உண்மையுடனும் ஊர் நல்லெண்ணத்துடனும் காரைநகர் மக்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன் அடுத்து என்ன செய்யலாம்…!
உண்மையுடனும் ஊர் நல்லெண்ணத்துடனும் காரைநகர் மக்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன் அடுத்து என்ன செய்யலாம்…!


காரைநகர் நீலிப்பந்தனை கிராம மக்களின் கடந்த 60 ஆண்டுகால மாரிகால வாழ்க்கை சூழ்நிலை மாறவேண்டும், மாரிகாலங்களில் டிசம்பர் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் நீலிப்பந்தனையூடான போக்குவரத்து வெள்ளத்தினால் தடைப்படுவதும் இக்காலப்பகுதியில் வெள்ளம் தங்கியிருப்பதால் சுகாதாரசீர்கேடுகள் ஏற்படுவதுவதையும் கருத்தில் கொண்டு கடந்த பத்து ஆண்டுகளிற்கு மேலாக நேரடியாக களத்தில் நின்று பலவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளேன்.
காரைநகர் பிரதேச சபையின் ஊடாகவும் அரசியல் கட்சிகளின் ஊடாகவும் இப்பகுதி மக்கள் ஊடாகவும் பலவித முயற்சிகளை மேற்கொண்டேன். இந்த 60 ஆண்டுகால வெள்ள பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர கடந்த இரண்டு தவணை காரைநகர் பிரதேச சபை தேர்தல் காலங்களில் கட்சிகளை வேட்பாளர்களை முழுமையாக நம்பி ஆதரவு வழங்கினேன்.
அது மட்டுமன்றி அவர்களிற்கு தேவையானளவில் இப்பகுதி மக்களிடம் இருந்த வேறுபாடுகளை களைந்து ஒருமித்த வகையில் மருதடி- நீலிப்பந்தனை வீதியை(அண்ணளவாக 750M) புனரமைக்கவும், நீலிப்பந்தனை- மல்லிகை சேவகர் கோயில் வீதியில் வடிகால் அமைப்பு மேற்கொள்ள ஊர்மக்கள் ஒருமித்தளவில் ஏகோபித்த ஆதரவுடனும் பொதுக்கூட்டம் மூலமும் நூற்றுக்கும் மேற்பட்ட இப்பகுதி மக்களை கூட்டியும், இன்றைய தவிசாளர் திரு. கோவிந்தராஜன், பிரதேச சபை செயலாளர் திரு. சுதர்சன், இப்பகுதி பிரதேச சபை உறுப்பினர் திரு. சிவகுமார்(ஆனந்தன்) மற்றும் இப்பகுதி கிராமசேவகர் திரு.மயூரன் ஆகியோர் கலந்து கொள்ளவும் 15.02.2026 அன்று நடைமுறைக்கு சாத்தியமல்லாத ஒரு பொதுக்கூட்டத்தை கூட்டி, நடைமுறைக்கு சாத்தியமான ஒரு முடிவை எட்டியிருந்தோம்.
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் திரு. கோவிந்தராஜன், பிரதேச சபை செயலாளர் திரு.சுதர்சன், இப்பகுதி பிரதேச சபை உறுப்பினர் திரு.சிவகுமார்(ஆனந்தன்), கிராமசேவகர் திரு.மயூரன் ஆகியோர் முன்னிலையில் அன்றைய தினம் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் மற்றும் இப்பகுதி பிரதேச உறுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட இருபது இலட்சம் ரூபாய்கள் மொத்தம் ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபா இந்த மருதடி- நீலிப்பந்தனை வீதி புனரமைப்பிற்காகவும் நீலிப்பந்தனை – சடையாளி வரையான வடிகால் அமைப்பிற்காக ஒதுக்குகிறோம் என்றும் இறுதியான முடிவு என்றும் அறுதியான முடிவு என்றும் ஒன்றுக்கு பத்து தடவைகள் கூறியிருந்தார்கள்.
அது மட்டுமன்றி அன்றைய பொதுக்கூட்டம் நீலிப்பந்தனை அம்பாள் சனசமூக நிலையத்தின் சார்பில் நடைபெற்ற போது நேரடியாக கலந்து கொண்டு ஒன்றுக்கு பத்து தடவைகள் திரும்பத்திரும்ப கேட்டேன்.
