காரைநகர் பிரதேச செயலர் (Divisional Secretariat Karainagar) Miss.N. றஞ்சனா அவர்களிற்கு “எனது ஊர் காரைநகர்” சஞ்சிகை மற்றும் இணையத்தளம் சார்பாக திறந்த மடல்.!
காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பானது.
Miss. N. றஞ்சனா
பிரதேச செயலர்
கனடாவில் இருந்து பதிவு செய்யப்பட்ட Media ஆக இயங்கி வரும் ” எனது ஊர் காரைநகர் ” சஞ்சிகை மற்றும் karainews.com சார்பாக எழுதிக்கொள்வது,
மதிப்பிற்குரிய கெளரவ பிரதேச செயலர் செல்வி.ந. றஞ்சனா அவர்களிற்கு ” காரைநகர் அபிவிருத்தி சபை ” தொடர்பாக எழுதிக்கொள்வது யாதெனில்…
காரைநகர் அபிவிருத்தி சபை கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக முழுமையாக இயங்க முடியாத நிலையில் உள்ளது. இதற்கு காரணமாக அதன் அங்கத்தவர்கள் இருந்தாலும், தங்களது செயலகம் தலையிட்டு கடந்த வருடத்தின் முற்பகுதியில் தற்காலிக நிர்வாகத்தை கொண்டு வந்த போதிலும் அந்த நிர்வாகத்தினால் “காரைநகர் அபிவிருத்தி சபை” நிர்வாகத்தை நடாத்துவதற்கு தங்களது பிரதேச செயலகத்தால் விதிக்கப்பட்ட சில நிபந்தனைகளை காரணம் காட்டி செயற்பட முடியாத நிலையினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்காரணங்களில் முக்கியமானவையாக… ஆறு மாதங்களிற்கு மட்டுமே தற்காலிக நிர்வாகம் தங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், நிதிகளை பெறுவதிலும் அவற்றை நிர்வாகத்தால் திட்டமிடப்பட்ட தேவைகளிற்கு வழங்குவதிலும் “விசாரணை” என்னும் பெயரில் தம்மால் செயற்பட முடியாத நிலைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் காரைநகர் அபிவிருத்தி சபையின் நிர்வாகம் மீண்டும் சுதந்திரமாக செயற்படுவதற்குரிய நடவடிக்கைகள் தங்களால் மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும் என்பதும், காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்போதைய தற்காலிக நிர்வாக சபையின் இராஜினாவை ஏற்று மீண்டும் ஒரு தற்காலிக அல்லது நிரந்தர நிர்வாக சபையினை அமைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தங்களிற்கு உள்ளது என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
“காரைநகர் அபிவிருத்தி சபை” ஏன் மீண்டும் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பதற்கான சில அத்தியாவசிய அவசர விடயங்களை தங்களது கவனத்திற்கு கொண்டுவரவும் விரும்புகிறேன்.
காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக காரைநகர் மாணவ மாணவிகளிற்கு வழங்கப்பட்டு வந்த கல்விக்கான உதவிகள் கடந்த ஒரு வருட காலமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் 9 மாணவர்களிற்கான மாதாந்த கொடுப்பனவுகளை தனது சொந்த பயம் காரணமாக தானே (நிர்வாகத்தின் அனுமதி இன்றி) நிறுத்தியதாக பொருளாளர் அறியப்படுத்தியுள்ளார்.
நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு அன்றைய நிலையில் அவசர உதவி கருதி வழங்கப்பட்ட நிதியானது ஒரு வருடம் கழிந்த நிலையிலும் இன்னமும் வழங்கப்படவில்லை.
வெளிநாடுகளில் வதியும் முன்னாள் காரைநகர் மக்களால் மற்றும் அமைப்புக்களால் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்த அத்தியாவசிய அவசர தேவைகளிற்கான பல கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினால் காரைநகர் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிரந்தர வைப்பில் இருந்த கிடைக்கப்பெறும் வட்டி பணம் தேவையிருந்தும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தால் பெறமுடியவில்லை.
கனடா காரை கலாசார மன்றத்தினால் கடந்த வருடம் பாடசாலை மாணவர்களின் உடனடி தேவை கருதி வழங்கப்பட்ட பணம், மற்றும் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணம் என்பனவும் ஒரு வருடங்களை கடந்த நிலையிலும் தகுதி பெற்ற மாணவ மாணவிகளை சென்றடையவில்லை.
முன்பள்ளி ஆசிரியர்களின் நலன் கருதி பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கம் நிரந்தர வைப்பில் இட்ட பணத்திலிருந்து கிடைக்கப்பெறும் வங்கி வட்டிப்பணம் தகுதி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களை சென்றடையவில்லை. அது மட்டுமன்றி பிரான்ஸ் வாழ் காரை மக்கள் முன்பள்ளிகளின் முன்னேற்றத்திற்காக வழங்கிய அண்ணளவிலான ஒரு மில்லியன் ரூபா காரைநகர் அபிவிருத்தி சபை இயங்க முடியாத நிலையில் தனிப்பட்ட வகையில் தனியொருவரிடம் தங்கியுள்ளது.
காரைநகர் அபிவிருத்தி சபையின் நிர்வாகம் இயங்கினால் மட்டுமே அந்தந்த நிதிகளை வழங்கிய அமைப்புக்கள் அல்லது தனியாரின் கோரிக்கைகளை ஏற்று உரிய வகையிலும் நம்பிக்கை உத்தரவாதங்களிற்கும் ஏற்ற வகையில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட விடயங்களிற்கு அந்த நிதிகளை வழங்கவும் காரை மக்கள் பயனடையவும் முடியும்.
