காரைநகர் வலந்தலை நடுத்தெருவில் கல்வியால் புகழ் பெற்று விளங்கிய குடும்பங்களில் சின்னத்தம்பி ஆறுமுகநாதன் (S.A. நாதன்) குடும்பமும் ஒன்று.

காரைநகர் வலந்தலை நடுத்தெருவில் கல்வியால் புகழ் பெற்று விளங்கிய குடும்பங்களில் சின்னத்தம்பி ஆறுமுகநாதன் (S.A. நாதன்) குடும்பமும் ஒன்று.

நடுத்தெருவில் 1960ம் ஆண்டுகளில் துரையப்பா குடும்பம், விதானை அருளையா குடும்பம், நாகலிங்கம் குடும்பம், சம்பந்தர்கண்டி நாகலிங்கம் குடும்பம் என ஒவ்வொரு குடும்பத்திலும் கல்வியில் சிறந்து விளங்கினார்கள்.

மேற்படி குடும்பங்களில் இருந்து கல்வித்தகமை பெற்று விளங்கியவர்கள் இலங்கை அரசின் அதிஉயர் பதவிகளை வகித்து வந்துள்ளனர்.

அந்த வகையில் எனது தாய் மாமனார்களாகிய பாலசுப்பிரமணியம், A. நடராசா, குமாரசாமி, மகாதேவன் ஆகியோர் இலங்கை அரசின் அமைச்சகங்களில் வேறு வேறு துறைகளில் அதிஉயர் பதவிகளில் பணியாற்றியவர்கள்.

S.A. நாதன் அவர்கள் ஆங்கில ஆசிரியராகவும் ஆங்கிலேய அரசின் அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கி வந்தார். அவருடைய மூத்த மகனான A.பாலசுப்பிரமணியம் இலங்கை அரசின் C.W.W. கன்னங்கரா கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் அவரது secretory ஆக பதவிவகித்து இலங்கை முழுவதும் இலவச கல்வி முறையை அறிமுகப்படுத்திய சிரேஷ்ட குழுவினர்களில் ஒருவராக பதவி வகித்தவர். அது மட்டுமன்றி தனது 60வது வயதில் ஓய்வு பெற்றதன் பின்னர், C.W.W. கன்னங்கரா போன்று தானும் ஒரு சட்டத்தரணியாக வேண்டும் என்று ஓய்வு காலத்தின் பின்னர் சட்டத்தரணியாகவும் அதுவும் அரச சட்டத்தரணியாகவும் 70 வயதுகளில் பணியாற்றியவர்.

இரண்டாவது மகனான A.நடராசா அவர்கள் பொருளியல் கல்வியில் காரை இந்துவில் கல்வி பயிற்றுவித்த காலத்தில் காரை இந்துவின் அதிபராக பொறுப்பேற்றார், அதே காலப்பகுதியில் அதே பொருளியல் துறையில் கலாநிதிப்பட்டத்துடன் காரை இந்துவிற்கு அறிமுகமான கலாநிதி ஆ.தியாகராசா காரை இந்துவின் அதிபராக பதவியேற்கிறார், கலாநிதி ஆ.தியாகராசா அவர்களிற்கு senior ஆகவும் அவரிற்கு முதலே அதிபராகவும் பொறுப்பேற்ற A.நடராசா அவர்களிற்கும் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களிற்கும் பனிப்போர் ஆரம்பமானது.

கல்வித்தகமை ரீதியில் கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் அதிபராக பொறுப்பேற்றதுடன் Aநடராசா உப அதிபராக பணிக்கப்படுகிறார். அதனை ஏற்றுக்கொள்ள முடியாத A.நடராசா அவர்கள் மூன்று மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு மாற்றலுக்கு விண்ணப்பிக்கின்றார். அதனையடுத்து தற்காலிகமாக சுழிபுரம் விக்ரோரியா கல்லூரிக்கு அதிபராக செல்கிறார். நான்கு மாதங்கள் மட்டும் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரிக்கு அதிபராக கடமையாற்றிய A.நடராசா அவர்கள் நிரந்தர அதிபர் பதவியை பெற்று யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி அதிபராக பணியேற்றார். 9 ஆண்டுகள் வைத்தீஸ்வரா கல்லூரியின் அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் A.நடராசா.

ஆனாலும் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களிற்கும் A.நடராசா அவர்களிற்கும் துறை ரீதியாக இருந்த புரிந்துணர்வு மற்றும் ஊர் பற்றுடனான வளர்ச்சியில் இருந்த அக்கறை காரணமாக கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள் அரசியலில் நுளைந்து பொருளாதார ரீதியில் தனது முன்மொழிவுகளை அரசியல் பிரச்சாரங்களிலும் அதற்குரிய வரைபுகளையும் எழுதி வழங்கியவர் A.நடராசா என்பதும், இலங்கை தமிழரசுக் கட்சியின் வெற்றி கொள்ள முடியாத தலைவராக விளங்கிய அ.அமிர்தலிங்கம் அவர்களை தோற்கடித்து UNP சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் பராளுமன்றத்தில் M.P ஆக பதவியேற்று தனது முதலாவது உரையை எழுதி வழங்கியவர் A.நடராசா அவர்கள் என்பதையும் தனது அன்றைய உரையில் பதிவு செய்தார்.