“பிரதேச சபைக்கு புயலால் ஒதுக்கப்பட்ட ஒரு கோடி 20 இலட்சம் ரூபா பணம் மற்றைய பிரதேச சபை உறுப்பினர்களின் தீர்மானம் இன்றி இத்திட்டத்திற்காக ஒதுக்குவதாக கூறுகிறீர்களே பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையில்லையா..? என்று…
அதற்கு பிரதேச சபை தவிசாளர் திரு.கோவிந்தராஜன் மற்றும் செயலாளர் திரு. சுதர்சன் ஆகியோர் ‘தேவையில்லை, சக்கலாவோடை மற்றும் நீலிப்பந்தனை நிலவரங்களை கருத்தில் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் தவிசாளர் தனித்து முடிவெடுக்கவும் முழு நிதியினை இத்திட்டத்திற்காக ஒதுக்கவும் தவிசாளருக்கு உரிமை உண்டு என கூறினார்கள்.
ஆனாலும் திரும்பத்திரும்ப இதனை நான் கேட்ட போது ஒரு கட்டத்தில் பார்வையாளர்களில் ஒருவராக இருந்த இப்பகுதியை சேர்ந்த திரு.வைத்திலிங்கம் என்பவர் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு “சொல்வது விளங்கவில்லையா… பொத்திக்கொண்டு இரும்…” என்று கூறியிருந்தார்.
அது மட்டுமன்றி பொதுக்கூட்ட முடிவிலும் அன்றைய பொதுக்கூட்டத்தின் சாராம்சமாக என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்றும் அதனை பிரதேச சபை செயலாளர் திரு. சுதர்சன் அவர்கள் தனது வாய்மூலமாக திரும்பவும் சொல்லுமாறும் கேட்டுக்கொண்டேன்.
அதன் அடிப்படையில் செயலாளர் திரு. சுதர்சன் அவர்கள் மருதடி-நீலிப்பந்தனை வீதி (750M), மற்றும் நீலிப்பந்தனை – சடையாளி வரை வடிகால் அமைப்பு செய்யவும் பிரதேச சபையின் டிப்யா புயல் காரணமாக ஒதுக்கப்பட்ட ஒருகோடி இருபது இலட்சம் ரூபாய்களும், இப்பகுதி பிரதேச சபை உறுப்பினர் திரு.செல்லையா சிவகுமார்(ஆனந்தன்) அவர்களிற்கு ஒதுக்கப்பட்ட இருபது இலட்சம் ரூபாய்கள் மூலமாக உடனடியாக பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் இதில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது எனவும் பொதுக்கூட்டத்தின் சாராம்சமாகவும் செயலாளர் திரு. சுதர்சன் அவர்கள் மூலமாக கூறச்சொல்லி உறுதிப்படுத்திக்கொண்டதுடன் வீடியோ மூலமாக பதிவும் செய்யப்பட்டது.
ஆனால் இதுவரை (15.02.2026 முதல் 15.09.2026) கடந்த ஏழு மாதங்களாக இதற்கான எந்த துரும்பும் இதுவரை அசைக்கப்படவில்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
தவிசாளர் திரு.கோவிந்தராஜன் அவர்கள் கொடுத்த வாக்கையும் மக்களிற்கான பணிகளையும் அரசியலில் தொலைத்து விட்டார். மொத்தமாக மக்களை நம்பவைத்து மடையர்களாக்கியுள்ளார்கள் என்பதும் கேட்பதற்கு திராணியற்ற வகையில் இன்னமும் சில மாதங்களில் அடுத்த மாரி மழை மூலம் மீண்டும் அதே நிலமையை எதிர்நோக்க இப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றார்கள்.