கனடா காரை கலாசார மன்றமும் கடந்த ஒரு வருட காலமாக இயங்க முடியாத நிலையிலும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் முந்தைய நிர்வாகங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் பெயரில் வைப்பில் இட்ட நிதியும், மன்றம் இயங்காத நிலையிலும் மன்றத்தின் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் நிதியினையும் கல்விக்கான தேவையறிந்து, கனடா காரை கலாசார மன்றத்தின் 28.04.2025 க்கு முன்னைய நிர்வாகங்கள் பொதுச்சபையின் அனுமதியோடு அந்த நிதிகளை எதற்காக வைப்பில் இட்டார்களோ அதில் இருந்து கிடைக்கப்பெறும் வங்கி வட்டியினை எதற்காக பயன்படுத்த தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பி வைத்தார்களோ அவற்றிக்கு உரிய நேரத்தில் வழங்க முடியும். (65 இலட்சம் ஹட்டன் நாஷனல் வங்கி).
ஏற்கனவே கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த கால நிர்வாகங்களால் தீர்மானிக்கப்பட்டு பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களிற்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்த நிதி கடந்த 14 மாதங்களாக வழங்கப்படவில்லை. அந்த மாணவர்களின் நிலமை என்னவென்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.
காரைநகர் முன்பள்ளி ஆசிரியர்கள் பலரும் அடிப்படை வேதனத்தற்கும் குறைந்த நிலையில் பணியாற்றிக்கொண்டிருந்தாலும் சில அமைப்புக்களும் தனியார் சிலரும் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாகவும், காரைநகர் அபிவிருத்தி சபையின் பெயரில் வைப்பில் உள்ள நிதியிலிருந்து பெறப்படும் வங்கி வட்டியில் இருந்தே பெற்று வந்தார்கள். ஆனால் அவை அனைத்தும் கடந்த ஒரு வருடமாக இடைதிறுத்தியுள்ள தற்காலிக நிர்வாக சபையின் தலைவர் திரு.வி.ஹம்சன், செயலாளர் திரு.பரந்தாமன், பொருளாளர் திரு.சின்னத்தம்பி ஆகியோர் தங்களால்(பிரதேச செயலகத்தால்) பிறப்பிக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட வகையிலான நிர்வாக செயற்பாடுகளால் முன்னெடுக்க முடியாது உள்ளது அல்லது தமக்கு பயமாக உள்ளது என தெரிவித்துள்ளார்கள்.
காரைநகர் அபிவிருத்தி சபையின் அங்கத்தவர்களால் ஏற்பட்டுள்ள பிணக்குகளிற்கு தீர்வாக தற்காலிக நிர்வாகத்தை கொண்டு வந்த தங்களது(பிரதேச செயலகத்தின்..) முயற்சி அன்று வரவேற்கத்தக்கதாக இருந்த போதிலும் அனுபவமும் திறமையும் இல்லாத நிலையில் திரு.வி.ஹம்சன் தலைமையிலான தற்காலிக நிர்வாகம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காரணங்களை மட்டுமே முன்வைக்க முடிந்துள்ள நிலமையில், தற்காலிக நிர்வாகத்தின் இராஜினாமை ஏற்று அல்லது அதனை கலைத்து அனுபவமும் திறமையும் தங்களது வழிகாட்டலின் பெயரில் செயற்படத்தக்க வகையிலும் சுயாதீனமாக இயங்கும் வகையிலும் உடனடியாக காரைநகர் அபிவிருத்தி சபைக்கான புதிய நிர்வாகத்தை தங்களது செயற்பாட்டின் ஊடாக கொண்டு வரவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
காரைநகர் அபிவிருத்தி சபையின் கடந்த கால மற்றும் தற்போதை நிதி நிலமைகளையும் செயற்பாடுகளையும் தங்களது அரச இயந்திரத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கிவரும் நிலையில், அனைத்தையும் மேற்பார்வை செய்யவும், பரிசீலனை செய்யவும் அனைத்து வகையிலும் கட்டுப்படுத்தவும், செயற்படுத்தவும், சட்டத்திற்கு முரணாக செயற்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் தகுதி இருந்தும்
“காரைநகர் அபிவிருத்தி சபை” இன்னும் ஏன் இயங்க முடியாத நிலையில் உள்ளது என்பதை உணர்ந்து கவலையடைகிறோம்.
காரைநகரில் தற்போது வாழும் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்களில் தகுதியானோரிற்கு உதவியளிக்கவும், மண்ணை வளப்படுத்தவும் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட முன்னாள் காரைநகர் மக்கள் உலகின் பல நாடுகளிலும் தயாராக, தற்போதைய அரசின் செயற்பாடுகளை ஆர்வமுடன் கவனித்து வருகிறார்கள்.
காரை மண்ணிற்கு அரச கடமையாற்ற வந்தவர்கள் அன்றும் இன்றும் என்றும் கடமைகளிற்கும் அப்பால் சேவையாளர்களாகவும் மாறி, காரை மக்களின் மனங்களில் நிரந்தரமாக பதிந்து கொண்டவர்கள் தான் பலர். அந்த வகையில் தங்களது சேவையினையும் எதிர்பார்த்து காத்திருக்கும் முன்னாள் மூன்று இலட்சம் காரை வாசிகளில் நானும் ஒருவன்.



“ எனது ஊர் காரைநகர் ” karainews.com
தொகுப்பாளர்: தீசன் திரவியநாதன்
10.07.2025