S.A நாதன் ஆசிரியர் அவர்களிற்கு 9 பிள்ளைகள். அவர்களில் மூவர் பெண் பிள்ளைகள். அவர்களில் ஒருவரே எனது தாயார் ஞானாம்பிகை.

ஐந்து ஆண்பிள்ளைகளில் கந்தசாமி என்பவர் தனது 18வது வயதிலே நெருப்புக்காய்ச்சலினால் உயிர் இழந்தார். அடுத்து குமாரசாமி. கல்வியிலே சிறந்து விளங்கி பல்கலைக்களகத்திற்கு மருத்துவ துறைக்கு தெரிவான போதும் பின்னர் விஞ்ஞான பீடத்தில் Agriculture துறையிலே பட்டப்படிப்பை முடித்து வெளியேறி பின்னர் கண்டி பரதேனியாவில் 30 ஆண்டுகளிற்கு மேலாக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றார்.

S.A. நாதனின் 8வது பிள்ளையாக பிறந்த ஒரு மகவிற்கு மகாதேவன் என பெயரிட்டனர். ஆனால் அந்த மகவு பிறந்து ஒன்றரை வயதில் அறிந்து கொள்ள முடியாத ஒரு நோயினால் உயிரிளந்தது. அதன் பின்னர் 9வதாக பிறந்த பிள்ளைக்கும் அதே பெயரை சூட்டுகிறார்கள்.

இதோ அவரே தான் இன்று 18.05.2026 தனது 84வது வயதில் கனடாவில் இறைபதம் எய்திய எனது தாய் மாமனார்களில் ஒருவரும் S.A.நாதன் ஆசிரியரின் ஒன்பதாவது புத்திரனும், இலங்கை இறைவரி திணைக்களத்தில் (Revenue Sri lanka) அதிஉயர் பதவிகளில் ஒரு படி குறைவாக Assistant controller ஆக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற பின்னர் கனடாவிற்கு இடம் பெயர்ந்து தனது 84வது வயதில் இறைபதம் எய்திய அமரர் ஆறுமுகநாதன் மகாதேவன் அவர்கள்.

கல்வியே ஒருவரிற்கு படிக்கல். கல்வியை தவிர வேறெதுவும் மனித முன்னேற்றத்திற்கு ஈடாகாது. காரைநகர் நடுத்தெருவில் கல்வியால் உயர்ந்த S.A.நாதன் ஆகிய எனது அம்மப்பாவின் நல்லெண்ணம், நற்சிந்தனை, அவர்களது பிள்ளைகளையும் கல்வியால் மிகப்பெரும் பதவிகளிற்கு கொண்டு சென்றது.

ஒருவரது கல்வி ஏழு பரம்பரைகளை வாழ வைக்கும் என்பதனை எனது குடும்ப பின்னணிகளை அறிந்து கொண்டும், இன்றும் 1960ம் ஆண்டு முதல் எனது முற்கூட்டிய மூன்று பரம்பரைகளை அறிந்தும் தெரிந்தும் ஒன்றாக வாழ்ந்தவர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.

அருளையா நமசிவாயம்பிள்ளை, முத்தையா சுப்பிரமணியம் வேலாயுதபிள்ளை ஆகியோரை சாட்சியாக வைத்து இதனை தெரிவித்துள்ளேன்.

ஊரிற்கு போனால் நான் எனது வேர்களை தேடி போகிறேன். நான் யார் என்பதை அறிந்து கொள்ள போகிறேன். நான் கனடியன் அல்ல. நான் கனடாவில் தற்காலிகமானவன். எனது வேர் காரைநகரில். அதுவும் நடுத்தெருவில். எனது சொந்த வீடாக நான் கருதும் வீடு S.A. நாதன் – அன்னம்மா தம்பதிகள் வாழ்ந்து ஒன்பது பிள்ளைகள் பெற்று வாழ்ந்த வீடு. நான் வாழும் வரை அந்த வீடு பணத்திற்காக விலை போகாது. அங்கே எனக்கு தெரிந்து எனது ஐந்து மூதாதையர்களின் ஆத்மாக்கள் வாழும் சொர்க்கம். அவர்களின் மரபணு இன்னும் என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்னும் சொல்வேன். காரணம் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன். நன்றி

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

திரு. ஆறுமுகநாதன் மகாதேவன் – மறைவு: 18.05.2026

Leave a Reply