தவிசாளர் திரு.கோவிந்தராஜன் அவர்களே பிரதேச சபை செயலாளர் திரு. சுதர்சன் அவர்களே தயவாக கேட்டுக்கொள்கிறேன், 15.02.2026 அன்று உங்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளிற்காக இப்பகுதி மக்களிடம் மன்னிப்பு கோருங்கள். உங்களை நம்ப வைத்து எங்கள் அரசியலை நகர்ரத்தியிருக்கிறோம் என்றும், உங்களை நம்ப வைத்து பேக்காட்டி வேறு தேவைகளை முடித்துக்கொண்டோம் என்றும், நாங்கள் சொன்னவை எல்லாம் பொய் என்றும் அதே மக்களிடம் நேரில் சென்று தெரிவியுங்கள். அன்றைய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட 75க்கும் மேற்பட்ட இப்பகுதி மக்களின் விபரங்களை தந்து உதவுகிறேன், நீங்கள் அவர்களிடம் நேரில் சென்று… உங்களை ஏமாற்றி விட்டோம் என்றும் அதற்காக மன்னிப்பு கோருகிறோம் என்றும் இனிமேலும் இது போன்று நம்ப வைத்து கழுத்தறுக்க மாட்டோம் என்று நீலிப்பந்தனை அம்பாள் ஆலயத்தில் தேங்காய் அடித்து உங்கள் பாவங்களை கழுவிக்கொள்ளுங்கள்.
தவிசாளர் திரு.கோவிந்தராஜன் அவர்களே அரசியலுக்காக தேவையற்ற வாக்குறுதிகளை வழங்குவதும் போத்திலோடு வருபவர்களிற்கு முன்னுரிமை வழங்கி வாக்குறுதிகளை மறந்து விடுவதும் உங்களிற்கு வழக்கமாகிவிட்டது போலும். பொறியாக போத்தில் வைத்தவர்களிடம் சரண்டைந்து விட்டீர்கள்.
பொன்னாலை பாலத்திற்கு அப்பால் அரசியல் நடாத்துபவர்கள் கூட காரைநகரில் கட்சி பேதமின்றி மக்களிற்கான அரசியலை நடாத்துவதற்கு வெளிநாடுகள் வாழ் காரை மக்கள் கட்சி பேதமின்றி ஆதரவு வழங்குகிறார்கள். ஆனால் நீங்களோ மக்களை மடையர்களாக்கி பதவிகளிற்காக கதிரையில் குந்திக்கொள்ளவதையே இலக்காக கொண்டுள்ளீர்கள்.
செய்ய முடியும் என்றால் மட்டும் சொல்லுங்கள். கண்முன்னே நிதி ஒதுக்கப்பட்டு, மக்களிற்கு மக்கள் முன்னே உங்களது அரச பிரதிநிதி செயலாளர் முன்னிலையில் வாக்குறுதி வழங்கப்பட்டு, அடுத்த சில நாட்களிலேயே பணி ஆரம்பிக்கப்படும் எனவும் அன்றைய தினமே செயலாளரும் தாங்களும் அந்த வீதிகளை சுற்றிப்பார்த்து படம் எடுத்துக்கொண்டதுடன் ஊர் மக்களை மட்டுமன்றி உங்களது வார்த்தைகளையும் தங்களது வாக்குறுதிகளையும் வெளிநாட்டவர்களையும் நம்ப வைத்தீர்களே நீங்கள் பலே கில்லாடி தான்.
இதற்கு மேலும் என்ன காரணங்கள் கண்டு பிடிக்கப்போகிறீர்கள்…? மேலே என்னால் சொல்லப்பட்ட எவற்றிலாவது இல்லாததை நான் சொல்லியுள்ளேனா…!
உண்மைக்கும் நேர்மைக்கும் ஊர் மக்களிற்காகவும் கட்டுப்பட்டு காத்திருந்து காத்திருந்து நீங்கள் நம்பவைத்து ஏமாற்றிவிட்டதை அறிந்து கொண்டபின்னரும் அமைதியாக செல்வதற்கு ‘எனது ஊர் காரைதகர்’ ஒன்றும் அரசியல்வாதியும் அல்ல அரசியலும் செய்யவில்லை.
கண்ணுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட ஒருகோடி இருபது இலட்சம் நிதியை கைவிட்ட உங்களால் புதிதாக இனிமேல் எதனையும் வரவழைத்து சாதித்துவிட முடியாது. தயவு செய்து உங்களது தவிசாளர் பதவிக்காலமான 16 மாதங்கள் நிறைவில் கதிரையை காலி செய்துவிட்டுச்செல்லுங்கள்.
காரைநகரில் அரசியல் செய்பவர்களிற்கு நேர்மையும் உண்மையும் முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். காரைநகரில் சுத்துமாத்து அரசியல் செய்பவர்களை கடவுளே தண்டித்த வரலாறுகளை அறிந்து கொள்ளுங்கள். நன்றி.

Leave a Reply
You must be logged in to post a comment.