ஶ்ரீலங்காவில் உள்ளூராட்சி தேர்தல் May 06ம் திகதி நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் என்பது மாநகராட்சி, நகராட்சி, பிரதேச சபைகளிற்கு சேவையாளர்களை அந்தந்த பகுதி மக்கள் அவர்களிற்கானவர்களை தெரிவு செய்வதாகும்.
தாம் வாழும் நகரத்தில் அல்லது கிராமத்தில் தமது சொந்த நலன்களை சீர் செய்யக்கூடிய ஊர்பற்றும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு கடந்த காலங்களில் பணி செய்தவர்களையும், தமது சொந்த நேரம், சொந்த பணம், சொந்தமான பொருட்களைக்கொண்டு மக்கள் நலன்களிற்காக உழைத்தவர்களை தெரிவு செய்து பிரதேச சபை ஊடாக மேலும் ஊரிற்கான பணியினை செய்வதற்காக அதிகூடிய சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக தெரிவு செய்யப்படுகின்ற தேர்தல் ஆகும்.
ஆனால் காரைநகரில் அரசியல் கட்சிகளை வலுப்படுத்தவும், இதுவரை காலமும் எந்தவொரு சிரமதானப்பணியிலும் ஈடுபடாதவர்களையும், மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்களையும், பக்கத்து அயல் வீட்டாரிடம் கூட நல்லெண்ணம் பெறாதவர்களையும், சாதி, சமய, பிரதேசவாதங்களை பொதுவழியில் பரப்பியவர்களையும், மாதா பிதா குரு தெய்வம் என எவருக்குமே மதிப்பளிக்காமல் சர்ச்சைகளிலும் தமது சொந்த நலன்களிற்காக மட்டும் ஊரில வாழ்ந்த சிலரை அதிரடியாக வேட்பாளர்களாக களம் இறக்குகிறார்கள் தென்னிலங்கை அரசியல் கட்சிகள்.
ஶ்ரீலங்கா நாட்டின் நலன்களை புதியதொரு பாதையில் முன்னெடுத்து செல்லவும் கடந்த கால பாவபுண்ணியங்களிற்கு பரிகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மூன்றாவது அணி ஒன்றை தெரிவு செய்து பாராளுமன்றத்தையும் அதிக அதிகாரங்களை கொண்ட அதிபர் பதவியையும் ஒப்படைத்து விட்டோம்.
உள்ளூராட்சி சபை தேர்தல் அரசியல் கட்சிகளிற்கான தேர்தல் அல்ல. ஊரையும் மக்களையும் நீங்கள் வாழும் உங்கள் தெருவையும் உங்களது வீட்டையும் உங்களது பிரச்சனைகளையும் நன்கு அறிந்தவர்களை தெரிவு செய்து உங்கள் ஊரிற்கும் தெருவிற்கும் உங்களிற்கும் சேவை செய்யபவர்களை தெரிவு செய்கின்ற தேர்தல் ஆகும்.
அனைத்து வல்லமையும் பொருந்திய அதிபரும், அவருடைய பராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளூராட்சி சபை மூலம் கடைநிலை மக்களிற்கும் ஶ்ரீலங்கா அரசின் உதவிகளும் நலன்களும் போய் சேர வேண்டுமாயின், ஶ்ரீலங்காவில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பிரதேச சபைகளிற்கு உரிய முறையில் உதவிகள் வழங்கப்படும் என நம்புவோம், அதனை நிறைவேற்ற ஊரையும் மண்ணையும் மக்களையும் நன்கு அறிந்தவர்களாலும் கடந்த காலங்களில் மக்களிற்காக சேவை புரிந்து நன்மதிப்பை பெற்றவர்களால் தான் முடியும்.
தென்னிலங்கை அரசியல் கட்சிகளிற்காக உழைப்பதற்கு அதிரடியாக களம் இறக்கப்படும் சிலரால் முடியவே முடியாது. காரைநகர் மக்கள் அரசியலையும் உங்கள் பிரதேச முன்னேற்றத்தையும் தெளிவாக புரிந்து கொண்டு May 06ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்களிப்பார்கள் என நம்புவோம்.
உங்கள் பிரதேசத்தில் நீங்கள் தெரிவு செய்யப்போகின்ற பிரதேச சபை உறுப்பினர் உங்களிற்காக இதுவரை என்ன செய்தார் என்பதையும் தெரிவு செய்யப்பட்டால் என்ன செய்வார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய வாக்குறுதிகளை செவிமடுங்கள். உங்கள் பிரதேசத்தில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளவருக்கு உங்களது பிரச்சனைகள் என்வென்றாவது தெரிகிறதா என்று அவதானியுங்கள்.
காரைநகர் மக்களிற்கு கடந்த காலங்களில் காரைநகர் அபிவிருத்தி சபை மூலமாக கோடி கோடியாக வெளிநாடுகள் வாழ் காரை மக்கள் கொட்டிக்கொடுத்தும் அந்த அமைப்பின் ஊடாக பொதுப்பணி செய்ய முடியாதவர்கள், அந்த அமைப்பில் அங்கத்தவராகவேனும் இல்லாதவர்கள், அப்படியானதொரு அமைப்பு இருக்கிறது என்றே இதுவரை தெரியாதவர்களால் காரைநகர் பிரதேச சபையின் ஊடாக எதனை செய்துவிட முடியும் என நம்புவீர்கள்..! சிந்தியுங்கள். உங்கள் ஓட்டு ஊரிற்கானதாக அமையட்டும், அரசியல் கட்சிகளிற்கானது அல்ல. இது அரசியல் கட்சிகள் தமது பலத்தை நிரூபிக்கின்ற தேர்தலும் அல்ல.



