்த மூன்று கட்சிகளில் இருந்து ஒருவர் தவிசாளராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
இவை எல்லாம் சாத்தியமாகுமா…! காரைநகரில்…!….?
இவை எல்லாம் காரைநகரில் சாத்தியமானாலும் கட்சிகளின் கொள்கைகள், கட்சிகளிற்குட்பட்ட தனிநபர்களின் செயற்பாடுகள், தவிசாளருக்கான போட்டிகள், மத்தியில் ஆளும் கட்சியின் அரசியல் நகர்வுகள் என்பன கடைசிவரை கணிக்க முடியாத one day 20/20 cricket match போல கடைசி பந்திலும் கணிக்க முடியாத நிலையிலேயே காரைநகர் பிரதேச சபை ஆட்சியமைப்பு இருக்கும்.
ஆனாலும் காரைநகரில் அரசியலாகட்டும் ஆன்மீகமாகட்டும் எது நடந்தாலும் அது நன்மையானதாகவே அமையும். காரணம் காரைநகர் சிவ பூமி. சிவனே அனைத்தையும் தீர்மானிப்பான்.
மக்களிற்கு விளக்கம் அளிப்பதற்காகவே மேற்படி விபரம் எடுத்து வரப்பட்டுள்ளது. இதில் ஏதாவது திருத்தம் அல்லது மேலதிக விபரம் இருந்தால் comment பகுதியில் கூறவும். நன்றி.



