நீலிப்பந்தனை அம்மன் கோயில் நண்பர்களின் கூடாரமாக 1980 களில் விளங்கியது. கோயிலில் ஒரு கூட்டம், வாசிகசாலையில் ஒரு கூட்டம், சங்கக்கடை கட்டிடத்தில் ஒரு கூட்டம், கேணிக்கட்டுகளில் கூட்டம் கூட்டமாகவும் செவ்வாய்கிழமைகளில் கூட்டுப்பிரார்த்தனைக்காக அடியவர் கூட்டம் என கூட்டமாக கூடி இருந்த இடம் நீலிப்பந்தனை அம்மன் கோயிலும் அதன் சுற்று வட்டாரமும். பழைய நண்பர்களை மீண்டும் மீண்டும் காணவும் கொண்டாடவும் நேரம் ஒதுக்கிக்கொண்டு நட்புகளை புதுப்பித்துக்கொள்வோம். வாழும் போதே நினைவு கொள்வோம்.
நீலிப்பந்தனை நண்பர்களால் மறக்க முடியாத நண்பன், மனங்களால் பேசி மனங்களால் வாழ்ந்த காலத்தில் இராசரத்தினம்(தெப்பா) அனைவரோடும் பழகியவர்.
ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அரசபணியில் பணிபுரிந்து, வடலியடைப்பு பிரதேசத்தில் தனது குடும்பத்துடன் அமைதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்துவரும் இராசரத்தினம் அவர்களை அவருடைய வீட்டிற்கு அவருடைய பிறந்த நாளின் போது சென்று சந்தித்ததுடன், மீண்டும் எனது வீட்டிற்கு அழைத்திருந்தேன். தனது நண்பருடன் வருகை தந்திருந்தார். விசேடமாக விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த போதிலும் கடந்த பல வருடங்களாக அசைவ உணவுகளை தவிர்த்திருப்பதாகவும் கூறினார்.














