மாநகர சபை, உள்ளூராட்சி, பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தயவு செய்து மக்களிற்கு தெரியப்படுத்துங்கள்… உங்களிற்கு ஏன் அவர்கள் வாக்கு போட வேண்டும் என்று…
மாறாக அவருக்கு வோட்டு போடாதீர்கள்… இவருக்கு வோட்டு போடாதீர்கள் என உங்கள் பிரச்சாரத்தை அடுத்தவரிற்கு எதிராக முன்வைப்பதால் நீங்கள் திராணி அற்றவர் என்கிற யதார்த்தம் புலனாகிறது.
உங்களது பலத்தினை தெரிவித்து உங்களிற்கான வாக்கினை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது ஊரிற்குள் ஊரிற்காக நல்லது செய்யவே நீங்கள் முயற்சிப்பதை மக்கள் சொல்லாமலே விளங்கிக்கொள்வார்கள். அதனைவிடுத்து உங்களையும் உங்கள் பொது சேவைகளையும் சொல்லி உங்களிற்கான வாக்கினை மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது என்று தெரிந்த நிலையில் மற்ற வேட்பாளரை எதிரானவராக சித்தரித்து , கற்பனையில் கதைகளை புனைந்து, வதந்திகளை பரப்பி…. பதவிக்காகவே போட்டியிடுகிறீர்கள் என்பதை பறைசாற்றுகிறீர்கள்.
சொந்த செயற்பாட்டிலும், மக்கள் பணியிலும், மக்களிடத்தே ஏற்கனவே பெற்றுள்ள நல்லெண்ணங்களையும், தன்னையும் தனது செயற்பாடுகளையும் முன்னிறுத்தி வாக்கு கேட்கின்ற ஒரு வேட்பாளரால் மட்டும் தான் ஊரிற்கும் மண்ணிற்கும் மக்களிற்கும் பணியாற்ற முடியும்.
ஓட்டப்போட்டியில் சேர்ந்து ஓடுபவனை தள்ளி விழுத்தி விட்டு தான் வெற்றி பெற்றவனாக சித்தரிக்க முனைபவர்கள் தமது சொந்த நலனிற்காகவே பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை.
பிரதேச சபை தேர்தலில் ஊரிற்காக பணி செய்ய ஊரவர்களையே பகைக்கும் அளவிற்கு அடுத்த வேட்பாளரை பற்றி அவதூறுகளை அள்ளி வீசுவதும், அள்ளி வீசுபவர்களும் எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதாக காரைநகரில் சரித்திரம் இல்லை.
தன்னையும் தனது திறமைகளையும் தெரியப்படுத்தி, தான் ஏன் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று மக்களிடத்தே தன்னைப்பற்றிய நம்பிக்கைத்தன்மையை புரிய வைக்க முடியாதவர்களால் என்றுமே அயல்வீட்டுக்காரர் வாக்கையே பெறமுடியாது என்பது யதார்த்தமான உண்மை.
உங்களைப்பற்றி சொல்லுங்கள். உங்கள் வாக்குகளை பெறமுயற்சி செய்யுங்கள். அடுத்தவனைப்பற்றி பேசி உங்களிற்கான வாக்குகளை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.



