கேட்டதும் கிடைத்தது….வியாவிலை சேர்ந்த மாணவிக்கான பல்கலைக்கழக கல்விக்கான உதவி..!
நேற்று முன்தினம் 07.07.2025 அன்று எனது முகநூலில் எடுத்து வரப்பட்ட அறிவித்தல்….. காரைநகர் வியாவில் ஐயனார் கோயிலடியை சேர்ந்த மாணவி ஒருவரிற்கு கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்பதற்கான உதவிகோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
முகநூலில் வேண்டுகோள் எடுத்து வரப்பட்ட ஒரு மணி நேரத்தில்( 54வது நிமிடம்) சிங்கப்பூரில் இருந்து அன்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். ஒரு சில மணி நேரங்களில் மாணவியின் முழுமையான விபரங்கள் மற்றும் வங்கி கணக்கிலக்கம் என்பன வியாவில் ஐயனார் ஆலய அறங்காவலர் திரு.மகாராணி சோமசேகரம் அவர்களை தொடர்பு கொண்டு பெறப்பட்டு வளங்கப்பட்டதுடன், அன்றைய தினமே நான்கு மணி நேரத்தில் மாணவிக்கான இந்த மாதத்திற்கான 15,000 ரூபாய்கள் வங்கியில் இடப்பட்டதுடன், அடுத்து வரும் ஒரு வருடத்திற்குரிய பணம் மாதாந்தம் 5 ம் திகதி மாணவியின் வங்கிக்கணக்கில் இடப்படும் வகையில் Standing order போடப்பட்டுள்ளதையும் உறுதி செய்து சிங்கப்பூர் அன்பர் உத்தரவாதத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.
பலகாடு காரைநகரை சொந்த இடமாக கொண்டவரும் சிங்கப்பூரில் தொழில் புரிந்து வருபவருமான அன்பர் ஒருவரே இந்த உதவியினை ஒரு சில மணி நேரங்களில் மனப்பூர்வமாக ஏற்று வழங்கியுள்ளார். கல்விக்கான உதவியை பெறும் மாணவிக்கு உதவி வளங்கும் அன்பரின் விபரமும், உதவி வழங்கும் அன்பருக்கு உதவி பெறும் மாணவியின் விபரமும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
மேற்படி இந்த கல்விக்கான உதவியை பெற்றுக்கொடுக்க “எனது ஊர் காரைநகர்” ஊடாக தொடர்பு கொண்ட வியாவில் ஐயனார் ஆலய அறங்காவலர் திரு. மகாராணி சோமசேகரம் அவர்களிற்கும், கிடைக்கப்பெற்ற தகவல்களை உறுதிப்படுத்தவும் மேற்கொண்டு உரிய நேரத்தில் மாணவி பெற்றுக்கொள்ள ஒழுங்குகள் செய்த திரு.கணபதிப்பிள்ளை பூவன் அவர்களிற்கும், அனைத்திற்கும் மேலாக எனது முகநூலில் வெளியான தகவலைப்பெற்று உடனடியாக முழுமையாக உதவ முன்வந்த சிங்கப்பூரில் வதியும் பலகாடு காரைநகரை சேர்ந்த அன்பர் அவர்களிற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
” எனது ஊர் காரைநகர் “
தீசன் திரவியநாதன்.
09.07.2025




